நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்

AM 1:08

"ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கோ, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கோ எங்கள் சமகாலத்து இலக்கியங்கள் குறைந்து போய்விடவில்லை. ஆனால் அவை உலக அளவுக்கு அறியப்படவில்லை. அங்கீகாரம் பெறவுமில்லை. எங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ சூட்சுமமான விதிகளின் பிரகாரம் இலக்கியத்தரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்."
- சுந்தர ராமசாமி.

1] எதற்காக நம் இலக்கியங்கள் பிறமொழிகளில், மொழிபெயர்க்கப்பட வேண்டும்?
நாகரிகப் பழமையும்,
முற்காலத்திலேயே அடைந்திருந்த பண்பாட்டுச்செழுமையும்,
இலக்கியப் புலமையும், பொறியியற்திறனும், கட்டிடக்கலைவடிவமைப்பும்,
சிற்பப்பெருங்கலையில் சிறந்தோங்கிய தன்மையும்,
வணிகமேலாண்மையில் பழந்தின்று கொட்டைபோட்ட முதிர்ச்சியும், போர்க்கலையும், பரதமும், கூத்தும், இயற்கைவிவசாயமுறைகளும்,
தளராத வீரமும், அகலாத ஈரமும் இன்னும் பலபெருஞ்சிறப்புக்களையும்
தன்னகத்தே கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இனம் ஒன்று இருக்கிறது.அதன் இலக்கியங்கள் உலக மனித சமுதாயத்தின் பொக்கிஷம்.
என்பதனை பிறதேசத்தவர் உணர்ந்து, அவ் இலக்கியங்களைக் கற்று, அதன்படி ஒழுகி தத்தம் சந்ததியர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் படி செய்வதற்காக!

2]எந்தெந்த மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்?
எந்தெந்த மொழிகள் உலகில் எழுதவும், பேசவும் பயன்படுகின்றனவோ,
அந்தந்த மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

3]ஏற்கனவே பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதே? அவற்றால் எந்தப்பயனும் இல்லையா?
சேக்ஷ்பியரின் நூல்களை உலகம் முழுவதும் விழுந்து விழுந்து படிக்கிறது.
திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருவாசகத்தை
படிப்பறிவுள்ள உலகமக்களில் எத்தனை பேர் அறிவார்கள்? பிறமொழிநூல்களைவிட நம் நூல்கள் தரம் குறைந்தனவா? ஒருபோதும்
இல்லை. எங்கள் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படுகையில் எளியமொழிநடையில் கருத்துக்கள் வாசகருக்கு போய் சேரக்கூடிய வகையில் எழுதப்படாமை, அவற்றை பிரபல்யம் அடையாமல் செய்துவிட்டது.

4] நம் இலக்கியங்கள் சிறப்பாக மொழிமாற்றம் அடையும் வேகத்தைக்கூட்ட
இனி என்ன செய்ய வேண்டும்?
1.அரசாங்க உதவிகளை மட்டுமே நம்பியிருத்தலை அறவே நிறுத்தல்.

2.இலாப நோக்கம் அற்ற, அரசியல் மத சாதி சார்பு அற்ற தமிழ் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தல்.

3.நிபந்தனைகள் அற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத நிதியுதவிகளை
தேடிப் பெறுவதற்காக தனிப் பிரிவு ஆரம்பித்தல்.

4. பொருத்தமான, திறமையான, பல்மொழியறிவுமிக்க தமிழ் அறிஞர்களை சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

5. பொருத்தமான, திறமையான, குறித்த பிறமொழியில் சிறந்த அறிவும், சுவாரசியமான எழுத்துத் திறனும் உள்ள அறிஞர்களை, மொழி வாரியாக,
சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

6.நிறுவனத்தின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில்
பல குறுங்கால, நீண்டகாலதிட்டங்களைத் தீட்டி, விரைந்து அமுல்ப்படுத்தல்.

7.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை சிறந்த தரத்தில் அச்சிட்டு
இலாபம் இல்லாதவகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடுதல்.

8."பிரிட்டிஷ் கவுன்சில்" எவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தையும்
ஆங்கில இலக்கியத்தையும் பரப்புகின்றதோ, அதே போல், பல நாடுகளிலும்
கிளைகள் திறந்து, தமிழ்மொழியையும், தமிழிலக்கியங்களையும் பயிற்றுவி்த்தல். தமிழ் தெரிந்திருத்தல் ஒரு பெருமைக்குரிய விடயம் என்ற எண்ணக்கருத்தை பிறநாட்டவரிடம் ஏற்படுத்தல்.

9.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை மின்னூலாக்கி, எவரும் இணையத்திலிருந்து இலகுவாக பதிவிற்க்கம் செய்யக்கூடியவாறு அமைத்தலுடன், வருங்காலத்தில் அறிவியற்புரட்சியால் வரும் எந்தவொரு உபயோகமான ஊடகங்களின் மூலமும் நம் தயாரிப்புக்கள் மற்றவரை இலகுவாக சென்றடையுமாறு செய்தல்.

மேற்கூறப்பட்ட தன்மைகளை உடைய தன்னார்வ தமிழ்த் தொண்டு நிறுவனங்கள், துளியாய்..., தூறலாய்..., மழையாய்..., பெருங்கடலாய்ப் பெருக வேண்டும் என்பதே தமிழுணர்வுள்ள தமிழர்களின் ஒரே பெருவிருப்பு!

-ஆதித்தன்

0 comments:

கருத்துரையிடுக