பதிய “வந்த” கதை

PM 9:43

ஒரே ஒருவர் மட்டுமே நடந்து போய்க்கொண்டிருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. நான் செய்ய இருந்த காரியம் சரியா பிழையா என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

கறுப்பு மேகங்கள் வானத்தை சூழ்ந்திருந்தன.

”இனியென்ன? போட முடிவெடுத்தாச்சு! போட்டு விட வேண்டியதுதான்”

கையில் சுமந்துகொண்டு வந்ததை பார்த்தேன். கொஞ்சம் நீளமாய்த்தான் இருந்தது. எவ்வளவுதரம் சொன்னன். சின்னச் சாமானா தாங்கோ எண்டு! எண்டாலும் பரவாயில்ல! வாங்கேக்கயே சோதிச்சுப் பாத்துதான் வாங்கி இருப்பாங்கள்! விசையை அழுத்தினால் போதும்! அவ்வளவுதான்!
“டக்!!!”
சத்தம் கூட அவ்வளவா வராது. அது தான் முக்கியம்.


அவர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய காய்கறிகள் பையில் நிரம்பியிருந்தன. சட்டைப்பையில் அருமையான கைத்தொலைபேசி எட்டிப்பார்த்ததை, அவர் என்னைக்கடந்து போகும் போதே பார்த்துவிட்டேன். புத்தி குறுகுறுத்தது.

பயந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. என் நடையை விரைவாக்கினேன். நாசமாப்போன செருப்பு சத்தம் போட்டுது. அந்த மனிசர் ஒருக்கா கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தார். அதே கழுத்து! தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது தெரிந்தது. கிட்டத்தட்ட ஓடுவதைப்போல நடக்கத் தொடங்கினார். வெள்ளவத்தையின் அந்தத் தெருவில் அப்போது ஆட்களே இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு வெண்பூனை அறுந்த வாலின் மிச்சத்தை நக்க முயற்சித்துக்கொண்டு இருந்தது.

நான் எதையும் கவனிக்கவில்லை. பொதுவாகவே என் குறி தவறுவதில்லை.
வானத்தில் இடி முழங்கியது. மழை கொட்டபோகுதோ தெரியேல்ல! கெதியா வேலையை முடிச்சுகொண்டு போயிடோணும்.

நிமலின் தொடர்மாடிக்கு அருகே அந்த சிவப்பு சட்டைக்காரர் போய்விட்டார்.

தூறலும் காற்றும் கலந்தடிக்கத்தொடங்கின.
என்முகத்தில் எந்த சலனமும் இல்லை.
அந்த மனிதர் வாழ்நாளிலேயே கடைசி முறையாக என்னை திரும்பிப் பார்த்தார்.
மரணத்தின் கோரமான நிழல் அவர் முகத்தில் படிந்திருப்பதாக, பட்சி கத்தியது.
வாய் கோணலாக இருந்ததாக ஞாபகம்!

அப்பிடியே ஓடத்தொடங்கினார். அவருடைய பாட்டா செருப்பு தெருவில் தேய்ந்து கொண்டிருந்தது.

நானும் அவரைத்தொடர்ந்து ஓடினேன்.
கால் வலி எடுத்தது.பெருவிரலில் கல்லொன்று இடித்ததில் வலி தாங்க முடியவில்லை.



பயங்கரமாய் கொட்ட ஆரம்பித்தது மழை.
அவர் நிமலின் தொடர்மாடியைத்தாண்டி கடற்கரையை நோக்கி ஒடிக்கொண்டிருக்க....,

அதேநேரம்....,
நான்
என்னை அறியாமல்
அதன் நீண்ட பகுதியை மேல் உயர்த்தி,
சரியாக விரலை அதன்மேல் வைத்து,
விசையைத் தட்டினேன்.

எத்தினை வருசமா செய்த பயிற்சி? வீண்போகுமா?

குடை சரியாக விரிந்து கொண்டது. மழையும் விடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவாறு குடையின் உபயத்தில் முழுக்க நனையாமல், நிமலின் தொடர்மாடிக்கு வந்து சேர்ந்தேன்.


