தடுமாறும் தமிழினம்!

PM 9:51

தமிழறிஞர்கள், கவிஞர்களால் மட்டுமே தமிழ் வாழும் என்ற நிலை மாறி, இன்று உலகெலாம் பரந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்த்து தமிழின் எதிர்காலம் நிற்கிறது. ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தக் கடப்பாடு இருக்கிறது. கிட்டத்தட்டஒன்பது கோடித்தமிழர்களில் இந்த நிலையைப்பற்றிச் சிந்திக்கின்றவர்களே மிகக்குறைவு என்பதே வருந்தத்தக்க உண்மை!

தமிழினத்தின் இன்றைய நிலையெண்ணி விம்மிக் கொதிக்கின்ற நெஞ்சங்களுக்கொரு ஆறுதலாக, தமிழை தம் உயிரென நேசிக்கின்ற மென்பொருளியலாளர்கள், இயக்குனர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்களின் வெளிவருகையும் அவர்களின் உணர்வார்ந்த செயற்பாடுகளும் தமிழின் எதிர்கால இருப்புக்கு அத்திவாரம் போட்டிருக்கின்றன. ஆனால் அத்திவாரங்கள் மாத்திரமே கட்டிடங்கள் ஆக முடியாது. உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் தமிழ் வளர்க்கும் பங்கு இருக்கின்றது.

மென்பொருளியலாளர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டுதிறனுடன் மென்பொருட்கள் அமைப்பதாலோ, இயக்குனர்கள் தமிழர்தம் பண்பாட்டுக் கோலங்களை திரையோவியங்கள் ஆக்குவதாலோ, அறிவியலாளர்கள் விஞ்ஞானக்கருத்துக்களை தமிழுக்குள் கொணர்வதனாலோ
உடனடியாக எதிர்காலப் பாதையின் மீதுள்ள முட்கள் அகற்றப்பட மாட்டாது.
வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்
மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை. பிற நாகரிக மோகங்களால் கட்டுண்டு கிடக்கின்ற பெரும்பான்மைத் தமிழர்சமுதாயம், தானே தன்னைக்கட்டிக்கொண்ட தளை அறுத்து மீளாவிடின், தமிழை ஓர் இருண்ட பாதைக்கு கைகாட்டி விடுகின்ற துரோகத்தனதுக்கு உடந்தையாகிப் போகக்கூடும்.

"என்ர பேத்தி இங்கிலீஸில வலு திறம்! தமிழ் கதைக்கிறதே இல்லை!" என்று பெருமை பேசுகிற எத்தனையோ (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து, முந்தோன்றிய) 'மூத்த' தமிழ்க்குடிமக்களை நான் வெள்ளவத்தைக்குள் கண்டிருக்கிறேன். எங்கேயாவது விருந்துக்கு போன இடங்களில் "அங்கிளுக்கு இங்கிலீஷ்ல றைம் சொல்லிக்காட்டுங்கோ!" என்று பிஞ்சுகளுக்கு அறிவுறுத்துவதில் பெருமைகொள்கின்ற பெற்றோர்களை பார்த்திருக்கிறேன்.
குரக்கன் புட்டையும் இட்டலிதோசையையும் மறுதலித்து, 'பீசா'வுக்காகவும் 'பர்கர்'க்காகவும் ஒற்றைக்காலில் நின்று அழுதுகுழறி ஊரைக்கூட்டும் வருங்காலத்தமிழர்களின் கொள்கைப்பிடிப்புணர்வை அநுபவித்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு பிறமொழிக்கலாசாரம் எம்மிடையே ஊறிப்போய்க்கிடக்கின்றதென்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் பொழுது, நெஞ்சம் வெந்துபோகிறது. தமிழுக்குள் வந்து கலந்த, இருபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் மலையாளம் உருவாகி சேரநாட்டுத்தமிழர்கள் நம்மிடமிருந்து பிரிந்து மலையாளிகளானார்கள். ஐம்பது சதவிகித சமஸ்கிருதத்தினால் கன்னடர்கள் உருவாகி, பொன்னி நதியாம் காவிரியை தம்முடமை என்றார்கள். எழுபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் தெலுங்கு பிறந்து ஆந்திரர்களாய் அந்நியப்பட்டார்கள். ஆக, இந்த வேற்றுமொழி ஊடுருவல்
இல்லாது போயிருப்பின், இன்றைய காலத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து கோடிபேர்களைக்கொண்டதாய், தமிழ்ச்சமுதாயம் திகழ்ந்திருக்கும். இன்று சாதாரணவிடயமாக கருதப்படும் மொழிஊடுருவலினால், எத்தனை கோடி தமிழ்ச்சகோதரர்களை இழந்திருக்கின்றோம் என ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். காலத்தின் கரங்களால் இதே கதை மீண்டும் எழுதப்படலாம். இந்தப்போக்கு தொடர்ந்திடின், மீண்டும் ஒரு சமுதாய இழப்பை எம்மினம் எதிர்நோக்கும். எந்தச்சூழ்நிலையிலும் நம்முடைய இழப்புகளுக்கு நாம்தான் காரணமாயிருக்கிறோம்.

வடமொழிகூடக் கலவாத இனிய தமிழ்ப்பெயர்களை குழந்தைகளுக்கு பெற்றவர்கள் வைக்கவெண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க, ஆங்கிலத்தில் தொடங்கி கிரேக்கமொழி வரை அலசி, அர்த்தம் தெரியாத கவர்ச்சிச்சொற்களை பெயரென்று இட்டுமகிழ்கின்ற பெற்றோர்பெருந்தகைகளை நோக்கி என் சுட்டுவிரல் குற்றம் சாட்டுகிறது. பிஞ்சுப்பருவத்திலேயே தமிழர்தம் பண்பாட்டுக்கோலங்களில் இருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தி, பிறநாகரிக அடிமைமோகம் ஊட்டுகிற நீங்கள், எந்த உரிமையை வைத்துக்கொண்டு உங்களை தமிழர்களாய் அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள்?

பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று. அது அவசியமானதும் கூட.
ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது. எந்தவொரு செயலும் பதியப்பட்டு நாளைய வரலாறாகக்கூடிய இன்றைய காலகட்டத்தில், தம் நிலை மறந்த தமிழர்களின் வாழ்வு, வருங்காலத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் போய் விடக்கூடாது என்ற அச்சம் வேர் விட்டு வளர்கிறது.

தமிழ்மறந்து வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் மூலமாக, எதிர்காலத்தில், மாபெரும் பழமைப்பாரம்பரியம் மிக்க தமிழினத்திலிருந்து விலகல் உற்று அனாதைகளாக எம் இரத்தச்சொந்தங்கள் அலைவதற்கு உடன்படுகின்ற, அந்தக் கயமைத்தனத்தை கொன்றொழித்து, விட்ட பிழைகளைத் திருத்துவதற்காய் என் இருகை கூப்பி உங்கள் அனைவரையும் வேண்டி அழைக்கின்றேன். எட்டப்பராய்ப் போவதும், எழுந்திங்கு வருவதும் உங்கள் கையில்!!!

அன்புடன்,
ஆதித்தன்.
29-01-2008. கொழும்பு.

கவர்னர் விஜயம் - [அமரர் கல்கியின் படைப்பு]

PM 9:41

1
ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் மத்தியான போஜனம் ஆன பின்னர், வழக்கம்போல் சாய்வு நாற்காலியில் படுத்துக் கொண்டு பத்திரிகையைப் பிரித்துப் புரட்டினார். தலைப்புகளை மட்டும் பார்த்துக் கொண்டே போன அவர், "பொய்கையாற்றுத் தேக்கம்" "கவர்னர் அஸ்த்திவாரக்கல் நாட்டுவார்" என்னும் தலைப்புகளைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். செட்டியாருக்கு மயிர் கூச்சல் உண்டாயிற்று. மார்பு சிறிது நேரம் 'பட்' 'பட்' என்று அடித்துக் கொண்டது. சற்று சமாளித்துக் கொண்டு அத்தலைப்புகளின் கீழ் இருந்த செய்தியை முற்றும் படித்தார். அம்மாதம் 20ம் நாள் காலை 7 மணிக்கு கவர்னர் துரை .... ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பொய்கையற்றுத் தேக்கத்துக்கு மோட்டாரில் செல்வாரென்பதும், மற்றும் பலவிவரங்களும் இருந்தன. செட்டியார் உடனே தமது பிரதம காரியஸ்தர் ஜெயராமையரைக் கூப்பிட்டனுப்பினார். காரியஸ்தர் வந்து சேர்ந்ததும், "ஐயரே, சங்கதி தெரியுமா?" என்றார்.

"தெரியாதே! என்ன விசேஷம்?"

"உமக்கேனையா தெரியும்? இதற்குத்தான் பத்திரிகை படியுமென்று உமக்குப் படித்துப் படித்துச் சொல்கிறேன். வருஷத்தில் ரூ.250 செலவழித்து இவ்வளவு பத்திரிகைகள் தருவிக்கிறோமோ, பின் எதற்காக? நான் மட்டும் ஜாக்கிரதையாகப் படித்துக் கொண்டு வராவிட்டால் இப்போது என்ன ஆகியிருக்கும்?"

"விஷயம் என்னவென்று எஜமான் சொல்லவில்லையே?"

"நம்மூருக்கு 20-ந்தேதி கவர்னர் வருகிறார்!"

காரியஸ்தர் இடி விழுந்தது போல் வாயைப் பெரிதாகத் திறந்தார். "ஓ ஓ..." என்ற சத்தத்தைத் தவிர வேறு வார்த்தை அவர் வாயினின்றும் வரவில்லை.

"சரி, மேலே என்ன செய்கிறது?" என்று செட்டியார் கேட்டார்.

"எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட வேண்டியது தான்."

"20-ந்தேதி காலை ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். நமது மோட்டார் வண்டியில் ஒரு தூசு இல்லாமல் பளபளவென்று தேய்த்து வைக்கச் சொல்லும்."

"பார்த்தீர்களா? நான் பிடிவாதமாக மோட்டார் வண்டி வாங்கத்தான் வேண்டுமென்றது இப்போது எவ்வளவு பயன்படுகிறது?"

"இந்த முன்யோசனைக்காகத்தானே ஐயரே உம்மிடத்தில் எனக்கு இவ்வளவு பிரியம்? இருக்கட்டும். நமது வீட்டு வாசலை அலங்கரிக்க வேண்டாமா?"


"நமது வீதி வழியாகக் கவர்னர் போகிறாரா?"

"நிச்சயமில்லை. ஒரு வேளை ஸ்டேஷனில் இறங்கி நேரே போய்விடலாம். கலெக்டர் துரையிடம் சொல்லி நமது வீதி வழியாய்ப் போக ஏற்பாடு செய்ய வேண்டும்."

"முடியாவிட்டாலும் பாதகமில்லை. எப்படியும் நமது வீடு அலங்கரிக்கப்பட்டிருந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிடுமல்லவா?"

"அதுவும் உண்மைதான். இருக்கட்டும். கூர்மாவதாரம் ஐயங்காருக்கு இச்செய்தி தெரியாமலிருக்க வேண்டுமே? அவர் தினம் பத்திரிகை என்னைப்போல் கவனமாகப் படிக்கிறாரா?"

"அவருக்குத் தெரிந்தாலும் பாதகமில்லை. தாங்கள் யோசனை செய்ய வேண்டாம். முதலில் அவரிடம் மோட்டார் கிடையாது. பழைய கர்நாடக கோச்சு வண்டியில்தான் அவர் வரவேண்டும். மேலும் தங்களுக்கு நினைவில்லையா? கலெக்டர் தர்பாரிலே அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டபோது, அவருடைய வேஷத்தையும், அவர் திரும்பத் திரும்பச் சலாம் போட்டதையும் பார்த்து எல்லாரும் 'கொல்' என்று சிரிக்கவில்லையா? அந்த மாதிரிதான் இப்போதும் ஆகும்" என்றார் காரியஸ்தர்.

அச்சம்பவத்தை நினைத்துச் செட்டியார் இப்போதும் சற்று நகைத்தார். "இருந்தாலும், நாம் வீடு அலங்காரம் செய்யும் விஷயம் அவருக்குத் தெரியக்கூடாது. எல்லா ஏற்பாடும் செய்து தயாராய் வைத்துக் கொண்டு, 19-ந்தேதி இரவு பத்து மணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவோம். ஐயங்காரைக் காலையில் எழுந்து விழிக்கும்படிச் செய்யலாம்" என்றார்.

இன்னும் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்பதைப் பற்றிச் செட்டியாரும் காரியஸ்தரும் நீண்ட நேரம் யோசித்தார்கள். மறுநாள் நடக்கும் நகரசபை கூட்டத்தில் கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தைத் தாம் கொண்டு வரப்போவதாகச் செட்டியார் எழுதி நகர சபையின் தலைவருக்கனுப்பினார். பின்னர், காரியஸ்தர் தமது காரியத்தைப் பார்க்கச் சென்றார்.


2

ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் பெரிய வியாபாரி. அவர் வசித்த சிறு பட்டணத்தில் மூன்று மாடி வைத்த மாளிகை அவர் ஒருவருக்கே உண்டு. இளமையில் அவர் ஒரு ஏழையாகவே இருந்தார். முதலில் ஓர் இரும்புக் கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். லக்ஷ்மிதேவியின் கடைக் கண் பார்வை அவர் மீது விழுந்தது. தனிக்கடை வைத்து வியாபாரம் நடத்தவே, செல்வம் நாளுக்கு நாள் பெருகிற்று. மகாயுத்தத்திற்குச் சற்று முன்பு ஏராளமான இரும்புச் சரக்குகள் அவருடைய கடையில் தங்கியிருந்தன. யுத்தம் ஆரம்பித்த பின்னர், இரும்புச் சாமான்களின் விலை இருமடங்கு, மும்மடங்காயிற்று. செட்டியார் ஒரேயடியாக லட்சாதிபதியாகிவிட்டார். பின்னர், கௌரவங்களில் ஆசை விழுந்தது. அடுத்த வீட்டு வக்கீல் ராவ்பகதூர் கூர்மாவதாரம் ஐயங்காரைத் தமது வாழ்க்கை உதாரணமாகக் கொண்டார். நடை, உடை, பாவனைகளில் அவரைப் பின்பற்றினார். ஆங்கில ஆசான் ஒருவரை அமர்த்தி ஆங்கிலம் கற்றுக் கொண்டார். நாகரிகவாழ்க்கைக்குரிய ஆடம்பரங்களனைத்தையும் ஒவ்வொன்றாகக் கைக்கொண்டார். உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி விருந்து நடத்தினார். பெருந்தொகை செலவு செய்து நகரசபை அங்கத்தினராகவும் ஆனார். இப்போது அவருடைய மனம் முழுவதும் 'ராவ்பகதூர்' பட்டத்தைப் பற்றி நின்றது. இதனோடு, தாம் ராவ் பகதூர் பட்டம் பெறுவதற்குள், ஐயங்கார், மேல்வகுப்புக்கு, அதாவது திவான் பகதூர் பட்டத்துக்குப் போய்விடாமலிருக்க வேண்டுமே என்ற கவலையும் அவருக்குண்டு. எனவே, கவர்னர் தமது ஊருக்கு விஜயம் செய்யும்போது ஐயங்காரை எந்த விஷயத்திலாவது முந்திக் கொண்டு கவர்னரின் கவனத்தைக் கவர்ந்து பட்டம் பெற்றுவிட வேண்டுமென்பது அவருடைய நோக்கம். மேலே குறிப்பிட்ட சம்பாஷணையில் கூர்மாவதாரம் ஐயங்காரின் பெயர் அடிக்கடி அடி பட்டதற்கு இதுதான் காரணமாகும்.

மறுநாள், ஸ்ரீமான் செட்டியார், மகிழ்ச்சி ததும்பிய முகத்துடனே நகரசபைக் கூட்டத்திற்குச் சென்றார். கவர்னருக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று தீர்மானத்தைப் பிரேரணை செய்து பேசுவதற்கு ஒரு பிரசங்கத்தைத் தயாரித்துத் தமது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருந்தார். அப்பிரசங்கத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதல் பகுதியிலே, இந்தியாவுக்கு ஆங்கில ஆட்சியின் பயனாக ஏற்பட்ட நன்மைகளைப் பற்றி வருணித்திருந்தார். இரண்டாவது பகுதியில் கவர்னர் துரையின் பூர்வோத்தரங்கள், குலப்பெருமை, குணச்சிறப்பு மற்றும் கல்யாண குணங்கள் எல்லாவற்றையும் பற்றி விரித்துக் கூறியிருந்தார். மூன்றாம் பகுதியில் கவர்னர் துரை இம்மாகாணத்தில் வந்து பதவியில் அமர்ந்த பின்னர் செய்த செய்யாத எல்லா நன்மைகளையும் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் மேலான கவனத்துக்குத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது தமது வருந்தத்தக்க கடமையாயிருக்கிறதென்றும், அவருடைய ஆதிக்கத்தில் இராஜ விசுவாசிகளுக்கு ஆதரவு போதாதென்றும், பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் ஆசாமிகளின் யோக்கியதாம்சங்களைச் சற்றுக் கவனித்து கருணை புரியவேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இந்தப் பிரசங்கத்திற்கு நகல்கள் எடுத்துத் தமது காரியஸ்தர் மூலம் எல்லாப் பத்திரிகை நிருபர்களுக்கும் அனுப்பி, பிரசங்கம் முழுவதையும் பத்திரிகைகளுக்கு தந்தியில் அனுப்பும் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததுடன், கவர்னர் விஜயத்துக்கு மறுநாள் தமது வீட்டுக்கு வந்து தம்மைக் கண்டுபோகும்படியும் சொல்லியனுப்பினார்.


ஆனால், அந்தோ! அவர் நகரசபைக் கட்டிடத்தை அடைந்து ஆசனத்திலமர்ந்ததும், அவர் மகிழ்ச்சி அவ்வளவும் துயரமாகவும், கோபமாகவும் மாறிற்று. ஏனெனில், ராவ்பகதூர் ஐயங்கார் தம்மை முந்திக்கொண்டு கவர்னர் வரவேற்புத் தீர்மானம் கொண்டு வருவதாக முன்னாடியே அறிவித்துவிட்டாரென்றும், ஆதலால் அவருடைய தீர்மானந்தான் முதலில் வருமென்றும் தெரிய வந்தன. ஆனாலும் செட்டியார் தோல்வியைக் கண்டு அஞ்சி விடுபவரல்லர். முயற்சி திருவினையாக்குவதை அவர் தமது வாழ்க்கையில் கண்டறிந்தவர். எனவே ஐயங்காருக்கு அடுத்தாற்போல் தாமே தீர்மானம் அனுப்பியிருந்ததால் ஐயங்காரின் தீர்மானத்தை ஆமோதிக்கும் உரிமையாவது தமக்கு அளிக்க வேண்டுமெனப் போராடி அவர் வெற்றியடைந்தார். அதன்பின் தீர்மானத்தை ஆமோதிக்கும் வாயிலாக, தாம் எழுதி வைத்திருந்த பிரசங்கம் முழுவதையும் படித்துவிட்டார்.

