அருணகிரிநாதர் அருளிய முதல் திருப்புகழ்-"முத்தைத்தரு"

AM 11:55

ராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான........

பாடல்.......
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

"முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கு இறை "
முத்தினைப் போன்றொதொரு வெண்ணிறத்தின் எழிலுக்குஒத்ததாய் அமைந்தவொரு ஒளிமிகு இளஞ் சிரிப்புடனேதேவர்க்குத் தலைவனாம் இந்திரன் பெற்றிட்டதேவயானை எனும் கரிமகளின் நாயகனே!

"சத்திச் சரவண முத்திக்கு ஒரு வித்துக் குருபர"
அன்னையாம் உமையவள் அன்புடன் ஈன்றிட்ட சக்திவேல் எனும் ஆயுதத்தை கையினில் ஏந்துகின்றசரவணபவ என்கின்ற அறுமுகக் கடவுளே!முக்தியெனும் வீடுநிலை பெற வித்தாக இருப்பவரே!தந்தைக்கே ஒரு மந்திரத்தின் பொருள் சொல்லி தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்ற குருவான சிவனுக்கும் குருவான பெருங்கடவுளே!

"என ஓதும் முக்கட் பரமற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித்து இருவரும்முப்பத்து மு வர்க்கத்து அமரரும் ..... அடிபேணப்"
என்றெல்லாம் உனைத்துதிக்கும் முக்கண்ணன் பரமசிவனுக்கு முன்மைக்கெல்லாம் மூத்ததான முழுமுதற் பொருளானசுருதியெனும் வேதத்தின் முற்றுப் பொருளான
"ஓம்" என்னும் தனிமந்திரத்தை மடி மீதமர்ந்து உபதேசித்து அடிமுடி அறியவெண்ணி அங்குமிங்கும் அலைந்தபிரமன் திருமால் இருவரும் கூடமுப்பத்து முக்கோடி தேவரும் சேர்ந்து நின்னடி பணிந்து வாழ்த்தி நின்றிடவும்,

"பத்துத்தலை தத்தக் கணை தொடு"
திக்குக்கொரு தலையெனப் பத்துத்தலை படைத்திட்ட இராவணனின் தலைகள் சிதறி வீழ அன்றங்கு ஓர் அம்பை விட்டு அவுணரை அழித்த,

"ஒற்றைக்கிரி மத்தைப் பொருது"
ஒப்புவமை இலாத மந்திரமெனும் மலையினைமத்தாகவே கொண்டு பாற்கடலைக் கடைந்திட்ட,

"ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்"
அன்றொருநாள் அண்ணன் தம்பிகளுக்கிடையே மூண்டதோர் பாரதப் போரின் பதின்மூன்றாம் நாளினிலே அதமத்தின் வழி நின்று அபிமன்யுவைக் கொன்ற ஜயத்திரதன் எனும் அரசர் கோமானை, "மறுநாள் மாலை சூரியன் மறைவதற்குள் என்மகனின் மறைவுக்குக் காரணமான ஜயத்திரதனைக் கொல்லானேயாகில், அக்கினியில் புகுந்து அன்றே உயிர் துறப்பேன்" என சூளுரைத்த பக்தனாகிய அர்ச்சுனனை காக்கவென 'போரிலே ஈடுபடேன்' எனும் வாக்கினையும் மறந்துதன் கையில் தாங்கியுள்ள சக்கரத்தை விட்டெறிந்துசூரியனைச் சிலகாலம் சயனிக்கச் செய்ததாலே வெளிவந்த சிந்துராசனாம் ஜயத்திரதனைவிரைவாகக் கொல்லச் செய்தருளி உதவிட்ட,

"பத்தற்கு இரதத்தைக் கடவிய"
இத்துணை வல்லமை இயல்புடனே படைத்திருந்தும் அத்தனையும் காட்டாமல் அடக்கமாக நண்பனுக்குத் தேரோட்ட இசைந்து தேர்ப்பாகனாய் வந்திட்ட

"பச்சைப் புயல்"
மரகதம் என்கின்ற பச்சைமணியின் நிறத்தினை ஒத்திட்ட, அன்பருக்கு அருளிடவே புயல் போல வந்தருளும் மரகத வண்ணன், பச்சைமாமணி வண்ணனும்

"மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ..... ஒருநாளே"
மெச்சுகின்ற பரம் பொருளே! என்னை நீ பரிவுடனே ரட்சித்து அருள் புரியும் ஒருநாளும்உண்டோ என நான் இறைஞ்சுகின்றேனே!

