பதிய “வந்த” கதை

PM 9:43

ஒரே ஒருவர் மட்டுமே நடந்து போய்க்கொண்டிருந்தார். நான் அவரைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு படக் படக் என்று அடித்துக்கொண்டது. நான் செய்ய இருந்த காரியம் சரியா பிழையா என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

கறுப்பு மேகங்கள் வானத்தை சூழ்ந்திருந்தன.

”இனியென்ன? போட முடிவெடுத்தாச்சு! போட்டு விட வேண்டியதுதான்”

கையில் சுமந்துகொண்டு வந்ததை பார்த்தேன். கொஞ்சம் நீளமாய்த்தான் இருந்தது. எவ்வளவுதரம் சொன்னன். சின்னச் சாமானா தாங்கோ எண்டு! எண்டாலும் பரவாயில்ல! வாங்கேக்கயே சோதிச்சுப் பாத்துதான் வாங்கி இருப்பாங்கள்! விசையை அழுத்தினால் போதும்! அவ்வளவுதான்!
“டக்!!!”
சத்தம் கூட அவ்வளவா வராது. அது தான் முக்கியம்.


அவர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய காய்கறிகள் பையில் நிரம்பியிருந்தன. சட்டைப்பையில் அருமையான கைத்தொலைபேசி எட்டிப்பார்த்ததை, அவர் என்னைக்கடந்து போகும் போதே பார்த்துவிட்டேன். புத்தி குறுகுறுத்தது.

பயந்து பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. என் நடையை விரைவாக்கினேன். நாசமாப்போன செருப்பு சத்தம் போட்டுது. அந்த மனிசர் ஒருக்கா கழுத்தை திருப்பி என்னைப் பார்த்தார். அதே கழுத்து! தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது தெரிந்தது. கிட்டத்தட்ட ஓடுவதைப்போல நடக்கத் தொடங்கினார். வெள்ளவத்தையின் அந்தத் தெருவில் அப்போது ஆட்களே இல்லை. வெறிச்சோடிக்கிடந்தது. ஒரு வெண்பூனை அறுந்த வாலின் மிச்சத்தை நக்க முயற்சித்துக்கொண்டு இருந்தது.

நான் எதையும் கவனிக்கவில்லை. பொதுவாகவே என் குறி தவறுவதில்லை.
வானத்தில் இடி முழங்கியது. மழை கொட்டபோகுதோ தெரியேல்ல! கெதியா வேலையை முடிச்சுகொண்டு போயிடோணும்.

நிமலின் தொடர்மாடிக்கு அருகே அந்த சிவப்பு சட்டைக்காரர் போய்விட்டார்.

தூறலும் காற்றும் கலந்தடிக்கத்தொடங்கின.
என்முகத்தில் எந்த சலனமும் இல்லை.
அந்த மனிதர் வாழ்நாளிலேயே கடைசி முறையாக என்னை திரும்பிப் பார்த்தார்.
மரணத்தின் கோரமான நிழல் அவர் முகத்தில் படிந்திருப்பதாக, பட்சி கத்தியது.
வாய் கோணலாக இருந்ததாக ஞாபகம்!

அப்பிடியே ஓடத்தொடங்கினார். அவருடைய பாட்டா செருப்பு தெருவில் தேய்ந்து கொண்டிருந்தது.

நானும் அவரைத்தொடர்ந்து ஓடினேன்.
கால் வலி எடுத்தது.பெருவிரலில் கல்லொன்று இடித்ததில் வலி தாங்க முடியவில்லை.



பயங்கரமாய் கொட்ட ஆரம்பித்தது மழை.
அவர் நிமலின் தொடர்மாடியைத்தாண்டி கடற்கரையை நோக்கி ஒடிக்கொண்டிருக்க....,

அதேநேரம்....,
நான்
என்னை அறியாமல்
அதன் நீண்ட பகுதியை மேல் உயர்த்தி,
சரியாக விரலை அதன்மேல் வைத்து,
விசையைத் தட்டினேன்.

எத்தினை வருசமா செய்த பயிற்சி? வீண்போகுமா?

குடை சரியாக விரிந்து கொண்டது. மழையும் விடுகிற மாதிரி தெரியவில்லை ஒருவாறு குடையின் உபயத்தில் முழுக்க நனையாமல், நிமலின் தொடர்மாடிக்கு வந்து சேர்ந்தேன்.


”போடவேண்டியது என்று முடிவெடுத்தாப் பிறகு போடாம விடக்கூடா!”
இன்றைக்கே ஒரு பதிவை போட நிமல் எல்லாம் சொல்லித் தருவான். பிறகென்ன கவலை?
-----------------------------------------------------------------------------------------

நிமலின் கதவுக்கு வெளியே என் நீளமான குடையை வைத்துவிட்டு உள்ளே போனபோது யாராவது எடுத்துக்கொண்டு போய் விடுவார்களோ என்றும் யோசித்தேன். அதற்குள் நிமலின் அம்மா வந்து இலவசமாய் தேனீர் தந்ததால், இலவசத்திற்கு மயங்கும் இளையதமிழனாய், குடையை மறந்துவிட்டேன்.