செட்டியார் மறுநாள் தபாலை ஆவலுடன் எதிர்பார்த்திருந்து வந்ததும் பத்திரிகைகளை உடைத்துப் பிரித்தும் பார்த்தார். அந்தோ! அவர் ஏமாற்றத்தை என்னவென்று சொல்வது? ஒரு பத்திரிகையிலாவது இவருடைய பிரசங்கம் வெளியாகவில்லை. "ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியார் தீர்மானத்தை ஆமோதித்தார்" என்ற பாடமே எல்லாப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. செட்டியாரின் பிரசங்கத்தைப் பத்திரிகைகளுக்கு அனுப்பாமலிருப்பதற்கு வேண்டிய வேலை முன்னமேயே ஐயங்கார் செய்துவிட்டது, பாவம் அவருக்குத் தெரியாது.

அவர் உலகிலுள்ள எல்லாரையும், கடவுளையுங்கூடச் சேர்த்துத் திட்டிக்கொண்டிருக்கையில், காரியஸ்தர் வந்து சேர்ந்தார். அவர் கொண்டு வந்த செய்தி செட்டியாருக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது.

"சங்கதி கேட்டீர்களா? கவர்னர் துரை காலை ஏழு மணிக்குத்தான் ஸ்டேஷனுக்கு வரப்போகிறாராம். ஒன்பது மணிக்குப் பொய்கையாற்றுத் தேக்கத்துக்கு அஸ்திவாரக்கல் நாட்டுவதற்குத் திட்டம் செய்யப் பட்டிருக்கிறதாம். சுமார் ஐம்பது மைல் இதற்கிடையில் பிரயாணஞ் செய்தாக வேண்டும். ஆதலால் நகரசபை உபசாரப் பத்திரத்தை, நகரமண்டபத்துக்கு வந்தோ அல்லது ரயில்வே ஸ்டேஷனிலேயோ பெற்றுக் கொள்ளுவதற்கு நேரமில்லையாம். இச்செய்தி இப்போதுதான் கவர்னரின் அந்தரங்க காரியதரிசியிடமிருந்து வந்ததாம். தாங்கள் அத்தீர்மானத்தைப் பிரேரணை செய்யாததே நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இப்போது எவ்வளவு அவமானம் பாருங்கள்" என்றார் காரியஸ்தர்.

"ஆ! கூர்மாவதாரம் ஐயங்காருக்கு நன்றாய் வேண்டும். முந்திக் கொள்ளப் பார்த்தாரல்லவா" என்று கூறிச் செட்டியார் உவகையடைந்தார்.

"ஆனாலும், 20-ந்தேதி காலையில் ஸ்டேஷனுக்குப் போக வேண்டுமல்லவா?" என்று காரியஸ்தர் கேட்டார்.

"சந்தேகமில்லாமல், மற்ற எல்லா ஏற்பாடுகளும் முன்னரே திட்டம் செய்துள்ளபடி நடத்த வேண்டியதே."


3

கடைசியில், குறிப்பிட்ட தினம் வந்தது. சிவகுருநாதஞ் செட்டியார் அதிகாலையிலேயே எழுந்திருந்து ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டார். பின்னர், நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று அரைமணி நேரம் உடை தரித்துக் கொண்டார். அவருடைய அருமை மனையாள், அருகிலிருந்து துணிகளைத் தட்டிக் கொடுத்தும், நகைகளைத் துடைத்துக் கொடுத்தும் உதவி புரிந்தாள். அலங்காரம் செய்து கொண்டு முடிந்ததும், காரியஸ்தரை விட்டு மோட்டாரைக் கொட்டகையிலிருந்து கொண்டு வரச் சொன்னார். செட்டியாரின் மனைவி வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். நல்ல சகுனமான தருணத்தில் நல்ல நேரத்தில் செட்டியார் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டு மோட்டாரில் அமர்ந்தார். மோட்டார் வண்டியின் முனையில் பெரியதொரு யூனியன் ஜாக் கொடி அழகாக ஆடிக்கொண்டிருந்தது. அடுத்த ஐயங்கார் வீட்டைப் பார்த்ததும், செட்டியாருக்குக் கொஞ்சம் 'சொரேல்' என்றது. தம்மைப் போலவே ஐயங்காரும், முதல் நாள் மாலை வரை பேசாமலிருந்துவிட்டு, இரவுக்கிரவே வீட்டு வாசலைத் தோரணங்களாலும் கொடிகளாலும் அலங்கரித்திருப்பதைக் கண்டார். இதற்குள் மோட்டார் வண்டி புறப்பட்டு விட்டபடியால், அதிகமாகச் சிந்திப்பதற்கு நேரம் இல்லை. ஐந்து நிமிஷங்களுக்கெல்லாம் வண்டி ரயில்வே ஸ்டேஷனை அடைந்தது. தமக்கு முன்னால் ஐயங்கார் அங்கு வந்து தயாராகக் காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உள்ளுக்குள் அவர்களிடையே இவ்வளவு போட்டி நடந்து கொண்டு வந்ததாயினும் வெளிக்கு அவர்கள் அத்தியந்த நண்பர்கள். எனவே செட்டியார் "என்ன ஐயங்கார்வாள்! ஏது இவ்வளவு அதிகாலையில் விஜயம் செய்தது?" என்று கேட்டார். "இங்கு ஒரு சிறு காரியமாக வந்தேன். தாங்கள் சென்னைப் பட்டணம் போவதாகக் கேள்விப்பட்டேன். அதற்காகத்தான் ஸ்டேஷனுக்கு வந்தீர்களோ?" என்று கேலி செய்யும் பாவனையாக ஐயங்கார் வினவினார். "அதிருக்கட்டும். தாங்கள் வீட்டு வாசலை இரவுக்கிரவே அலங்காரம் செய்திருப்பதாகக் காண்கிறதே! என்ன விசேஷம்?" என்றார் செட்டியார். "தாங்கள் வீட்டு வாசலிலும் இன்று காலையில் தோரணங்களைப் பார்த்தேன். தங்களுக்கு இன்று சஷ்டியப்த பூர்த்தி விவாகம் என்று சொன்னார்கள். அப்படித்தானோ" என்று கிருதக்காய்க் கேட்டார் ஐயங்கார். செட்டியார் இதற்கு கடுமையாகப் பதில் சொல்ல எண்ணினார். ஆனால் அதற்குள் ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கூட்டம் வந்து நின்றுவிட்டது. நகரசபை அங்கத்தினர்களும், சில வக்கீல்மார்களும், உத்தியோகஸ்தர்களும், பந்தோபஸ்துக்காக வந்த போலீஸ்காரர்களும், பகிஷ்காரப் பிரசாரம் செய்ய வந்து ஏதோ இந்தத் தமாஷையும் கொஞ்சம் பார்க்கலாமே என்று உள் நுழைந்த தொண்டர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த இரகசியப் போலீசாரும், புகைவண்டி நிலைய மேடையில் எள்ளுப் போட்டால் கீழே விழாத வண்ணம் நெருங்கிக் கூடினார்கள். எல்லாரும் கண் பூத்துப் போகும்படி ரயில் பாதையை நோக்கிய வண்ணமாய் நின்றார்கள்.


கடைசியாக, கவர்னர் துரையின் ஸ்பெஷல் வண்டி வந்து சேர்ந்தது. போலீஸ் அதிகாரிகள் அங்கும் இங்கும் அலைந்து அமைதியை நிலைநாட்டினார்கள். கவர்னர் பிரபு வண்டியை விட்டுக் கீழிறங்கினார். அவர் போவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது. என்னென்னவோ மனோராஜ்யம் செய்துகொண்டு அங்கு வந்திருந்தவர் அனைவரும், அந்த வினாடியில் கெட்டியாக மூச்சுக்கூட விடாமல், மார்பு படபடவென்று அடித்துக்கொள்ள மிக்க ஆவலுடன் அவரை நோக்கி நின்றனர். எங்கே துரை முகமெடுத்துக்கூடப் பாராமல் போய்விடுவாரோ என்று எண்ணி அவர்கள் நடுநடுங்கினார்கள். அப்போது அங்கிருந்தவர்களுள் ஒருவர் உணர்ச்சி மேலீட்டினால் மூர்ச்சையாகி விட்டாரென்றும், ஆயினும் மூர்ச்சை நிலையிலும் அவருடைய தீவிர இராஜபக்தியின் காரணமாக, கீழே விழுந்து குழப்பம் விளைவியாமல் தூணைப் பிடித்துக் கொண்டு மறைவில் நின்று கொண்டிருந்தாரென்றும், பின்னால் தெரியவந்தன.

நிற்க, துரை கீழிறங்கியதும், தொப்பியை மரியாதைக் குறியாகக் கையில் எடுத்துக்கொண்டு, ஒரு மூலையிலிருந்து வரிசையாக எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்தார். அங்கிருந்தோர் அனைவரும், தங்கள் வாழ்வின் இலட்சியம் நிறைவேறி விட்டதென்னும் எண்ணங் கொண்டனர். அவருடைய பார்வை தம்மீது விழக்கூடிய கணத்திலும் குறைந்த நேரத்தில் தாம் சலாம் செய்யத் தவறி விட்டால் என்ன செய்வதென்று எல்லாருக்கும் பயம். எனவே, முதலில் அவர் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து, அவர் கண்கள் கடைசி வரை சென்று முடித்துப் பிறகு அவர் நடக்கத் தொடங்கிய வரையில், அங்கிருந்தோர் அனைவரும் சலாம் செய்து கொண்டேயிருந்தனர். மேலக் காற்று, வீசி அடிக்கும்போது மரங்கள் நிறைந்த தோப்பில் எவ்வாறு கிளைகள் இடையீடின்றி ஆடி அசைந்து கொண்டிருக்குமோ அவ்வாறு ஐந்து நிமிஷ நேரத்திற்கு அங்கிருந்தோர் அனைவருடைய கரங்களும் நெற்றிக்குச் சென்று கீழே வந்த வண்ணமாயிருந்தன.