”போடவேண்டியது என்று முடிவெடுத்தாப் பிறகு போடாம விடக்கூடா!”
இன்றைக்கே ஒரு பதிவை போட நிமல் எல்லாம் சொல்லித் தருவான். பிறகென்ன கவலை?
-----------------------------------------------------------------------------------------

நிமலின் கதவுக்கு வெளியே என் நீளமான குடையை வைத்துவிட்டு உள்ளே போனபோது யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்றும் யோசித்தேன். அதற்குள் நிமலின் அம்மா வந்து இலவசமாய் தேனீர் தந்ததால், இலவசத்திற்கு மயங்கும் இளையதமிழனாய், குடையை மறந்துவிட்டேன்.

”இதை அப்பிடிப் போடுவமா?”
“அதை இப்பிடிப் போடுவமா?”
“இதை இப்பிடிப்போடுவமா?”
அல்லது
“அதை அப்பிடிப்போடுவமா?”
என்று பல பல தளவடிவமைப்புக்களைக்காட்டி
நிமல் என்னை கேள்விமேல் கேள்வியாக கேட்டான்.

நானும் அசராமல்

”இதை அப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“இதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை அப்பிடிப் போட வேண்டாம்!”
என்று என் மதியூக ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்.

எதை எப்பிடிப்போடுவதென்று இரண்டு பேரும் முடிவெடுப்பதற்குள் தான்
அது
அப்பிடி
நடந்தது!
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

ஒரு தட்டு நிறைய சொக்லேட் பிஸ்கட் வந்தது.

எதை எங்கே போடுவது என்ற விவாதத்தை மறந்து,
இரண்டு பேரும் பிஸ்கட்டை வாயில் போடத்தொடங்கினோம்.

தொடங்கியதெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கித்தானே ஆகவேண்டும்?
பிஸ்கட்டுகள் அனைத்துமே காணாமல் போயின.
தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்ந்தோம்.

பாரதியின் பாடலில் இருந்து வலைப்பூவுக்கான பெயர் சுடப்பட்டது.
இன்னும் எங்கெங்கையோ இருந்தெல்லாம், எதை எதையோ எல்லாம் சுட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பதிவு உருவேறியது.
நிமல்தான் தமிழ்மணத்தில் அதை இணைத்தான்.
தவிர்க்கவியலாத காரணத்தால் என்னை இணைத்துக் கொள்வதாக
ஒரு மின்னஞ்சலை தமிழ் மணம் அனுப்பியது.

1/27/08 திகதி நான் முதலாவதாக என் கன்னிப்பதிவை பதிந்தேன்.
காலப்பெருங்களம் என்ற பெயருக்கு ஏற்ப, நிறைய கால இடைவெளிவிட்டு விட்டு, அவ்வப்போது பதிந்து வருகிறேன்.

இந்த “பதிய “வந்த” கதை” எழுதும் வியாதிக்குரிய வைரஸ், தசாவதாரத்தில் வரும் வைரஸைவிடக்கொடுமையானது. இதைப்பற்றி சங்க இலக்கியத்தில் 478ம் பாட்டிலும், சீவகசிந்தாமணியில் கடைசிக்கு முதல் பாட்டிலும் சொல்லப்படாவிட்டாலும் கூட, இதன் வலிமை அளப்பரியது என நான் அறிவேன்.

இது மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியால் தொடரப்பட்டு கீத்தினால் துரத்தப்பட்டு, பால்குடியினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது.

இந்த வைரஸின் கோரமுகத்தை காண்பதற்கு முன்பதாக, அவரவர் தாம் பதிய வந்த கதையை எழுதி, இன்னும் நாலு பேரிடம் இந்த வைரஸை ஒப்படைத்து விட்டால் தப்பித்திவிடலாம் என்று, பதிவர் சந்திப்புக்காக திருகோணமலையில் இருந்துவந்த மருத்துவர் ஐயா சொல்லாவிட்டாலும்கூட நான் அவ்வாறே செய்து விடப்போகிறேன்.

[இந்த வைரஸை வச்சிருக்கிறதுக்கும் அடுத்த ஆக்களிட்ட கடத்துறதுக்கும் சில முறைகள் இருக்கு. அதை எல்லாம் எனக்கு விரிவாக எழுதுவதற்கு நேரமும், தகுதியும் இல்லாமையால் தேவைப்படுபவர்கள், மேலே எனக்கு இதைத்தந்த புண்ணியவான்களின் வலைப்பதிவுக்கு சென்று பார்த்துக்கொள்ளுக!]

ஆதலினால்... கீழ்க்கண்ட நபர்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
1]அஷோக்பரன்
2]நிமல்
3]இரா பிரஜீவ்
4]சாயினி

இந்தா பிடியுங்கோ பொறுப்பை! எப்பிடியோ கை கழுவியாச்சு!

