இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,
ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை
கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.
என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.
பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.
தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!
பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,
(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,
என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு(?) வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,
இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.
காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,
ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),
கூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.
அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,
எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்
என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்
இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.
அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)
இந்த வலைத்தளத்தின் அத்தியா"வசிய"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:
(தி.ப.இ. :- திருடப் பட்ட இடம்)
1] தலைப்பு- காலப்பெருங்களம்.
தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்
சுப்பிரமணியத்தின் வீடு.
2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.
தி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.
இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.
(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!)
ஆதித்தன்
27-01-2009.
கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?
போ.....
மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்!
ஆனாலும்......,
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும்.
போகட்டும்!
மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"
விதி வந்துந்தி எமை
வேறாக்கி....,
இன்னொரு கை
உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?
நான் 'பெரிசாய்'
நொந்தொடிந்து போகேன்!?
நெகிழேன்!?
இருந்தாலும்......
சின்னக்கண்கலக்கம்,
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்.
நெற்றிச் சுருக்கு விழும்,
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்!
பார்வைத்திரை நடுங்கும்.
'சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்'
சிற்றின்பப்பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்.
நீ போடி.
நன்றி:
கவிஞர் திருக்குமரன்.
"திருக்குமரன் கவிதைகள்".
என் வானிலே.....
1:03 PMஎங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.
பெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.
பருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். "பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்." என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.
வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.
பௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்
அந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ!!
வானம் என்றால் விமானம் இல்லாமலா? சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. "நாங்கள் எப்ப பிளேனில போவம்?" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.
எவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது?
அன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சே!இவ்வளவுதானா? இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.
எவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.
ஆதித்தன்.
09-01-2009
நூலின்றி அமையாதென் வாழ்வு - 3
9:01 AM
"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"
என்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல! காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு
கீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.
விகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் "அம்பேத்கர்" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்
நடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.
கல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.
உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்
கண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.
பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
என்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்
அம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,
"அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்"
குடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது
இந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.
அரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.
"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"
சுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,
காலம்காலமாக "நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்" என்று அவர்களுக்கு இருந்த
மூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.
அஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.
அருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.
"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை"
ஆதித்தன்
07-01-2009.
பெருங்கோயிற் பயணம்
6:04 PM
நானும் நிமலபிரகாசனும் திடீரென்று நிச்சயித்த பயணம் அது! பெங்களூர்த்தரிப்பிடத்தில் எட்டுமணி போல வந்துசேர்ந்தோம். வண்டிக்கு இன்னும் நிறைய நேரம் இருந்தது.நிமல் சென்னையில் ஒரு மடிக்கணணி வாங்கியிருந்தான். ஒரு காவல் அதிகாரி மடிக்கணணியை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
அவர் திருமுகம், விஜயகாந்த் மாதிரி இருந்ததா இல்லை அர்ஜுன் மாதிரி இருந்ததா என்பது இருட்டில் சரியாக தெரியவில்லை.
தமிழ்நாட்டு சொகுசுப்பேரூந்து வழமை போல் தாமதமாக வந்து, இனமானம் காத்தது. பேரூந்தில் இரவு வல்லவனுக்கு வல்லவன் படம் போட்டார்கள். தொடங்கிக் கொஞ்சநேரத்திலேயே ரஜினிகாந்த் நிமலுக்கு தூக்கமாத்திரைகொடுத்துவிட்டார். ராதிகா ரஜினிக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கையில்தான் எனக்கு கொட்டாவியே வந்தது.
கண்விழித்த போது மலைக்கோட்டைதெரிந்தது. திருச்சிக்குள் நுளைந்து தஞ்சையை நோக்கி விரைந்தது பேரூந்து.கசிந்துவரும் காவிரிக்கே இந்தப் பசுமை என்றால், காவேரி நிரம்பிவந்த காலங்களில் தஞ்சை எப்படி இருந்திருக்கும்?
சங்ககாலத்தில் கட்டப்பட்டதைப் போன்ற ஒருவிடுதியில் பைகளைவைத்து குளித்துவிட்டு, தஞ்சைபெரிய கோயிலுக்கு நடந்தோம். நாம் எங்கே இருக்கிறோம் கோயில் எங்கே இருக்கிறதென்று கூடதெரியாது.வழிவிசாரித்து போய் சேர்வதில் என்னவோ ஒரு சுவாரசியசொர்க்கமே இருந்தது.