இவ்விதம் ஒரு முறை இராஜ பார்வை பார்த்து விட்டுக் கவர்னர் துரை வேகமாக நடந்து போய் வெளியில் தயாராய் நின்ற மோட்டாரில் ஏறிச் சென்றார். அவரைத் தரிசிக்க வந்து கூடியிருந்தோர் எல்லோரும் தங்கள் தங்கள் இல்லங்களுக்கு ஏகினர். ஸ்ரீமான் சிவகுருநாதஞ் செட்டியாரும் சௌக்கியமாக வீடு போய்ச் சேர்ந்தார். உடனே அவருடைய மனைவி, குழந்தைகள், காரியஸ்தர், வேலைக்காரர்கள் எல்லாரும் சூழ்ந்து கொண்டு "என்ன நடந்தது?" என்று ஆவலுடன் கேட்டார்கள். செட்டியார் சற்று இளகிய மனம் கொண்டவர். இவ்வளவு பேருடைய உள்ளங்களையும் அவர் வீணில் புண்படுத்த விரும்பவில்லை. எனவே அவர், "இன்றைய விசேஷம் இவ்வளவு நன்றாக நடந்தேறியதற்காகக் குருக்களைக் கூப்பிட்டு அம்பிகைக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும்" என்றார். செட்டியாரின் மனைவி முதலியோர், இன்னும் மிகுந்த ஆவலுடன், "கவர்னர் தங்களுடன் பேசினாரா? தாங்கள் என்ன பதில் சொன்னீர்கள்? விசேஷம் என்ன நடந்தது?" என்று ஒரே மூச்சாகக் கேட்டனர். செட்டியார் சொன்னதாவது:- "கவர்னர் வண்டியை விட்டுக் கீழே இறங்கியதும், ஜில்லா கலெக்டர் முதலிய ஒருவர் இவருடன் சற்றுப் பேசிவிட்டு, நேரே என்னிடம் வந்தார். நான் கொஞ்சமாவது பயப்பட்டேன் என்கிறீர்களோ? இல்லவே இல்லை. என்னருகில் வந்ததும் துரை என் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டு 'செட்டியார்வாள்! தங்களைப் பற்றி நிரம்பவும் கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களும் தாங்கள் பந்து மித்திரர்களும் சுகந்தானே?' என்று கேட்டார். உங்களுக்குத்தான் தெரியுமே? நான் பேச ஆரம்பித்தால் இலேசில் விடுகிற பேர்வழியா? துரையவர்களே! தங்கள் ஆட்சியிலே எவ்வித குறைவுமின்றி வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஒரு விஷயத்தில்தான் தங்கள் அரசாங்கத்தின் மீது குறை சொல்ல வேண்டியதாயிருக்கிறது. பட்டங்கள் வழங்கும் விஷயத்தில் மட்டும் தாங்கள் தராதரங்களைக் கவனித்து வழங்குவதில்லை என்று நான்..."


"ஐயையோ! இவ்வளவு கடுமையாய் பேசி விட்டீர்களே? துரை கோபித்துக் கொள்ளவில்லையா?" என்று காரியஸ்தர் பரிந்து வினவினார்.

"ஹும் கோபித்துக் கொள்ளவா? உனக்கு என்ன தெரியும்? நான் இவ்வாறு சொன்னவுடன் கவர்னர் துரை என் கையை மீண்டும் பிடித்துக் கொண்டு 'செட்டியார்வாள், இந்த விஷயத்தை எனது கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக நிரம்ப வந்தனம். உடனே கவனித்துத் தக்கது செய்கிறேன்' என்று சொன்னார். அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் கரகோஷம் செய்தார்கள். ஆனால் நமது ராவ்பகதூர் ஐயங்காரைப் பார்க்க வேண்டுமே? அவர் முகத்தில் ஈயாடவில்லை. அவரை ஒருவரும் கவனிக்கவில்லை. ஒரு மூலையில் பேசாமல் நின்று கொண்டிருந்தார்" என்று செட்டியார் சரமாரியாகப் பொழிந்தார்.

அதே சமயத்தில் ராவபகதூர் கூர்மாவதாரம் ஐயங்கார் வீட்டு அந்தப்புரத்துக்கு யாராவது சென்று ஒட்டுக் கேட்டிருந்தால், ஸ்ரீமான் ஐயங்கார் தமது அருமைக் காதலியிடம், "ஆனால் சிவகுருநாதஞ் செட்டியாரைக் கவர்னர் முகமெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. பாவம்! சிவனே என்று இவர் மூலையில் நின்று கொண்டிருந்து விட்டுப் போய்ச் சேர்ந்தார்" என்று கூறி முடித்ததும் காதில் விழுந்திருக்கும்.

கம்பன் இயற்றிய "ஏரெழுபது" நூல்

PM 2:18

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். கம்பராமாயணத்தைப் போல ஏரெழுபது பிரபலம் அடையாவிடினும்
மிக அருமையான கவிதைகளால் உழவுத்தொழிலின் சிறப்பை சொல்கின்றது.
இந்நூல் பிரபலம் அடையாததைப்ப் பற்றி கவலை கொள்வதை விட இக்காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்து அருகி வருவதை எண்ணியே பெருங்கவலை ஏற்படுகின்றது. தமிழர்பெருமக்கள் இதனை கருத்தில் கொள்வார்களாக.
- ஆதித்தன்


ஏரெழுபது

பாயிரம்

1. கணபதி வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4

5. சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6

7. வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.


நூல்

1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10

2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11

3. ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12

4. அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15

7. நுகத்தடிச் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17

9. நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18

10. பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19

11. தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20


12. கொழுச் சிறப்பு

வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே. 21

13. கொழு ஆணியின் சிறப்பு

செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுநீரா நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே. 22

14. தாற்றுக்கோல் சிறப்பு

வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. 23

15. உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 24

16. எருதின் கழுத்துக்கறை சிறப்பு

கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே. 25

17. எருது பூட்டுதற் சிறப்பு

ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. 26

18. ஏர் பூட்டலின் சிறப்பு

பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே. 27

19. ஏர் ஓட்டுதலின் சிறப்பு

கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே. 28

20. உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே. 29

21. உழவின் சிறப்பு

அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. 30


22. உழுத சாலின் சிறப்பு

பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. 31

23. மண்வெட்டியின் சிறப்பு

மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே. 32

24. வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 33

25. எருவிடுதலின் சிறப்பு

அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. 34

26. சேறு செய்தற் சிறப்பு

வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. 35

27. பரம்படித்தலின் சிறப்பு

வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்பிடிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. 36

28. வித்திடுதலின் சிறப்பு

பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 37

29. முளைத்திறனின் சிறப்பு

திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 38

30. நாற்றங்காலின் சிறப்பு

ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றடைகடலைத் தானன்றோ?
வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. 39

31. நாற்று பறித்தலின் சிறப்பு

வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. 40


32. நாற்று முடி சுமந்த சிறப்பு

மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. 41

33. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு

தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ? 42

34. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு

வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 43

35. பாங்கான நடவின் சிறப்பு

மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே, கற்றாரே! 44

36. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 45

37. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு

ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. 46

38. வேளாண்மை முதலாதலின் சிறப்பு

அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. 47

39. பயிர் வளர்திறத்தின் சிறப்பு

சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. 48

40. நாளும் நீர் இறைத்தலின் சிறப்பு

காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 49

41. பாய்ச்சும் நீரின் சிறப்பு

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயர் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 50


42. நிலம் திருத்தலின் சிறப்பு

மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே. 51

43. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு

எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. 52

44. பைங்கூழ்ச் சிறப்பு

கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே. 53

45. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு

கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. 54

46. களை களைதற் சிறப்பு

வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 55

47. கருப்பிடித்தலின் சிறப்பு

திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. 56

48. கதிர் முதிர்தலின் சிறப்பு

ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. 57

49. பசுங் கதிர்ச் சிறப்பு

முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. 58

50. கதிரின் தலைவளைதற் சிறப்பு

அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவநயும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. 59

51. சோறிடுஞ் சிறப்பு

அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே. 60


52 அறுவடை கொநடையின் சிறப்பு

அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படிவு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. 61

53. அரி சூட்டின் சிறப்பு

கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேறாதே. 62

54. களம் செய்தலின் சிறப்பு

சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே. 63

55. போர் அடிவலியின் சிறப்பு

கடிசூட்டு மலர்வாளி காமனுடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே. 64

56. அடிகோலின் சிறப்பு

முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டின்மிகுங் கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தமர்ந்து செந்நெற் சூடுமிதித் திடுங்கோலே. 65

57. போர் செய்தற் சிறப்பு

காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே. 66

58. போர்க்களப் பாடுதற் சிறப்பு

வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. 67

59. இரப்பவரும் தோற்காச் சிறப்பு

பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே. 68

60. போர் செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு

நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே. 69

61. எருது மிதித்தலின் சிறப்பு

எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவளரு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே. 70


62. நெற்பொலியின் சிறப்பு

விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 71

63. நெற்குவியலின் சிறப்பு

தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. 72

64. நெற்கூடையின் சிறப்பு

ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்த முயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 73

65. பொலி தூற்றுங் கூடைச் சிறப்பு

வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. 74

66. பொலி கோலின் சிறப்பு

சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 75

67. நெற்கோட்டையின் சிறப்பு

திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. 76

68. கல்லறைச் சிறப்பு

தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல். 77

69. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு

அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. 78

70. நன்மங்கல வாழ்த்து

பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. 79

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு-1

AM 6:27

1. வரவேற்புக்கு மறுமொழி [செப்டம்பர் 11, 1893]

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

சந்திரமதி - [அமரர் கல்கியின் படைப்பு]

AM 6:12

1

சில நாளைக்கு முன்பு, வங்காளி பாஷையிலிருந்து மொழி பெயர்த்த "காதல் சக்கரம்" என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தபோது, எங்கள் ஊரில் பல வருஷங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. மேற்படி கட்டுரை விஷயத்துக்கும், நான் சொல்லப் போகும் சம்பவத்துக்கும் அதிக சம்பந்தமில்லையென்பது உண்மைதான். ஆனால் தலைப்பு மட்டும் இரண்டுக்கும் பொருத்தமானது. நான் சொல்லப்போவது ஒரு காதல் சம்பவமே. அதற்கு, ஒரு சக்கரம் அன்று - நாலு சக்கரங்கள் உதவி செய்தன. என்னுடைய கதையில் ஒரு மோட்டார் வண்டி முக்கியமான ஸ்தானத்தை வகிக்கிறது.