யார்ரா அங்க...?
எட்ரா வண்டிய.......!!!!!

ஆதித்தன்.
03-09-2009

பிளக்கப்பட்ட இந்தியா

PM 3:32

சுதந்திரம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சுதந்திரம் கிடைப்பதற்கு சில நாட்கள் முன்பும், சில நாட்கள் பின்பும் மக்கள் அனுபவித்த குரூரக் கொடுமைகள் எங்கிருந்து ஆரம்பித்தன? வங்காளத்திலும் பஞ்சாபிலும் பற்றி எரிந்த தீயை விசிறி விட்டது யார்? அந்தத் தீயில் வெந்துபோனது யார்?

எழுந்துபோன பாகிஸ்தானிலும், பிளந்துபோன இந்தியாவிலும் அந்நாளில்
விளைந்துபோன மதவெறிப்பேய்க்குப் பலியாய், விழுந்துபோன மானிடர்களின் சடலங்களில் ஈ மொய்க்கும் பொழுதில்….,
கதறிய குரலடங்கி, கண்கள் உதறிய ஒளியடங்கி மதங்களின் காமவக்கிரத்தில் மிதிபட்டு கருக்கப்பட்ட பெண்களின் மூச்சு நிறுத்தப்பட்ட பொழுதில்…..,
கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றைக்கிழித்து சிசு வெளியெடுத்து எரிக்கப்பட்ட பொழுதில்….., கந்தல் கந்தலாய் குழந்தைகள் சிதைக்கப்பட்ட பொழுதில்…..,
அந்த இரண்டு தேசங்களும் சுதந்திரம் பெற்றுக்கொண்டன.

காந்தி, நேரு, ஜின்னா, படேல், மவுண்ட்பேட்டன் என்று நீளும் அரசியல்தலைவர்களின் பட்டியலில் யாருடைய குடும்பமும் இந்தக் கலவரங்களின்போது சாதாரண மனிதனைப்போல் பாதிக்கப்படவில்லை. அவர்களில் யாருக்குமே அந்தவலி தெரியவில்லை. அவர்கள் தேசத்தின் பிளவுகளைப்பற்றியே கருத்து முரண்பாடு கொண்டார்கள்.பிளந்த கோடுகள் மக்களை அறுத்துச்சென்றதைப் பற்றி அதிக அக்கறைப்படவில்லை.


ஆகஸ்ட் 15, 1947 அன்று, லாகூரிலும், அமிர்தசரஸிலும் பெட்டி பெட்டியாய்
நடமாடும் பிணங்களும் நாறும் பிணங்களும் வந்து இறங்கும்போது, ஜின்னாவும் நேருவும் தத்தம் கொடிகளை வானளாவப் பறக்கவிட்டார்கள்.

பிரிவினையோடு வழங்கப்பட்ட அந்த சுதந்திரத்தைப் பற்றியும், அது பெறப்பட முன்பும் பின்பும் நடந்த, நடத்தப்பட்ட காட்சிகளையும், முடிந்தவரை நடுநிலையாய் நின்று சொல்லுகின்றது, மருதன் எழுதி கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட “இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு”.

என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” என்று சொன்ன காந்தியால் இந்தியப்பிளவைத்தடுக்க முடியவில்லை. அக்கால இந்தியாவின் பிரதான அரசியற் சக்தியாய் விளங்கிய காங்கிரஸின், தூண்களான
நேரு, வல்லபாய் பட்டேல் போன்றவர்களாலும் தடுக்கமுடியவில்லை. அதேபோல முகமது அலி ஜின்னாவின் அசைக்கமுடியாத ஆளுமையாலும் அவரது பிடிவாதத்தாலும் மட்டும்கூட பாகிஸ்தான் பிறக்கவில்லை.

இந்து, இஸ்லாம் சீக்கிய மதங்களின் பெயரால் வன்முறையிலிறங்கி
யார் கொன்றார்களோ அவர்களாலும்,
யார் கொல்லப்பட்டார்களோ அவர்களாலும்,
யார் வன்புணர்ந்தார்களோ அவர்களாலும்,
யார் வன்புணரப்பட்டார்களோ அவர்களாலும்
அகண்ட பாரதம் பிளக்கப்பட்டே ஆகவேண்டிய சூழ்நிலை உருவானது.
பற்றி எரியும் ஒவ்வொரு வீடும்
பதறி ஓடும் ஒவ்வொரு காலும் “ஒன்றாய் வாழ்வது இனி நடக்காது” என்பதை உரக்கச்சொல்லின.