என்னவென்று சொல்ல? அந்தக்கோபுரத்தைக் கண்டவுடன் ஏற்பட்ட உணர்ச்சிவெள்ளம் வார்த்தைக்கு அப்பாற்பட்டது. நிச்சயமாக முழுவதுமான பக்தியின்பாற் பட்டதல்ல! பத்துவருடங்களுக்குபின் 2002ல் சமாதானம் வந்தபோது ஊருக்குப்போனபோது உள்ளெழுந்த அதே உணர்ச்சி!
வாளை உருவலாம் என்றுதான் பார்த்தோம்! அதற்கு வழியில்லாததால் புகைப்படக்கருவியை உருவிக்கொண்டு கோயிற்பிரவேசம் செய்தோம்.
2010ம் ஆண்டோடு தஞ்சைப்பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் முடிவடையப்போகின்றன. தமிழர்களின் கட்டிடக்கலையின் எழுச்சியை இன்றும் நிரூபித்திக்கொண்டிருக்கும் கருங்கல்காவியம். உலகில் எங்கிருந்து எண்ணினாலும் தமிழனாய்ப் பிறந்த பெருமையுணர்ச்சி உந்திவரத் தலைநிமிரச்செய்யும் தீப்பிளம்பு!
நந்திமண்டபத்தை மட்டும் பிற்கால நாயக்கமன்னர்கள் கட்டினார்கள் என்றும்,
நந்தியோடு சேர்த்து முழுமண்டபமும் நாயக்கர் காலத்தது என்றும் இருவேறுபட்ட கருத்துக்கள் உலாவுகின்றன. நந்தியை வணங்கிவிட்டு
கோயிலுக்குள் அடிவைத்தோம். எங்குபார்த்தாலும் சிற்பநுணுக்கங்கள்!
கால்வைக்கும் படியில்கூட கலைவழிகிறது. "பெருவுடையார்" என்று சொல்லப்படும் மகாலிங்கத்தின் அழகும் பிரம்மாண்டமும் மனத்தை ஈர்க்கின்றன.
தமிழ்நாட்டு அறநிலைத்துறையிடமில்லாமல், இந்தியத் தொல்லியல்துறையின்
பொறுப்பின் இருப்பதால், கோயில் கோயிலாக இருக்கிறது.
தன் இலட்சியங்களை அருள்மொழிவர்மன் எப்போதும் பெரிதாகவே வைத்துக்கொண்டான். கம்பன் சொல்லுகின்ற "சிறியன சிந்தியாதான்" என்ற
சொற்றொடர் அருள்மொழிக்கே நன்றாய்ப்பொருந்துகிறது. தன் உயர்ந்த இலட்சியங்களால்தான் அவன் வரலாற்றில் இன்றைக்கும் ராஜராஜசோழனாக ஒளிவீசி, எங்கள் நெஞ்சுக்குள் வாழ்கின்றான். அவனுடைய உயர்ந்த இலட்சியங்களில் ஒளிர்ந்த இலட்சியமாக தஞ்சைப்பெருங்கோயில் மிளிர்கிறது.
தமிழர் சிற்பக்கலையின் முழுப்பெரும்வெளிப்பாடான இக்கோயில், ராஜராஜேசுவரம், பெருவுடையார்கோயில், தட்சிணமேரு என்று பலபெயர்கொண்டு அழைக்கப்படுகிறது. தமிழர்தம் பெருமையைப்போல
உயர்ந்தோங்கி நிற்கின்ற விமானம், சிற்பசௌந்தர்யங்களைக் காட்டி உள்ளம் கவர்கள்வனாகிறது. விமானத்தைக்கட்டியபின் லிங்கத்தை உள்ளே கொண்டுபோக முடியாதாகையால், லிங்கத்தை உள்ளேவைத்து பின்பே விமானத்தைக்கட்டினார்கள். லிங்கப்பிரதிட்டையின்போது ஏதோ சிக்கல் ஏற்பட்டதாகவும், ராஜராஜசோழரின் குருவான கருவூர்ச்சித்தர் நேரில்வந்து இடையூறுநீக்கி பிரதிட்டை பண்ணினார் என்றும் அறியமுடிகிறது. கோயிலில்
கருவூர்த்தேவரும் ராஜராஜரும் அருகருகே நிற்கும் ஓவியம், ஆயிரமாண்டு கடப்பினும் தமிழோவியக்கலையின் சிறப்பைக் காட்டி நிற்கிறது.