தயவு செய்து இருபத்தைந்து வருஷம் பின்னால் போங்கள். அப்போது என்னுடைய பள்ளிக்கூடத்தில் இப்போதுள்ளது போன்ற ஆடம்பரம் ஒன்றும் கிடையாது. கட்டிடம் இல்லை; பெஞ்சு, நாற்காலி கூட இல்லை. கீற்றுக் கொட்டகையில் தான் பள்ளிக்கூடம் நடந்தது. கீழே மணலைக் கொட்டிப் பரப்பியிருந்தது. வெறும் பலகைகளை வரிசையாக போட்டுப் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அந்தக் காலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதென்றால் எனக்கு வெகு உற்சாகமிருந்தது; பிள்ளைகளும் உற்சாகமாகப் படித்தார்கள்.

நான் சொல்லும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் முப்பது குழந்தைகள் இருந்தன. அக்கிரகாரத்திலிருந்து ஐந்து குழந்தைகள்; வேளாளத் தெருவிலிருந்து எழெட்டுப் பேர்; பாக்கிக் குழந்தைகள் குடியானத் தெருவிலிருந்து வந்தன.

குடியானக் குழந்தைகளில் நாலைந்து பெண்களும் இருந்தார்கள். அவர்களில் ஒருத்திக்குச் சந்திரமதி என்று பெயர். அவள் நாட்டாண்மைக்கார நல்லானின் மகள். தாயில்லாக் குழந்தை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு பாரதியாரின் பின் வரும் வரிகள் ஞாபகத்துக்கு வரும்:

'பச்சைக் குழந்தையடி - கண்ணில்
பாவையடி சந்திரமதி
இச்சைக்கினிய மது - என்
இருவிழிக்குத் தேன்நிலவு.'

அவளுடைய முகத்தில் களை சொட்டிற்று. கருவண்டுகளைப் போன்ற அவளுடைய பரந்த கண்கள் யாருடைய உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும். தலை மயிரை அலட்சியமாய் எடுத்து ஒரு சொருக்குப் போட்டுக் கொண்டு வருவாள். அப்போது அவளைப் பார்த்தால் பண்டை காலத்துத் திறமை வாய்ந்த சிற்பி ஒருவன் சாமுத்திரிகா லட்சணத்தில் அணுவளவும் பிசகாமல் அமைத்த ஒரு சிலை உயிர் பெற்று நடந்து வருவது போல் தோன்றும்.

அழகைப் போலவே சமர்த்து. அவளுடைய வகுப்பில் அவள்தான் எப்போதும் முதலாவதாயிருப்பாள். அவளைப் பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தியபோது எனக்குண்டான துக்கத்தைச் சொல்லி முடியாது. நமது சமூக நிலைமையைப் பற்றி நினைத்து அடிக்கடி வருந்துவேன். வேறொரு தேசமாயிருந்தால், இந்த மாதிரி அழகும் சமர்த்துமுள்ள பெண்கள் வருங்காலத்தில் எவ்வளவோ முன்னுக்கு வருவார்கள். இந்நாட்டிலோ, சின்ன சாதி - பெரிய சாதி, ஏழை - பணக்காரன் முதலிய எவ்வளவோ வித்தியாசங்கள், கட்டுப்பாடுகள். பெண் குலத்தின் பெருமை பிரகாசிப்பதற்கு வழியே கிடையாது. வயதாகும்போது இந்தப் பெண்ணை யாராவது ஒரு குடிகாரன் கழுத்தில் கட்டிவிடுவார்கள்; அடியும் உதையும் பட்டு எப்படியோ காலத்தைக் கழித்து விட்டு, கடைசியில் எல்லாரும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்வாள். இவ்வாறெல்லாம் நான் எண்ணமிட்டதுண்டு.

நாலைந்து வருஷங்கள் சென்றன. சந்திரமதி நான் எதிர் பார்த்தது போலவே அழகு வடியும் இளமங்கையானாள். அவளுடைய கல்யாணமும் நான் எதிர்பார்த்தது போலவே நடக்குமென்று தோன்றிற்று. குளக்கரைக்கோ, ஆற்றங்கரைக்கோ நான் போகும்போது சில சமயம் சந்திரமதி எதிர்ப்படுவாள். "ஸார்! சௌக்கியந்தானா?" என்று கேட்பாள். எனக்கு உடம்பு பூரித்துப் போகும். ஒருநாள் காலை நேரத்தில் குளக்கரையில் இருந்த இலுப்பந்தோப்பில் தரையிலே புஷ்பப்பாவாடை விரித்தது போல உதிர்ந்திருந்த இலுப்பைப் பூக்களை அவள் திரட்டிக் கொண்டிருந்தாள். மேலே மரக்கிளைகளில் நானாவிதமான பட்சிகள் பாடிக்கொண்டிருந்தன. இலுப்பைப் பூவின் மனோகரமான மணம் கம்மென்று வீசிக்கொண்டிருந்தது! அந்தக் காட்சியும், கீதமும், மணமும் என்னைப் பூரணமாய் வசீகரித்தன. அவ்விடத்தில் சற்று நின்று, "என்ன, சந்திரமதி! உனக்குக் கல்யாணமாமே?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். அவளுடைய கண்களில் ஜலம் துளித்ததைக் கண்டதும், என்னுடைய சிரிப்பு சாம்பலாகிவிட்டது.

"ஸார்! நான் சொல்றதைக் கேளுங்கள். என்னை நீங்கள் கட்டிக் கொண்டு விடுங்கள். நான் வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாக வேலை செய்து கொண்டிருக்கிறேன்" என்றாள்.

எனக்கு அப்போது வயது ஐம்பது. ஆனாலும் நாம் இருபத்தைந்து வயது இளைஞனாயிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் உண்டாயிற்று. நான் மட்டும் வாலிபனாயிருந்திருந்தால், சந்திரமதியை அந்தக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கலியாணம் செய்து கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேனா? என்னுடைய சாதி, சம்பிரதாயம், குலம், கோத்திரம் எல்லாவற்றையும் அவளுக்காகத் தத்தம் செய்யத் தயாராயிருப்பேன். அவளுக்காக மோட்சத்தைக் கூடத் தியாகம் செய்வேன். ஆனால் என்ன பிரயோஜனம்? சீதைக்குச் சுயம்வரம் வைத்து ஜனகர், "உலகத்தில் ஆண்மையும் வீரமும் அற்று போய்விட்டனவா?" என்று கதறினாராமே, அந்த மாதிரி தான் நானும் "நம் தேசத்தில் வாலிபமும் தீரமும் நசித்துப் போய் விட்டனவா!" என்று நினைத்து வருந்தினேன்.


2

இப்போது, இந்தக் கதையில் சில புதிய பாத்திரங்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். அவர்களில் ஒருவன் தான் மேலே நான் குறிப்பிட்ட கறுப்பு மீசைக்காரன். அவனுக்கு வயது நாற்பத்தைந்துக்கு மேல் இருக்கும். ஆனால் தலைமயிருக்கும், மீசைக்கும் ஏதோ வர்ணம் தடவி, நரை விழுந்தது தெரியாமல் பாதுகாத்து வந்தான். அவனுக்குக் 'கறுப்பு மீசைக்காரன்' என்றும், 'அக்கரையான்' என்றும் பெயர் வழங்கி வந்தது. அக்கரைச் சீமையில் அவன் என்ன அக்கிரமம் செய்தானோ, யார் குடியைக் கெடுத்தானோ, நிறையப் பணத்துடன் நாலைந்து வருஷத்துக்கு முன்னால் எங்களூருக்கு வந்து சேர்ந்தான். கொஞ்சம் நிலமும் வாங்கியிருந்தான். நிலம் வாங்குவதற்கும் சாகுபடி செய்வதற்கும் நல்லான் அவனுக்கு உதவி செய்தான்.

நல்லான் ஊருக்கு நாட்டாண்மைக்காரனானாலும் சொத்து ஒன்றுமில்லாதவன். ஏதோ கொஞ்சம் இருந்ததைக் கள்ளுக்கடைக்குத் தொலைத்துவிட்டான். அக்கரையானும் அப்படியொன்றும் மதுவிலக்கில் தீவிரமானவனல்ல. ஆகவே, இருவருக்கும் சிநேகம் நாளுக்கு நாள் முதிர்ந்து வந்தது. கடைசியில் நல்லான் தன் பெண் சந்திரமதியைக் கறுப்பு மீசைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்துவிடப் போவதாய் ஊரில் ஒரு வதந்தி பிறந்தது.