மதத்தை இழிவுபடுத்த பெண்கள் உபயோகப்பட்டார்கள். கலவரங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, இறந்தவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்கள் என்று சொல்லக்கூடியவாறு, உயிர்பிழைத்தவர்கள் உடற்சிதைவுகளோடு நிரந்தர மனச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்துப்பெண்ணின் வாயில் மாட்டுக்கறி போடப்பட்டது. முஸ்லிம் பெண்ணின் நெற்றியில் குங்கும்ம் அள்ளிப்பூசப்பட்டது. மசூதிகளின் முன்னால் பன்றித்தலைகள் வெட்டி வீசப்பட்டன. மத வேறுபாடு இல்லாமல் நிறையப்பேர் ஒரு காரியம் செய்தார்கள். எதிரிகளின் கையில் அகப்படமுன் தங்கள் வீட்டுப்பெண்களை அவர்களே கொன்றார்கள். அவர்களும் தற்கொலை செய்தார்கள்.

மருதன் இப்படிச்சொல்லுகிறார்.
எங்கோ தொலைவில் கல்கத்தாவிலோ, கராச்சியிலோ, லாகூரிலோ, வங்காளத்திலோ அல்ல; சுதந்திர இந்தியாவின் புதிய தலைநகரத்தில் வெட்டிக்கொண்டார்கள். முஸ்லிம்பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்.”
புது தில்லியில் மட்டும் பத்தாயிரம் பிணங்கள்.”
தலைப்பாகைகளும் திரிசூலங்களும், பர்தா துணித்துண்டுகளும் வளையல்களும் செருப்புகளும் வண்டி வண்டியாக கிடைத்தன.

இந்தியாவைப் பற்றி தெரிந்திராத ராட்கிளிஃப் என்ற பிரிடிஷ்காரரை
கூட்டிக்கொண்டு வந்து,கோடு கீறி எல்லைகள் பிரித்தார்கள்.
ஒரு கிராமத்துக்கு நடுவே கோடு இழுக்கப்பட்டு இருந்தது. ஒரு பகுதி பாகிஸ்தான். ஒரு பகுதி இந்தியா. எப்படிப் பிரிப்பது அந்தக் கிராமத்தை? பத்துக் குடும்பங்கள் அங்கே; இருபது குடும்பங்கள் இங்கே என்றா? எனில் இதுவரை ஒரே குடும்பமாக இருந்தவர்கள் இனி இரு தேசத்தவர்களாக மாறி விடுவார்களா? உச்சக்கட்டமாக அந்தக் கோடு ஒரு வீட்டை இரண்டாகப்பிரித்துச்சென்றது. முன்பக்க வாசல் வழியாக வந்தால் இந்தியா. பின்பக்கம் பாகிஸ்தான்.

ஆசை காட்டியும், ஆள்பலம் காட்டியும் பல சமஸ்தானங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பத்துடனேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று சொன்ன நேருவின் வாக்குறுதி, இன்றைய அரசியல்வாதிகளுக்கு அவரை முன்னோடியாக்கி கேலிச்சிரிப்பு சிரித்தது.

இந்தியப்பிரிவினையில் இந்துத்துவ சக்திகளின் பங்களிப்பையும் மருதனின் புத்தகம் புலப்படுத்துகிறது. முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் என்றால்
இந்தியாவை இந்துக்களின் தேசமாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
இந்துமகாசபை வெளியிட்டது. இந்துமகாசபையின் தலைவரான சாவர்க்கரின்
அதிதீவிரமான இந்துத்துவக் கனவுகள், எழுத்துக்களாக வெளிவந்தன. அவருடைய கருத்துக்களில் ஒன்றிப்போனவர்களால் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்டது. காந்தியைக்கொன்ற நாதுராம் கோட்சே முன்பு
காந்தியின் சீடர்தான். சாவர்க்கரின் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு
ஆர்.எஸ்.எஸ் ல் இணைந்து கொண்டார். அகண்ட இந்தியாவைப் பிளந்தவர் காந்திதான் என்று, அவரை சுட்டுக்கொலை செய்தார். கோட்சே அளித்த வாக்குமூலத்தில் தான் செய்த கொலைக்கு வேறுயாருமே பொறுப்பு அல்ல
என்று சொன்னதனால்தான், இந்துமகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேல் இருந்த தடை மீளப்பெறப்பட்டது. பிரிவினைக்கான உண்மைக் காரணங்கள் பற்றி அபிப்பிராயங்கள் மாறுபட்டுக்கொண்டிருந்தாலும், பிரிவினையின் வெளிப்படையான விளைவுகள் மறுக்கமுடியாதவை என்று மருதன் சொல்வது முற்றிலும் உண்மை.

