நடுநிசி

PM 10:13




நடுநிசியிற் பகையுணர்வு திமிருகிற வேளை.
நடுநிசியிற் கனவுலகின் கதவுடைக்கும் வேளை.
நடுநிசியிற் பிறப்பெடுக்கும் கவிகளதன் வேளை.
நடுநிசியிற் பெருமழையில் நனைந்துலவும் வேளை.


நடுநிசியிற் கைப்பிடிக்கும் கலையுறவின் வேளை.

நடுநிசியிற் பொழிபனியும் குளிர்த்துகிற வேளை.
நடுநிசியிற் பெருகிவரும் விழிமழையின் வேளை.

நடுநிசியிற் செறிமணத்தை பரவுமலர்வேளை.

நடுநிசியிற் திறந்தமனம் கிறங்குகிற வேளை.
நடுநிசியிற் காதலுறு உறவழைக்கும் வேளை.

நடுநிசியிற் தேடுகிற நினைவுகளின் வேளை.
நடுநிசியிற் பொங்கியழும் துன்பியலின் வேளை.

நடுநிசியிற் சிறையிருந்து வதைபொறுக்கும் வேளை.
நடுநிசியிற் குரலுயர்த்திக் கதறுகிற வேளை.
நடுநிசியிற் பிறருதைக்கும் வலிவெறுக்கும் வேளை.
நடுநிசியிற் கருகிவிழும் உயிரடங்கும்வேளை.

- ஆதித்தன்
15-06-2010

வேண்டிப் பிதற்றல்.

AM 10:27




அறியாப்பொருள் உன் பொருளன்றோ?
அறிய நினைத்தும் முடியாமல்

சரியோ பிழையோ அறியாத
சகதிக் குழம்பாய் இருப்பிங்கு.

முறியாவினையோ முன்வினைகள்?
மூலம் எதுவோ அறியேனே?

வெறியோடலையும் வெறுநாயென்
றெண்ணி என்னை வெறுக்காதே.

கனவிற் கிளர்ந்த சுகமோ இக்
காலக்கூத்தும் காட்சிகளும்?
உணவிற் கமைந்த சுவை போல
உண்டுமுடிக்க மறைந்திடுமோ?
தினவும் வலியும் வெறியோடு
திரியும் மூர்க்கக் கடையேனின்
குணமும் மனமும் ஒருநாளில்
கோவே உன்னைக் குறியாதோ?

பொருளுக்கலையும் உறவுகளும்
பொருளுக்கலையும் உள்மனமும்
பொருளுக்கலையும்படி சொல்லும்
பொருளுக்கலையும் போதனையும்
பொருளுக்கலைந்தே அழிவாகும்!
புன்மைச்சகதிப் பிரவாகம்
பொருளுக்கலைய வைக்காதுன்
பதமேபொருளாய்த் தருவாயே.

சொல்லும் நெஞ்சைக் கூறாக்கி,
கொத்திக் கொத்திக் கூழாக்கி,
அல்லும்பகலும் அது ஈனும்
ஆறாவலியாய்த் தீயூற்றி,
வெல்லும் சொல்லில் வாள்வீச்சை
வைத்துக்கீறி வாயூறிக்
கொல்வார் அவரைப்பழிதீர்க்கக்
காலந்தேடி அலைவேன்நான்.

வலியும் பழியும் உணர்வேறி
வாழ்வும் பிறருக்குதவாத
நிலையும் நிறமும் நீ மாற்றி
நீங்காக் கருணை நீரூற்றி
பழிகள்விட்டு மன்னிக்கும்
பண்பைத்தந்துன் அழகான
ஒளியின்மடியில் இனிதாக
நானும் உறங்க இசைப்பாயே.


:- ஆதித்தன்
09-06-2010