நல்லானுடைய நோக்கம் என்னவோ அவ்வளவு கெட்டது என்று சொல்லமுடியாது. அக்கரையானுக்கு நல்ல சொத்திருந்தது. பெண்டாட்டியா, பிள்ளையா ஒன்றும் இல்லை. சந்திரமதியை அவனுக்குக் கட்டிக் கொடுத்தால், அவ்வளவு சொத்துக்கும் அவளே எஜமானியாவாள். எனவே, நல்லான் தன் பெண்ணின் நன்மையைத்தான் கோரினான். ஆனால் அவளுடைய மனநிலை இன்னதென்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லை; உணர முயற்சி செய்யவுமில்லை.

அவளுடைய மனநிலை எனக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அதைப் பூரணமாக அறிந்து கொண்டு விட்டதாகவே ஒரு சமயம் நான் எண்ணியதுண்டு. அது எவ்வளவு தவறான எண்ணமென்று பின்னால் தெரிந்தது. தலை நரைத்த கிழவனாகிய எனக்கு, இளம் பெண்ணின் ஹிருதயம் எவ்வாறு தெரியும்? நிற்க.

எங்கள் கிராமத்துக்கு அடுத்த கிராமத்தில் ஒரு பெரிய ஜமீன்தார் இருந்தார். அவருடைய பிள்ளைகள் சிறு பிள்ளைகளாயிருந்த போது என்னிடம் படித்தார்கள். பிறகு அவர்கள் சமீபத்திலுள்ள பட்டணத்துக்குப் போய் ஹைஸ்கூலில் சேர்ந்து படித்தார்கள். பட்டணத்து ஹைஸ்கூல்களின் சமாசாரந்தான் உங்களுக்குத் தெரியுமே? வருஷத்தில் பாதி நாளைக்குமேல் விடுமுறைதான். விடுமுறைக்காகப் பிள்ளைகள் ஊருக்கு வரும்போதெல்லாம் அவர்களை ஜமீன்தார் என்னிடம் அனுப்பி வைப்பார். இந்தப் பிள்ளைகளுடன் ஜமீன்தாரின் மைத்துனர் மகன் ஒருவனும் வருவான். அவன் பெயர் துரையப்பன். முதலிலே இந்தப் பையனை அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. டாப்பு ஜெரப்பு அதிகம்; ரொம்பக் கர்வக்காரன்; பெரியவர்களிடம் மட்டுமரியாதை கிடையாது. "ஐயோ! இந்த டம்பாச்சாரியோடு சேர்ந்து நம்முடைய ஜமீன்தாரின் நல்ல பிள்ளைகளும் கெட்டுப் போவார்களே!" என்று கவலைப்பட்டேன்.

ஆனால் நாளடைவில் அந்தப் பையன்மேல் இருந்த வெறுப்பு எனக்குக் குறைந்து வந்தது. அவன் மேல் அபிமானங்கூட உண்டாயிற்று. அதற்கு காரணம் என்னவென்று சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். என்னைப் பற்றிக் கூட ஒரு மாதிரி நினைக்கத் தொடங்குவீர்கள். ஆனாலும் உண்மையைச் சொல்லத்தானே வேண்டும்? துரையப்பனையும் சந்திரமதியையும் பற்றி ஊரில் வதந்தி உண்டாகிப் பரவிற்று. கோவிலிலும், குளக்கரையிலும், மாந்தோப்பிலும், களத்து மேட்டிலும் துரையப்பனும் சந்திரமதியும் சந்திப்பதாகப் பேச்சு ஏற்பட்டது. ஒன்றைப் பத்தாகச் சொல்லுவதுதான் நம்முடைய ஊர் வழக்கமாயிற்றே. ஆகையால், இந்தப் பேச்சை நான் முழுதும் நம்பவில்லை. ஆனாலும் அது உண்மையாயிருக்கக்கூடாதவென்று ஆசைப்பட்டேன். சந்திரமதிக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் வந்தாலும் தகும். எப்படியாவது அவள் கறுப்பு மீசைக்காரனுக்கு வாழ்க்கைப்படாமல் இருந்தால் நல்லது. துரையப்பன் பணக்காரனாயிருக்கலாம்; சந்திரமதி ஏழையாயிருக்கலாம். அவர்களுடைய சாதிகளிலும் ஏற்றத் தாழ்வு இருக்கலாம். இதனாலெல்லாம் என்ன மோசம்? அவர்கள் இருவரும் கலியாணம் செய்து கொண்டு ஏன் சுகமாயிருக்கக் கூடாது?

வதந்தியில் கொஞ்சம் உண்மை உண்டென்று எனக்குச் சீக்கிரத்தில் தெரிய வந்தது. ஒரு நாள் அந்தக் கறுப்பு மீசைக்காரன் - அவன் மோரக்கட்டையில் இடி விழ! - என்னிடம் வந்தான். "ஸார்! அப்புறம் என்மேல் தப்புச் சொல்லாதேங்கோ. யாரோ ஒரு வெள்ளாழப் பையன் வருகிறானாமே இங்கே, துரையப்பன் என்று - அவன் இனிமேல் இந்த ஊர்ப்பக்கம் தலைக் காட்டக் கூடாது. அப்படித் தலை காட்டினால், வெட்டி மடைவாயில் வைத்துவிடுவேன்!" என்றான். இந்த உருட்டலுக்கெல்லாம் நானா பயப்படுகிறவன்? துரையப்பனுடைய தகப்பனார் லேசுபட்டவரல்ல வென்றும், கவர்மெண்டே அவர் கைக்குள் அடக்கமென்றால், துரையப்பன் மேல் யாராவது கையை வைத்தாலும் போதும், அவன் கதி அதோகதிதான் என்றும் நான் திரும்பிப் பயமுறுத்தினேன். "எல்லாம் சீக்கிரம் பார்க்கலாம்!" என்று அக்கரையான் உறுமிக் கொண்டு போய்விட்டான்.

இன்னும் ஒரே ஒரு புதிய ஆளை உங்களுக்கு நான் தெரியப்படுத்தியாகவேண்டும். அவனுடைய பெயர் நாகரத்தினம். குடியானப் பையன். இவனைப் பற்றி எப்படியெல்லாம் என்னுடைய அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது என்பதை நினைக்கும் போது எனக்கே வெட்கமாயிருக்கிறது. அவனும் நாலாம் வகுப்பு வரையில் என் பள்ளிக்கூடத்தில் படித்தவன் தான். அப்புறம் விவசாயத்தில் அவன் தகப்பனுக்கு ஒத்தாசையாக வேலை செய்யத் தொடங்கினான். தகப்பன் இறந்த பிறகு அவன் விவசாயத்தை விட்டுவிட்டான். ஒரு வண்டியும் இரண்டு காளைகளும் வாங்கி, சத்த வண்டி ஓட்டத் தொடங்கினான். இந்தத் தொழிலில் அவன் உல்லாசமாகக் காலங் கழித்தானென்றே சொல்லவேண்டும். சில நாள் நான் பார்த்திருக்கிறேன்; அவன் சத்தத்துக்கு வண்டி அடித்து விட்டுத் திரும்பி வெறும் வண்டியைச் சாலையோடு ஓட்டிக் கொண்டு வருவான். அப்போதெல்லாம்

'மானா மருதையிலே - ஒரு
மருக் கொழுந்து கூடைக்காரி!'

என்று வாய்விட்டு உல்லாசமாகப் பாடுவான். அதைக் கேட்கும்போது, எனக்குக்கூட, இந்தப் பிள்ளைகளுடன் டானா, டாவன்னா என்று மாரடித்துக் கொண்டிருப்பதை விட்டு வண்டி ஓட்டத் தொடங்கலாமா என்று தோன்றும்.

இப்படிக் குஷாலாக இருந்தவனுக்கு மறுபடியும் படிப்பில் ருசியுண்டானது எனக்கு மிகவும் வியப்பளித்தது. ஒரு நாள் என்னிடம் வந்து, தான் படித்ததெல்லாம் மறந்து போகிறதென்றும், மறுபடியும் படிக்கவேண்டுமென்றும், இங்கிலீஷ் கற்றுக் கொள்ளக்கூட ஆசையாயிருக்கிறதென்றும் சொன்னான். இராத்திரியில் தினம் வந்து படிப்பதாகக் கூறினான். நான் மகிழ்ச்சியுடன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

குடியானப் பிள்ளைகளுக்குள்ளே நாகரத்தினத்தைப் போன்ற புத்திசாலியைக் காண்பது அரிது. சீக்கிரம் அவனுக்குப் படிப்பு வந்தது. அக்கறையுடனும் படித்தான். என்னிடம் அவனுக்கிருந்த பக்தி விசுவாசத்தையோ சொல்லி முடியாது. அப்படிப்பட்டவனிடம் எனக்கு மிகவும் நல்ல அபிப்பிராயம் இருந்ததில் வியப்பில்லையல்லவா? ஒருநாள் ராத்திரி அந்த நல்ல அபிப்பிராயம் அடியோடு மாறிப் போயிற்று. "இந்த விஷப் பாம்பையா இத்தனை நாளும் நல்லவன் என்று நினைத்திருந்தோம்?" என்று வியப்புண்டாயிற்று.


3

கதையில் முக்கியமான இடம் இப்போதுதான் வருகிறது. துரையப்பனையும், சந்திரமதியையும் பற்றிய வதந்தி ஏற்பட்டு ஒரு வருஷத்திற்கு மேலாகிவிட்டது. சங்கராந்தி விடுமுறைக்கு ஜமீன்தார் பிள்ளைகளும் துரையப்பனும் வந்திருந்த போது ஏதாவது நடக்குமென்று எதிர்பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. தை சென்று, மாசியும் பிறந்து விட்டது. சித்திரையில் சந்திரமதிக்கும் கறுப்பு மீசைக்காரனுக்கும் கல்யாணம் நடக்குமென்று கேள்விப்பட்டேன். இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று.

