அதுவாய் வாழ்தல்.

PM 3:52




ஆடாத விண்மேகக் கூத்துமாடி,
அசையாத விண்மீனைச் சேர்த்துமாடி,
வாடாத மின்பூக்கள் கோர்த்துமாடி,
வாழ்நாளுக் கிது இறுதி என்னுமாப்போல்
தேடாத இன்பநிலை தேடியாடி,
தெவிட்டாமல் ஓருணர்விற் கூடியாடி,
பாடாத பண்ணெல்லாம் பாடியாடி,
பற்றுநிலைவிட்டகலப் பாடினோமே!

மீறாத எல்லைவிதி எல்லாம்மீறி
மென் துகிலை விரிக்கின்ற வானமீதில்,
சாறாக ஒடுகிற ஒளியின் காமம்
சரித்திரத்தில் என்றுமென்றும் புதியவண்ணம்.
ஆறாத ரணம் ஆறும், அத்தமிக்கும்
ஆதித்தன் புலத்தழகை காண்தலுற்றால்.
தீராதகனவெல்லாம் திறந்துகொள்ளும்.
திமிரோடு ஒருகவிதை வடிவங்கொள்ளும்.

காற்றாடக் கனவாடக் கவிதையாட,
கனவுக்கும் நனவுக்கும் கலவியாட,
கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட,
கீதங்கள் தாளங்க ளோடுஆட,
ஆற்றோடு எழுந்தோயும் அலைகளாட,
அன்பென்ற ஒன்றோடு தழுவியாட,
நேற்றோடு இன்றோடு நாளையாட,
நான் என்னும் பேயோட, ஆடினோமே!

உள்ளமில்லை. எண்ணமில்லை. உள்ளேயேதும்
உடமையில்லை, கடமையில்லை. உரிமையேறி
வெள்ளமெனப் பாய்ந்துவரும் உறவு இல்லை.
வேகமுறத்தாக்குகிற கவலையில்லை.
அள்ள, அள்ள அமுதநிலை குறைவதில்லை.
அந்தி,பகல், இரவுநிலை தெரிவதில்லை.
முள்ளுமில்லை. பூவுமில்லை. ஓலமில்லை.
மெய்யுணர்வைப் புணர்தலுக்குக் காலமில்லை.

புல்நுனியில் புரளுகிற துளியில்வாழ்வோம்.
பூவிதழில் புலருகிற ஒளியில்வாழ்வோம்.
சொல்வடிவில் சுடருமொரு சுவையில்வாழ்வோம்.
சோகவிதை துளிர்த்தெழும்பும். அங்கும்வாழ்வோம்.
கொல் அழகு நதிவளைவில் நீந்திவாழ்வோம்
கூவியழும் குயில்களொடு பாடிவாழ்வோம்.
கல்மலையில் கார்முகில்கள் சூழவாழ்வோம்.
காலமென உங்களுடன் கூடிவாழ்வோம்.


:- ஆதித்தன்
06-07-2010

10 comments:

அன்புடன் நான் சொன்னது…

இது மரபு வகையா?
என்ன மரபு?
கவிதை புரிதலில் சிரமம் உள்ளது.

தங்களின் முயற்சிக்கு என் வணக்கங்கள்.

தமிழ் மதுரம் சொன்னது…

விருத்தத்தில் நீவிர் விருந்து வைக்கும்
விளையாட்டை இரசி(க்) காமல் இருக்கலாமோ?
மறுப்பேதும் சொல்வதற்கிடமில்லை, நும் கவியில்
மகத்தான இன் புணர்வுச் சேதியுண்டு
கருத்தென்னும் சொல் கொண்டு ஓர் வரியில்
கவிதையினை அளப்பதிலும், இந் நாளில்
விருப்போடு மரபில் எழுதும் ஓர் கவியை
வலையில் விமலாதித்தன் வடிவில் கண்டேன்!

தமிழ் மதுரம் சொன்னது…

அதுவாய் வாழ்தல்!
இயற்கையின் மீதான கவிஞர்களின் ஈடுபாட்டையும், மரபு எனும் பழைய பாட்டியின் மீதான காதலையும் கலந்து வாழ்கிறது.
இலக்கியம் சுவை கொள்ள இன்னமுதக் கவிதை தன்னை மரபினுள் புகுத்தி வழங்கும் ஆதித்தா
மாதத்தில் ஒரு பதிவெனத் தந்து எங்கள்
மனதினைக் கிடப்பில் போடுவது தகுமா?

ஆதித்தன் சொன்னது…

அன்புக்கு நன்றி தமிழ்மதுரம்.

இனி அடுத்தடுத்து பதிவுகள் வரக்கூடும்.
:)

ஆதித்தன் சொன்னது…

அன்புள்ள சி. கருணாகரசு
நன்றி
இது மரபு தான் - விருத்தம்

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃ....காற்றாடக் கனவாடக் கவிதையாட,
கனவுக்கும் நனவுக்கும் கலவியாட,
கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட,
கீதங்கள் தாளங்க ளோடுஆட,...ஃஃஃ
கவி மிகவும் அருமையாக இருக்கிறது...

ம.தி.சுதா சொன்னது…

தொடர்ந்து எழுதுங்கோ... தமிழுக்காக...

ஆதித்தன் சொன்னது…

நன்றி ம.தி.சுதா.

பெயரில்லா சொன்னது…

மிக அருமை, சிறப்பான சொற்கட்டு. சகோதரனே! எங்கு கற்றாய் இந்த திறமையை!....இந்தக் கவித்துவத்தை!...

பெயரில்லா சொன்னது…

ஆடாத கூத்தெல்லாம் ஆடின காதை...
அருமை குழந்தாய்... தொடர்ந்தும் நிறைய எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

ஆநி-

கருத்துரையிடுக