[இனி வரும் வரிகள் முருகன் அசுரருடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது]
"தித்தித்தெய ஒத்தப் பரிபுரநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்க நடிக்கக்"
தித்தித்தெய என்கின்ற தாளத்துக்கு இசைவாகமுத்துகள் அமைந்த சிலம்பினை அணிந்த நர்த்தனம் செய்கின்ற பதங்களை வைத்து பார்த்தவர் நடுங்கும் பத்திரகாளியும் எத்திக்கும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

"கழுகொடு ..... கழுது ஆடத்"
பிணங்களைக் கொத்தவெனக் காத்திருக்கும் கழுகுகளுடன் பிணந்தின்னும் பேய்களும் சேர்ந்தங்கு கூத்தாடவும்,

"திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப் பவுரிக்குத் த்ரிகடக ..... என ஓதக்"
எட்டுத் திக்கிலிருந்தும் இவ்வுலகைக் காத்திடும் அட்டப் பயிரவர் என்கின்ற எண்மரும் ஆட்டத்தில் அழகிய இக்கூத்தினுக்கு ஏற்ப தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்னுமோர் தாள ஓசையினைக் கூறிடவும்,

"கொத்துப்பறை கொட்டக்"
கூடவே தாரை, தமுக்கு, தப்பட்டம் என்கின்ற பற்பல பறைவாத்தியங்களையும் முன்சொன்ன தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்கின்ற அதே தாளத்தில் அழகுற முழங்கிடவும்,

"களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகுகுத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை கொட்புற்று எழ"
பலகாலம் வாழ்ந்திருந்து, பல போர்களைப் பார்த்திட்ட கிழமான முதிர்ந்த கோட்டான்களும் மகிழ்ந்து குக்குக்குகு குக்குக் குகுகுகு, "குத்திப் புதை", "புக்குப் பிடி" எனகூக்குரலிட்டுக் குழறி, வட்டமெனச் சுழன்று இட்டமுடன் மேலே எழுந்திடவும்,

"நட்புற்று அவுணரை வெட்டிப் பலி யிட்டுக்"
தனக்கு வரமளித்த சிவனாரின் மகனென்னும் இணக்கத்தை மறந்து பகைகொண்ட அசுரர்களைவெட்டிக்கொன்றங்கு குவித்துப் பலிகொண்டு,

"குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல ..... பெருமாளே."
அவுணர் குலத்துக்கு இசைவாய் நின்றிட்ட கிரௌஞ்சமெனும் மாமலையும் வேலாலே குத்துண்டு பொடிப்பொடியாய் உடைந்துபட அறவழியில் நின்றன்று அசுரருடன் போர் செய்த பெருமையிற் சிறந்தவரே!*************************************************************************************[அருஞ்சொற்பொருள்:
அத்திக்கிறை:: தெய்வயானை அம்மைக்குத் தலைவரே!;
சுருதி:: வேதம்;
ஒற்றைகிரி:: ஒப்பற்ற மந்தரமலை;
திகிரி: சக்கரம்;
பச்சைப்புயல்:: பச்சைமாமலை போல் மேனி கொண்ட திருமால்;
பரிபுர:: சிலம்புகள் அணிந்த;
கழுது:: பேய்கள்;
சித்ரப் பவுரி:: அழகிய கூத்து;
கொத்துப்பறை:: கூட்டமாக பல பறை வாத்தியங்கள்;
முதுகூகை:: கிழக்கோட்டான்;
கொட்பு:: சுழலுதல்;
அவுணர்:: அரக்கர்;
குலகிரி:: அசுரர்களின் குலத்துக்கு இயைந்த கிரௌஞ்ச மலை;
பொரவல:: போர் செய்ய வல்ல;
பெருமாள்:: பெருமை மிகுந்தவர் ]*************************************************************************************அருணாசலத்தில், அருணகிரிநாதர் முருகனிடமிருந்து, "சொல்லற; சும்மா இரு!" என உபதேசம் பெறுகிறார்.அதனைக் கேட்டு, சமாதியில் ஆழ்ந்த அருணகிரியார் முன் முருகப்பெருமான் மீண்டும் தோன்றி, "நம் புகழைப் பாடுக!" எனப் பணிக்கிறான்."என்ன சொல்லிப் பாடுவேன்? எப்படி உன்னை அழைப்பேன், கல்வியறிவு சிறிதுமில்லா இவ்வேழை" என அருணகிரியார் வேண்டுகிறார்."முத்தைத்தரு" எனத் தொடங்கிப் பாடு என செவ்வேட் பரமனும் அருள எழுந்ததே இந்தப் பாடல்.அதன் பின்னர் திறந்த வெள்ளம்தான் திருப்புகழ்!*************************************************************************************'மு' எனும் சொல்லைப் பிரித்தால் வருவது, ம்,உ,அ.இம்மூன்றும் சேர்ந்ததே பிரணவம் என்னும் ஓம் எனும் மந்திரம்.பிரணவத்தில் தொடங்கியே திருப்புகழ் அமைந்ததைக் கண்டு மகிழ்வோம்!*************************************************************************************வேலும் மயிலும் துணை!முருகன் அருள் முன்னிற்கும்!அருணகிரிநாதர் தாள் வாழ்க!*************************************************************************************
நன்றி- VSK ஆத்திகம் வலைப்பதிவு

3 comments:

பெயரில்லா சொன்னது…

Arumai! Arumai!
Arunagiri Nadharin matra paadalgalayum veliyittu arul thondu puriya vendum. Padalhalai audio file serthu ketkumpadiyaga irundhal mihavum punniyamaha pohum.

Sivagurunathan, G.

பெயரில்லா சொன்னது…

Arumai
kumar

பெயரில்லா சொன்னது…

Arunagriyaar paadalum, atharkkane vilakkamum arumai. ungal pane thodara vaalthukkal.

கருத்துரையிடுக