சில தினங்கள் மாலை நேரத்தில் நான் ஆற்றங்கரையில் உலாவச் செல்வதுண்டு. அன்று வழக்கம்போல் சென்றவன் வாய்க்கால் மதகின்மேல் உட்கார்ந்து சந்திரமதியைப் பற்றிய சிந்தனையில் வெகுநேரம் ஆழ்ந்திருந்துவிட்டேன். நன்றாக இருட்டிவிட்டது. நிலவு கிடையாது. "சரி, போகலாம்" என்று எண்ணியபோது, மதகுக்கடியில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. இருட்டிய பிறகு ஆற்று மணலோடு நடந்து யாரோ அங்கு வந்திருக்க வேண்டும். பேச்சில் 'வெள்ளாழப் பையன்', 'சந்திரமதி' என்ற சொற்கள் காதில் விழவே உற்றுக் கவனித்தேன். குரலிலிருந்து, பேசியவர்கள் நல்லானும், கறுப்பு மீசைக்காரனும், நாகரத்தினமும் என்று தெரிந்தது.

நல்லான், கறுப்பு மீசைக்காரன் இவர்களுடனே நாகரத்தினமும் இருந்ததுதான் எனக்கு வியப்பு அளித்தது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்க ஆவலுண்டாயிற்று. சமய சந்தர்ப்பங்களும் அதற்கு உதவி செய்தன. அவர்கள் பேசியதைக் கேட்கக் கேட்க எனக்குக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. "அட பாவிகளா! இப்படியா சூழ்ச்சி செய்கிறீர்கள்! வெளிப் பார்வைக்குச் சாதுவைப் போல் தோன்றிய இந்த நாகரத்தினத்தின் வஞ்ச நெஞ்சந்தான் என்ன!"

என்னை அறியாமல், "அடே படுபாவி!" என்ற வார்த்தைகள் என் வாயிலிருந்து வந்துவிட்டன. "யார் அங்கே?" என்று ஒரு குரல் கேட்டது. "ஏன், நான் தான்!" என்றேன். அடுத்த நிமிஷம் மூன்று பேரும் வந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அக்கரையான், தன் மடியில் செருகியிருந்த கொடுவாளைக் கையில் எடுத்துக் கொண்டான். "இதோ பாருங்க, ஸார்! இந்தக் கொடுவாளால் சிங்கப்பூரில் ஒன்பது பேரின் தலையைச் சீவியிருக்கிறேன் நான்; தெரியுமா?" என்றான். அவன் வாயிலிருந்து சாராய நாற்றம் குப்பென்று அடித்தது.

அந்தக் கும்மிருட்டில், நிர்மானுஷ்யமான இடத்தில் அவன் அப்படிப் பேசியது எனக்குப் பயத்தை உண்டாக்கிற்று. கை கால்கள் வெடவெடத்தன. மேலும் அவன் தொடர்ந்து, "நாங்கள் பேசியது உங்கள் காதில் விழுந்திருக்கும். அதை வேறு யாரிடமும் சொல்வதில்லையென்று உங்கள் தலைமேல் அடித்துச் சத்தியம் செய்யுங்கள். இல்லாவிட்டால் இங்கேயே உங்களை வெட்டி இந்த மதகின் அடியில் புதைத்து விடுவேன்" என்றான்.


4

வாழ்க்கையில் நம்முடைய குணத்தைச் சோதிக்கக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன; அந்த சந்தர்ப்பங்களில் தீரத்துடன் நடந்துகொள்ள நாம் தவறி விடுகிறோம். பிறகு வாழ்நாள் முழுவதும், "அடாடா! அப்படிச் செய்தோமா? இப்படிச் செய்தோமா" என்று சிந்தித்துக் கவலைப்படுகிறோம்.

கறுப்பு மீசைக்காரன் என்னைப் பயமுறுத்தியபோது, "போ! உன்னாலானதைச் செய்து கொள்; நான் வாக்குறுதி ஒன்றும் கொடுக்க மாட்டேன்" என்று நான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. "எனக்கென்ன அப்பா வந்தது? உங்கள் வினை. நான் தலையிடலை. நான் ஒருவரிடமும் சொல்லவில்லை" என்றேன். கறுப்பு மீசைக்காரன் அது போதாது என்றான். அவன் இஷ்டப்படி, "சத்தியமாய்" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொடுத்தேன்.

அவர்களுடைய சம்பாஷணை இன்னதென்பதை இங்கே நான் எழுதினாலும் சத்தியத்தை மீறியதாகுமென்று பயப்படுகிறேன். ஆதலின், பின்னால் நடந்த சம்பவங்களை மட்டும் கதையைப் போல் எழுதிச் சொல்கிறேன். அவற்றிலிருந்தே, மேற்படி சம்பாஷணையின் போக்கை நீங்கள் ஊகித்து அறிந்து கொள்ளலாம்.

"ஞான ரதம்" என்னும் நூலில் கந்தர்வலோகத்து 'மதனன் விழா'வைப் பற்றிப் படித்திருப்பீர்கள். எங்கள் ஊர் குடியானத் தெருவிலும் மாசி மாதத்துப் பௌர்ணமியன்று காமன் பண்டிகை கொண்டாடுவார்கள். பாரதியார் வர்ணித்திருக்கும் கந்தர்வலோக விழாவிலுள்ள சௌந்தரிய அற்புதம் ஒன்றும் இங்கே கிடையாது. 'நுண்வான்' கொண்டு அமைக்கப்பட்ட பதுமைகள், 'சைத்ரிக்' ஜீவன் பெற்ற சித்திரங்கள், மாடநிலத்து மண்டபங்கள், ஸுரிய காந்தக் கல்மேடைகள், அழகே உருவெடுத்த கந்தர்வ யுவர்கள், யுவதிகள், அவர்கள் இணையிணையாக வட்டங்களிட்டுக் கூத்தாடும் காட்சிகள் முதலியவற்றை எங்கள் ஊர் மதனன் விழாவில் பார்க்க முடியாது. ஆனால் கந்தர்வலோகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் பொதுவான அம்சம் ஒன்றுமட்டும் உண்டு. அது தான் பூரண சந்திரனின் மோகன நிலவு. குப்பைக் கூளங்கள் நிறைந்து தரித்திரம் தாண்டவமாடும் எங்கள் கிராமத்திலே கூட மாசி மாதத்துப் பௌர்ணமியன்று இரவு சௌந்தரிய தேவதை கொலுவீற்றிருப்பாள்.

இன்னொரு விதத்திலும், கந்தர்வலோக மதனன் விழாவுக்கும், எங்கள் ஊர் மன்மதசாமி உற்சவத்துக்கும் ஒற்றுமை உண்டு; அதாவது விழாவில் கலந்துகொள்வோர் காட்டும் உற்சாகத்தில், தொண்டு கிழவர் முதல் குஞ்சு குழந்தைகள் வரையில் இரவு முழுதும் மெய்மறந்து களிப்புக் கடலில் மூழ்கியிருப்பார்கள்.

தந்தத்தையொத்த வெண்ணிறத் தென்னங்குருத்துகளைக் கொண்டு சப்பரம் கட்டுவார்கள். அதில் சிவபெருமான் படம் ஒன்றை வைத்து ஊர்வலம் விடுவார்கள். சப்பரத்துக்கு எதிரில் மன்மதவேஷமும், ரதிவேஷமும் போட்டு இரண்டு பிள்ளைகளை நிறுத்தியிருப்பார்கள். மன்மதன் கையில் ஒரு வில்லை வைத்துக் கொண்டு பாணம் விடுவதுபோல் சைகை காட்டிக் கொண்டிருப்பான். ரதி, "வேண்டாம், வேண்டாம்" என்று சமிக்ஞை செய்து கொண்டிருப்பாள். இப்படி ஊர்வலம் விட்டு, இரவு பின் ஜாமத்தில் வெள்ளி முளைக்கும் நேரத்தில்தான் மன்மதசாமி கோவிலுக்கு வந்து சேர்வார்கள். பிறகு மன்மத தகனம் நடக்கும். பின்னர், எல்லாரும் கும்பலாய்க் குளத்திற்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டு வீடு திரும்புவார்கள்.

யாரோ ஒருவர் எழுதியிருந்தாரே, அதுபோல், சிவபெருமான் ஒரு சிறந்த ரஸிகர் என்பதில் சந்தேகமில்லை. பாருங்கள், அவர் மன்மதனுடைய உடலை எரித்துவிட்டு, அவனுடைய சக்தியை மட்டும் உலகத்தில் விட்டு வைத்திருக்கிறார்! இதற்குப் பதிலாக, அவர் மன்மதனுடைய உடலைச் சும்மா விட்டுவிட்டு, அவனுடைய சக்தியை அழித்திருந்தாரானால், உலகம் எவ்வளவு வெறுமையாய்ப் போயிருக்கும்? வாழ்க்கை எவ்வளவு விரஸமாயிருந்திருக்கும்?