இந்தியப்பிரிவினை – உதிரத்தால் ஒரு கோடு” புத்தகத்தில்
வெள்ளைத்தாளில் பட்ட சிறுகறையைப்போல, வைசிய சமுதாயத்தைச்சேர்ந்த காந்தியை சனாதன பிராமணன் என்று குறிப்பிடுவது நெருடுகிறது. இன்னும் தெளிவான விளக்கமான பிரிவினைக்கால இந்தியாவின் வரைபடங்கள் தரப்பட்டிருக்கலாம். இவ்வளவு அலங்கோலங்கள் வட இந்தியாவை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டிருந்த சூழலில், தென்னிந்தியாவின் நிகழ்வுகளையும் நேரடி மற்றும் மறைமுகப் பங்களிப்புக்கள் பற்றியும் எழுதி இருக்கலாம்.

பாதிப்புக்களும் பரிதவிப்புக்களும் கருவறுப்புக்களும் கழுத்தறுப்புக்களும்
நிர்வாணங்களும் நிஜக்கோரங்களும் நிரம்பிய அந்த நாட்களை எழுத்துக்களால் ஓரளவுக்குத்தான் வெளிப்படுத்தமுடியும். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வக்கிரங்களை உள்ளடக்கிய வரலாற்றில், இவற்றுக்கும் இடம் உண்டு. அந்த நிகழ்வுகளின் பதிவுகள் எப்போதும் தம்மைச்சுற்றி உணர்ச்சி மிகுந்த எரிசுவாலைகளை வீசியவாறுதான் இருக்கும். அதன் தீப்பொறிகள் இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும், இன்றைக்கும் சுட்டுக்கொண்டும் சூடேற்றிக்கொண்டும் இருக்கிறது.

ஆதித்தன்.
21-07-2009.

ஆண்டொன்று ஓடியது / பறந்தது / நீந்தியது!!!

PM 3:16

இத்தால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்.....,
ஆங்கில நாட்காட்டியின்படி, இன்றோடு நான் பதிவுலகில் தடம் பதித்து ஒரு ஆண்டு கழிந்தது என்பதாகும். இந்தச்செய்தியை முக்கியமற்றதாக்கும் சதிநோக்கில் இன்றையதினம் பல செய்திகள் வெளிவந்த போதும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, இப்பதிவைப் படித்து, தாம் முன்செய்த பாவவினைகளை
கழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என் வணக்கம்.

என்ன எழுதுவது என்று தெரியாமல் நிறைய நாட்கள் பதிவைத் தொடவில்லை.
பதிவைத் தொடவில்லையாதலால், பதிவொன்று வைத்திருக்கிறேன் என்பதை மறந்து சில வாரங்கள் கழிந்தன. எப்போதாவது நடக்கும் கிரகமாற்றங்கள் பதிவுலகத்தை ஞாபகப்படுத்துவதால், மூக்கு என்று ஒன்று இருந்தால் சளி என்று ஒன்று இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதியை மீறாது, தமிழ்வற்றிப்போய் என் பதிவு காய்ந்துவிடாமல் அவ்வப்போது பதிவு போட்டுவருகிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகம் செய்த தவப்பயனாக, இன்னும் ஆறுமாதங்களுக்கும்
இதே நிலை நீடிக்கும். அதன்பிறகு ஏற்படப்போகும் கிரகமாற்றத்தினால் நாள்தோறும் என்பதிவுக்கு முகங்கொடுக்கும் சங்கடநிலை அனைவருக்கும் வரக்கடவது!