”இதை அப்பிடிப் போடுவமா?”
“அதை இப்பிடிப் போடுவமா?”
“இதை இப்பிடிப்போடுவமா?”
அல்லது
“அதை அப்பிடிப்போடுவமா?”
என்று பல பல தளவடிவமைப்புக்களைக்காட்டி
நிமல் என்னை கேள்விமேல் கேள்வியாக கேட்டான்.

நானும் அசராமல்

”இதை அப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“இதை இப்பிடிப் போட வேண்டாம்!”
“அதை அப்பிடிப் போட வேண்டாம்!”
என்று என் மதியூக ஆலோசனைகளை சொல்லிக்கொண்டு இருந்தேன்.

எதை எப்பிடிப்போடுவதென்று இரண்டு பேரும் முடிவெடுப்பதற்குள் தான்
அது
அப்பிடி
நடந்தது!
நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

ஒரு தட்டு நிறைய சொக்லேட் பிஸ்கட் வந்தது.

எதை எங்கே போடுவது என்ற விவாதத்தை மறந்து,
இரண்டு பேரும் பிஸ்கட்டை வாயில் போடத்தொடங்கினோம்.

தொடங்கியதெல்லாம் ஒருகட்டத்தில் அடங்கித்தானே ஆகவேண்டும்?
பிஸ்கட்டுகள் அனைத்துமே காணாமல் போயின.
தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்ந்தோம்.

பாரதியின் பாடலில் இருந்து வலைப்பூவுக்கான பெயர் சுடப்பட்டது.
இன்னும் எங்கெங்கையோ இருந்தெல்லாம், எதை எதையோ எல்லாம் சுட்டோம்.

கொஞ்சம் கொஞ்சமாக வலைப்பதிவு உருவேறியது.
நிமல்தான் தமிழ்மணத்தில் அதை இணைத்தான்.
தவிர்க்கவியலாத காரணத்தால் என்னை இணைத்துக் கொள்வதாக
ஒரு மின்னஞ்சலை தமிழ் மணம் அனுப்பியது.

1/27/08 திகதி நான் முதலாவதாக என் கன்னிப்பதிவை பதிந்தேன்.
காலப்பெருங்களம் என்ற பெயருக்கு ஏற்ப, நிறைய கால இடைவெளிவிட்டு விட்டு, அவ்வப்போது பதிந்து வருகிறேன்.

இந்த “பதிய “வந்த” கதை” எழுதும் வியாதிக்குரிய வைரஸ், தசாவதாரத்தில் வரும் வைரஸைவிடக்கொடுமையானது. இதைப்பற்றி சங்க இலக்கியத்தில் 478ம் பாட்டிலும், சீவகசிந்தாமணியில் கடைசிக்கு முதல் பாட்டிலும் சொல்லப்படாவிட்டாலும் கூட, இதன் வலிமை அளப்பரியது என நான் அறிவேன்.

இது மு.மயூரன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வந்தியால் தொடரப்பட்டு கீத்தினால் துரத்தப்பட்டு, பால்குடியினால் என்னிடம் தரப்பட்டிருக்கிறது.

இந்த வைரஸின் கோரமுகத்தை காண்பதற்கு முன்பதாக, அவரவர் தாம் பதிய வந்த கதையை எழுதி, இன்னும் நாலு பேரிடம் இந்த வைரஸை ஒப்படைத்து விட்டால் தப்பித்திவிடலாம் என்று, பதிவர் சந்திப்புக்காக திருகோணமலையில் இருந்துவந்த மருத்துவர் ஐயா சொல்லாவிட்டாலும்கூட நான் அவ்வாறே செய்து விடப்போகிறேன்.

[இந்த வைரஸை வச்சிருக்கிறதுக்கும் அடுத்த ஆக்களிட்ட கடத்துறதுக்கும் சில முறைகள் இருக்கு. அதை எல்லாம் எனக்கு விரிவாக எழுதுவதற்கு நேரமும், தகுதியும் இல்லாமையால் தேவைப்படுபவர்கள், மேலே எனக்கு இதைத்தந்த புண்ணியவான்களின் வலைப்பதிவுக்கு சென்று பார்த்துக்கொள்ளுக!]

ஆதலினால்... கீழ்க்கண்ட நபர்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
1]அஷோக்பரன்
2]நிமல்
3]இரா பிரஜீவ்
4]சாயினி

இந்தா பிடியுங்கோ பொறுப்பை! எப்பிடியோ கை கழுவியாச்சு!

யார்ரா அங்க...?
எட்ரா வண்டிய.......!!!!!

ஆதித்தன்.
03-09-2009