ராஜராஜ சோழனுக்குப் பிறகு, இந்தக்கோயில் பல இடிபாடுகளையும், பல புனரமைப்புக்களையும் கண்டது. கோயிலில் குடிகொண்ட தேவிக்கு தனிச்சன்னதி அமைத்தபெருமை சுந்தரபாண்டியனைச்சாரும். தேவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
நாயக்கமன்னர்கள் சிற்ப அழகு பொலிந்துததும்பும் வண்ணம் வடமேற்கிலே, முருகப்பெருமானுக்கு கற்சன்னதி அமைத்திருக்கிறார்கள். அதன் சிற்பநுணுக்கங்கங்ககளின் அழகு சொல்லிமாளாது. அந்தக் குமரனை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
மராத்தியமன்னர்கள் பிள்ளையாருக்கு சன்னதி எடுப்பித்திருக்கிறார்கள்.
தொல்லியல்துறை கோயிலின் பண்டையநிலைபற்றியும், இன்றையநிலைபற்றியும் கருத்துவிளக்கப்படங்களோடு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். அவர்களும் சில ஆங்கிலேயர்களும் கோயிலுக்கு செய்த பணிகளை நினைத்தால் கையெடுத்துக்கும்பிடவேணும் போலிருக்கிறது.
கண்காட்சிப்பொறுப்பாளரிடம் சோழரின் அடுத்த சிற்பக்களஞ்சியங்களான
"கங்கை கொண்ட சோழபுரம்", "தாராசுரம்" போகும் வழியை கேட்டறிந்தோம். (வேறொரு பதிவில் அவைபற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.)
பலதோழர்கள் உயர்ந்த விமானத்தை கோபுரம் என்கிறார்கள். கோபுரம் என்பது கோயிலின் நுழைவாயில். விமானம் என்பது மூலவருக்கு மேல் அமைந்திருக்கும்.விமானத்தின் உச்சியில் உள்ள உருண்டையானபாகம் தனிக்கல்லால் ஆனது.கிறேன்களும் தொழில்நுட்பவசதிகளும் அற்ற அக்காலத்தில், பல கிலோமீற்றர் தூரத்துக்கு "சாரம்" எனப்படும் மரச்சாய்தளத்தை அமைத்து, நிலத்துக்கும் விமானத்துக்கும் இடையில் தொடர்பு ஏற்படுத்தி, யானைகளின் மூலம் கல்லை அவ்வளவு உயரத்துக்கு கொணர்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!
அளவிறந்த பெருமையுடனும், பூரிப்புடனும் ஒருவழியாக நானும் நிமலும் வெளியேறினோம். பெருவுடையாரின் எல்லையற்ற கருணையால் எங்கள் செருப்புகள் எங்களுக்கே கிடைத்தன. ஒரு ஆச்சி இட்டிலி விற்றுக்கொண்டிருந்தார். வாங்கி தெருவோரத்தில் அமர்ந்து, பெருங்கோயிலைப் பார்த்தவண்ணம் விழுங்கல்படலத்தை ஆரம்பித்தோம். ஆகா! இப்பிடி ஒரு இட்டிலியை இந்தப்பிறப்பில் சாப்பிட்டதில்லை. இரண்டு இட்டிலிக்கு நாலுவகை சட்டினி. இட்டிலியின் அருஞ்சுவையை இன்னதென்று சொல்லுதற்கு ஆயிரம் நாக்கு தேவை. அடுத்தமுறை தஞ்சைக்குப்போனால் ஆச்சியிடம் இட்டிலி ஒருபிடி பிடிக்கவேணும். யாருக்குத்தெரியும்? அந்தநேரம், எங்களுக்கு இட்டிலி போட்ட புண்ணியத்தால் ஆச்சி, சொர்க்கத்தில் ராஜராஜசோழனுக்கு இட்டிலி விற்றுக்கொண்டிருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுகின்றன.
ஆதித்தன்
31-12-2008