பதிவு இடும் தொழில்நுட்பம், தமிழை இணையத்தில் எழுதும் முறைகள், தமிழ்மணம் போன்றவற்றை எனக்கு அறிமுகப்படுத்தி, என்னையும் ஒரு வலைப்பதிவராக்கி அழகுபார்க்கவேண்டி,
(திருமங்கலத்தில் அழகிரியைப்போல்) கடுமையாக உழைத்து,
என் தளத்தின் வார்ப்புருமுதற்கொண்டு அனைத்தையும் வடிவமைத்து, (இடைக்கிடையே நான் விட்ட கொட்டாவிகளையும் சகித்துக்கொண்டு,) இன்று நான் இந்த நிலைக்கு(?) வரக்காரணமாக இருக்கும் நண்பர் (தோழர்)ஸ்கந்தகுமார் நிமலப்பிரகாசன் அவர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து மகிழும் இந்த இனிய வேளையிலே...,
இனிமேலும் எனக்கு தொழில்நுட்ப உதவி அளிக்கும் பெறற்கரிய பெரும் பேறு, அவருக்கு மட்டுமே இருப்பதை ஞாபகப்படுத்தி வைக்கிறேன்.

காசு கொடுத்தால்தான் வலைப்பதிவு வைக்கமுடியும் என்ற நிலை இருந்தால்,
ஒரு தலைசிறந்த வலைப்பதிவரை இந்தச்சமூகம் இழந்திருக்கும். அப்பேரிழப்பை தடுத்து நிறுத்தி, என் உரைநடைத்தமிழ் தவழ, ஒரு தரை தந்த (இலவசமாக),
கூகுள் நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவிக்கிறேன்.

அத்துடன், என்பதிவுகளை திரட்டி வழித்தெடுத்து பிறபதிவர்தம் கண்காணச்செய்து, அவர்கள் காறித்துப்பும் முன்பே, பட்டியலில் இருந்து அப்புறப்படுத்தி காத்து ரட்சிக்கின்ற தமிழ்மணம் திரட்டி குழுவினருக்கும்,
எப்போதாவது இருந்துவிட்டு நான் எட்டிப்பார்க்கும் ஆளாக இருந்தாலும்
என்முயற்சி இன்றியே பதிவை இணைத்துக்கொள்ளும்
இலங்கை வலைப்பதிவர் திரட்டியின் நிர்வாகிகளுக்கும், இன்னும் என்பதிவுகள் எங்கெங்கெல்லாம் திரட்டப்படுகிறதோ, அங்கங்கெல்லாம் நிர்வாகிகளாக இருக்கும் புண்ணியவான்களுக்கும் நன்றிகள்.


அப்படி, அவ்வப்போது நான் போடும் பதிவுகளுக்கு, (என்னைப்போல அல்லாமல்)
சுறுசுறுப்பாக கருத்துக்களை அள்ளி வழங்குவதற்காக பாரி மன்னனின் பேரப்பிள்ளைகள் பதிவுலகத்தில் பிறந்து உலா வருகிறார்கள். (கவனிக்க! என்பதிவுக்கு கருத்து இட்டவர்க்கு மட்டுமே வள்ளல்பட்டம் இலவசம்!) அவர்களுக்கும் என் நன்றியறிதல் சென்றடைகிறது. என்பதிவுக்கு வரும் கருத்துக்கள் பெரும்பாலும் நான் சொல்லும் கருத்துக்கு மாற்றாக வருவதில்லை. இந்தப்பதிவினால் பலர் உளரீதியாக பாதிப்புறப்போவது நிச்சயம் என்பதால், இன்றுமுதல், மாற்றுக்கருத்துக்களே அரங்கேறும் என்று களிப்பெய்துகிறேன். (பின்னூட்டம் என்ற சொல், FEEDBACKஎன்ற ஆங்கிலச்சொல்லின் தாக்கம் உள்ளதால் மட்டுமன்றி, என் பின்னால் நின்று எதை ஊட்டினாலும் நான் ஏற்பதில்லையாதலாலும் தவிர்க்கமுடியாதநிலையால் அச்சொல் தவிர்க்கப்படுகிறது.)

இந்த வலைத்தளத்தின் அத்தியா"வசிய"த் தேவைக்காக, சில பதார்த்தங்கள் கி.பி.2008ம் ஆண்டு திருடப்பட்டன. அவையாவன:
(தி.ப.இ. :- திருடப் ட்ட டம்)
1] தலைப்பு- காலப்பெருங்களம்.
தி.ப.இ:- எட்டயபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர்
சுப்பிரமணியத்தின் வீடு.
2] தஞ்சைப்பெரியகோயில் விமானம்.
தி.ப.இ:- தஞ்சைப் பெரியகோயில் விமானம்.


இந்த ஒருவருட காலமாக, தெரிந்தோ தெரியாமலோ என் எழுத்துக்கள் யார் மனத்தையாவது புண்படுத்தியிருந்தால், எந்தச் சகோதர / சகோதரியாவது என்பதிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், தயவு செய்து என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்ற வார்த்தையை, என்னிடம் எதிர்பார்த்தால், அதனால் ஏற்படும் ஏமாற்றத்துக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். "உன் எழுத்து மற்றவர்களை எந்தவகையிலாவது பாதிக்கும் போது தான், அது வெற்றி பெறுகிறது" என்பதை, ஒருநாள் என் முன் தோன்றிய ஒரு மகான் திருவாய்மலர்ந்தருளினார்.
(அப்போது நான் கண்ணாடியின் முன் நின்றேன் என்பது இங்கு தேவையில்லாத விடயம்!)

ஆதித்தன்
27-01-2009.

சாவோடிவை போகும்! - திருக்குமரன் கவிதைகள்

PM 3:14

கண்ணுருட்டிக் கண்ணுருட்டிக்
களவாய் எனை எடுத்து
உன்னிலெனை இறுக்கி
ஒட்ட வைத்துயிர் குடித்து
ஏனென்றே விளங்காமல்
எனையெறிந்து நீ போக
நான் நின்று நடுத்தெருவில்
அழுவனென்றா நினைத்தாய்?

போ.....

மண்ணளவும் கவலையில்லை!
மரித்தது போல் ஆனாலும்
எண்ணி இதைப்பற்றிக் கவலையுறேன்.
வாழ்வோட்டம்
என்னை இரும்பாக மாற்றும்தான்!
ஆனாலும்......,
கடல் பார்க்க, மரம் பார்க்க
நாம் போன இடம் பார்க்க,
சொன்ன கதை எல்லாம்
சுத்திவரும்.
போகட்டும்!

மனக்கொதிப்பு, உடற்கொதிப்பு
எல்லாமே உன்னிடத்தில்
தினம் தினம் நான் சமர்ப்பித்து
திருப்தி அடைந்த சுகம்
இனியில்லை என்றாலும்,
எனக்கென்ன இது பெரிய
பனிப்போரா?
"மறக்காமல் தினம் உருகிச்சாவதற்கு"
விதி வந்துந்தி எமை
வேறாக்கி....,
இன்னொரு கை

உன்மீது தொடுவதற்கு உரிமை கொண்டால்...?

நான் 'பெரிசாய்'
நொந்தொடிந்து போகேன்!?
நெகிழேன்!?
இருந்தாலும்......

சின்னக்கண்கலக்கம்,
தொண்டை அடைத்தபடி
சொற்கள் வரமறுக்கும்.
நெற்றிச் சுருக்கு விழும்,
நெஞ்சடைக்கும், வாய் குளறும்.
பற்றுதல் அற்றுப்போம்!
பார்வைத்திரை நடுங்கும்.

'சற்றுக் காலத்தில் என்
சாவோடிவை போகும்'
சிற்றின்பப்பிரிவில்லை
என அறிவேன். என்றாலும்
மற்ற மனிசரைப்போல்
கவலையுறேன்.
நீ போடி.


நன்றி:
கவிஞர் திருக்குமரன்.
"திருக்குமரன் கவிதைகள்".

என் வானிலே.....

PM 1:03

எங்கும் பரந்து நிரம்பிக்கிடக்கிறது வானம். ஏதுமற்ற ஒன்று எப்படி எல்லாமாக முடியும் என்பதற்கான விடை கண் முன்னே விரிந்து கிடக்கிறது! உச்சிக்கொம்பிலிருந்து வான்பார்க்கும் குருவியைப்போல பல நாட்கள் அதையே பார்த்துக் களித்திருக்கிறேன். என் இரவு பகல் வேளைகளும் சிலவேளை வான்பார்த்தலில் கழிந்திருக்கின்றன.

பெரும்பாலும் பகலில் காகங்கள் ஆட்சிசெய்யும் வானம் கொழும்பினுடையது.
பருத்தித்துறை இரவுகளை மாம்பழம்தேடும் வௌவால்களோடு, சில உலோகப்பறவைகளும் சுற்றின. ஊரில் பின்னேரத்தில் உலாப்போகும் கோழிகுஞ்சுகளை கைப்பற்ற பருந்துகளும் வான்மீது உலாத்தும். "பருந்து மூன்று தரம் சுத்திப்போட்டு அப்பிடியே கீழபாய்ஞ்சு கோழிக்குஞ்சை லபக் என்று பிடிச்சுக்கொண்டு போயிடும்." என்று பாட்டிமார் பேரக்குழந்தைகளுக்கு சொன்ன கதை ஞாபகம்.

வடிவம் அற்ற ஒரு வடிவமாய் உலாவரும் முகில்களில் இருக்கும் அழகு பெண்களில் கூட இல்லாதது. வெண்ணை திரண்டதைப்போல வானமெங்கும் சில நேரம் நிரம்பி நிற்கும்.சில நேரம் ஒன்றுமே இருக்காது. எந்தவொரு காட்சியும் ஒன்றை ஒன்று ஒப்பிடமுடியாத அளவு, ஈர்த்தெடுக்கும்.

பௌர்ணமிஇரவுகளில் ஊரில் வாழ்ந்த காலங்கள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன. பிள்ளையார் கோயிலில் சாமப்பூசை மணிஅடித்து ஓய்ந்தபிறகுதான், அண்டைவீட்டு பெண்கள் சிலர் வம்பளக்க வருவார்கள். அம்மம்மாவின் மடியில் இருந்துகொண்டு, ஊட்டுவதை தின்று கொண்டு அப்போதும் வான் பார்ப்பேன். மாமரக்கிளைகளூடாக நிலவொளி விட்டுவிட்டுப் பாயும். சிலநேரம் புட்டு, சில நேரம் இடியப்பமும் சொதியும். யாழ்ப்பாணச்சமையலில் உறைப்புக்கு பஞ்சம் வந்த சரித்திரம் கிடையாது. எனக்கு சொல்லப்படும் கதைகளில் வரும் மாந்தர்கள்
அந்த நிலவுவானத்தில் உலவுவார்கள். நரி வரும். முயல் வரும். வடைதிருடும் காகம் வரும். ராசாக்கள் வருவினம். இப்பிடி எத்தனையோ!!

வானம் என்றால் விமானம் இல்லாமலா? சிறுவயதில் வான்பார்த்துகொண்டிருந்த என்னை, மண்குழிக்குள் பதுங்கவைத்த பெருமை விமானங்களையே சாரும். அது தவிர, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சொந்தக்காரர்களை வழியனுப்பப் போகும்போது, பயணியர்விமானங்களை ஓரளவு அருகில் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. "நாங்கள் எப்ப பிளேனில போவம்?" எண்டு அம்மாவை நச்சரித்த நாட்களும் உண்டு.
எவ்வளவோ நாட்கள்தான் கீழே இருந்து அண்ணாந்து வானத்தைப்பார்ப்பது?

அன்று, விமானத்தில் ஏறியபோது, பயத்தைக்காட்டிலும் வானத்திலிருந்து பார்த்தால் வானம் எப்படியிருக்கும் என்ற ஆவலே மிஞ்சிநின்றது. அதிஷ்டவசமாய் யன்னலோர இருக்கை வேறு. விமானம் கிளம்பி மேகங்களை கிழித்துக் கொண்டு பாய்ந்து, பின்பு நேராகப் பறந்தது. யன்னலுக்கு வெளியே வெள்ளைவெள்ளையாய் பஞ்சுப்பொதிகளை நிரப்பி வைத்திருப்பதைப் போல தோன்றியது. ச்சே!இவ்வளவுதானா? இதைவிட பூமியில் இருந்து ரசிப்பது எவ்வளவோ பரவாயில்லை.

எவ்வளவு நேரம்தான் இந்த பஞ்சுப்பொதிகளையே பார்த்துக்கொண்டிருப்பது? அந்த நேரம் பார்த்து ஒரு விமானப்பணிப்பெண் வந்து ஏராளமாய் ஏதேதோ சொல்லி, தாராளமாய் புன்னகைத்தாள். வெள்ளைப்பஞ்சுவரிசையை விட அவள் பல்வரிசை ரசிக்ககூடியதாய் இருந்ததென்று சொன்னால், நீங்கள் ரசிப்பீர்களோ தெரியவில்லை.

ஆதித்தன்.
09-01-2009

நூலின்றி அமையாதென் வாழ்வு - 3

AM 9:01


"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"

என்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல! காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு
கீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.

விகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் "அம்பேத்கர்" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்
நடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.

கல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.

உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்
கண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.
பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
என்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்
அம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,

"அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்"


குடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது
இந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.

அரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.
"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"


சுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,
காலம்காலமாக "நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்" என்று அவர்களுக்கு இருந்த
மூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.

அஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.
அருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.

"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை"

ஆதித்தன்
07-01-2009.