மன்மத தகனம் நடைபெற்ற அன்றிரவிலேயே, வேறொரு பக்கம் அவனுடைய சக்தி வேலை செய்து கொண்டிருந்தது. எங்கள் கிராமத்திற்கு மேற்கே அரை மைல் தூரத்தில் பெரிய சாலை போகின்றது. அதற்குக் கிராமத்திலிருந்து கிளைப்பாதை வழியாகப் போக வேண்டும். கிளைப்பாதை பெரிய சாலையுடன் சேரும் இடத்தில் இருபுறமும் மரங்கள் அடர்த்தியாயிருக்கின்றன. அவ்விடத்தில் அன்று இரவு வெள்ளி முளைக்கும் நேரத்திலே ஒரு மோட்டார் வண்டி நின்று கொண்டிருந்தது. அதில் டிரைவருடைய ஆசனத்தில் துரையப்பன் உட்கார்ந்திருந்தான். கிளைப்பாதையை அவன் அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் கிளைப்பாதையில் இரண்டு உருவங்கள் தென்பட்டன. அவை அருகில் நெருங்கிய போது, சந்திரமதியும் நாகரத்தினமும் என்று தெரிய வந்தது. மேற்குத் திசையில் அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்த வெளிறிய சந்திரனின் ஒளி சந்திரமதியின் முகத்தில் படுங்கால், அவளுடைய இதழ்களில் புன்னகையும், கண்களில் நீர்த்துளியும் இருப்பது தெரிய வந்தது. அந்நீர்த்துளிகளில் சில சமயம் நேராகச் சந்திரக்கிரணங்கள் விழுந்தபோது, அவை ஒளி வீசும் முத்துக்கள் போல் பிரகாசித்தன.

மோட்டாரின் அருகில் அவர்கள் வந்ததும், துரையப்பன் சட்டென்று இறங்கிக் கதவைத் திறந்தான். சந்திரமதி பின் ஆசனத்திலும், நாகரத்தினம் துரையப்பனுக்குப் பக்கத்திலும் உட்கார்ந்தார்கள்; வண்டி கிளம்பிற்று; அதே சமயத்தில் தூரத்தில் நெருப்பின் ஜுவாலை கிளம்புவது தெரிந்தது; மன்மத தகனத்தின் கோலாகல சப்தம் வந்து கொண்டிருந்தது.


5

மோட்டார் வண்டி கிராம கிராமந்தரங்களையெல்லாம் கடந்து சென்று காலை சுமார் பத்து மணிக்குத் தஞ்சாவூரை நெருங்கிற்று. அப்போதெல்லாம் பட்டணங்களைச் சுற்றிலும் சுங்கச் சாவடிகள் உண்டு. மோட்டார் வண்டிக்காரர்கள் சில சமயம் ஏமாற்றி விடுகிறார்கள் என்பதற்காக, தூரத்தில் கார் சத்தம் கேட்கும்போதே, ஒரு நீளமான மூங்கிலை எடுத்துச் சாலையின் குறுக்கே மாட்டி விடுவார்கள். மோட்டார்கள் நின்றுதான் ஆக வேண்டும். துரையப்பனுடைய காரும் சுங்கம் கொடுப்பதற்காக நின்றது. அதே சமயத்தில், சுங்கச்சாவடிக்கு அருகிலிருந்த வெற்றிலை பாக்குக் கடையிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவர்கள் வண்டியின் அருகில் வந்து, கதவைத் திறந்து கொண்டு சந்திரமதியின் பக்கத்தில் உட்கார்ந்தார்கள். அவர்கள் வேறு யாருமில்லை - கறுப்பு மீசைக்காரனும், நல்லானும்தான்!

துரையப்பன் திகைத்துப் போனான். சுங்க ரசீது கிடைத்தது. மூங்கிலையும் எடுத்தாகிவிட்டது. ஆனால் துரையப்பன் வண்டியை ஓட்டவில்லை.

அக்கரையான் தன்னுடைய பொடி டப்பியை எடுத்து, ஓர் உறிஞ்சு உறிஞ்சினான். பிறகு, கையை உதறிக் கொண்டே, "ஏன் தம்பி தாமதம்? ஓட்டுங்க; எங்கே போகலாமென்று உத்தேசித்து வந்தீங்களோ, அந்த இடத்துக்கே ஓட்டுங்க" என்றான். இதற்குள் வேடிக்கை பார்க்க ஜனங்கள் வந்து கூடிவிட்டார்கள்.

அங்கு நிற்பதில் பயனில்லையெனக் கண்ட துரையப்பன் வண்டியை விட்டுக் கொண்டு சென்றான். பட்டணத்திற்குள் ஒரு சந்தில் நுழைந்து பூட்டியிருந்த ஒரு வீட்டுக்கெதிரில் நிறுத்தினான். நாகரத்தினத்திடம் சாவியைக் கொடுத்துத் திறக்கச் சொன்னான்.

எல்லாரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். துரையப்பன் மட்டும் தயங்கினான். கறுப்பு மீசைக்காரன் அவனுடைய கையைப் பிடித்து, "வாங்க தம்பி, வாங்க!" என்று கூறி இறக்கினான்.

உள்ளே போய் எல்லாரும் உட்கார்ந்த பிறகு, அக்கரையான், "தம்பி! இப்போது என்ன சொல்றீங்க?" என்று கேட்டான்.

"என்னத்தைச் சொல்கிறது? இந்தப் பெண் பட்டணம் பார்க்க வேண்டுமென்றாள்; அழைத்துக் கொண்டு வந்தேன். உங்களுக்கு இஷ்டமில்லையென்றால், திரும்பியழைத்துக் கொண்டு போங்கள்" என்றான்.

"அப்படியெல்லாம் கோபிக்க வேண்டாம், தம்பி! அப்புறம் நாட்டாமைக்காரர் வீட்டு எருமைக் கன்றுக் குட்டி புல்லுத் தின்னாது" என்றான் அக்கரையான். அதைக் கேட்ட நல்லான் கொல்லென்று சிரித்தான்.

இப்படிக் கொஞ்ச நேரம் அகடவிகடப் பேச்சு ஆன பிறகு, "அதெல்லாம் இருக்கட்டும், தம்பி! மேற்கொண்டு நடக்கிறதைப் பற்றிப் பேசுங்க" என்றான் அக்கரையான்.

"மேற்கொண்டு என்ன நடக்கிறது?"

"நீங்க சொல்லாவிட்டால், நான் சொல்கிறேன்; எப்படியும் நீங்க சந்திரமதியை இட்டுக் கொண்டு வந்து விட்டீங்க. மறுபடியும் நாங்க அவளை அழைத்துக்கிட்டுப் போகிறது நியாயமில்லை. எப்படியாவது அவள் சுகமாயிருந்தால் நாட்டாமைக்காரருக்குச் சந்தோஷந்தான். ஆனால் அந்தப் பெண்ணை வளர்க்கிறதற்கு அவர் ரொம்பப் பாடுபட்டிருக்கிறார். ஒரு மூவாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்துவிட்டுக் குசாலாக அழைத்துக் கொண்டு போங்க. அவ்வளவுதான் நாங்க சொல்கிறது" என்றான்.

துரையப்பன் கொஞ்ச நேரம் யோசனை செய்தான். "சரி, மூன்று நாள் எனக்கு அவகாசம் கொடுங்கள். பணம் கொண்டு வருகிறேன்" என்றான். இதற்கு அவர்கள் சம்மதிக்கவே, துரையப்பன் வீட்டை விட்டு வெளியேறி மோட்டாரைச் செலுத்திக் கொண்டு சென்றான். அவனுடைய பெட்டி மட்டும் இவர்களிடம் இருந்தது.

இதெல்லாம் திங்கட்கிழமை நடந்தது. செவ்வாய், புதன், வியாழன் வரையில் அந்த வீட்டிலேயே இருக்கத் தீர்மானித்திருந்தார்கள். அவர்களுடைய உத்தேசம் என்ன வென்பதை வாசகர்களே ஊகித்திருக்கலாம். துரையப்பன் பணங் கொண்டு வருவான், அதை வாங்கிக் கொண்டு அவனை நன்றாய் அடித்துப் போட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிவிடலாமென்று எண்ணியிருந்தார்கள். ஆனால் சந்திரமதி அதற்குக் குறுக்கே நின்றாள். துரையப்பன் போனதிலிருந்து அவள் கண்ணீர்விடத் தொடங்கி விட்டாள். நாளாக ஆக, அவளுடைய துக்கம் அதிகமாயிற்று. துரையப்பன் திரும்பி வரும்போது அவ்வீட்டில் தன்னால் இருக்க முடியாதென்றும், இருந்தால் கட்டாயம் அவனிடம் உண்மையைக் கூறி எச்சரிக்கும்படி இருக்கும் என்றும் கூறினாள். கடைசியாகப் புதன்கிழமையன்று அவளை ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். நல்லானுக்கு தனியாக இருந்து சமாளிக்கத் தைரியமில்லை. அக்கரையானைத் தனியே விட்டுவிட்டுப் போனால் மூவாயிரம் ரூபாயும் தன்னிடம் ரொக்கமாக வரவேண்டுமேயென்ற பயமும் அவனுக்கு இருந்தது. ஆகவே, நாகரத்தினத்துடன் சந்திரமதியைக் கூட்டி ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள்.

புதன்கிழமை காலையில் நாகரத்தினமும் சந்திரமதியும் திருநாகேசுவரத்துக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் ஸ்டேஷனில் ரயில் ஏறினார்கள். துரையப்பனை அடித்து ஹிம்ஸிக்கக் கூடாதென்று சந்திரமதி நூறு தடவை மன்றாடி நல்லானிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்; ஆனால் அக்கரையான் வாய் திறக்கவில்லை.

வியாழக்கிழமை பொழுது விடிந்ததிலிருந்து, துரையப்பன் வருவான், வருவான் என்று நல்லானும் கறுப்பு மீசைக்காரனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் வரவேயில்லை. "ஓகோ! பையன் ஏமாற்றி விட்டான்!" என்று அப்போதுதான் அவர்களுக்குத் தோன்றியது. உடனே இரண்டு பேருக்கும் ஒருவித பயம் உண்டாகிவிட்டது. ஒரே மூச்சாக ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயிலேறினார்கள்.


6

வாசகர்களுடைய மனத்தில் நெடு நேரமாயிருந்து வரும் சந்தேகத்தை இப்போது நிவர்த்தி செய்கிறேன். "ஏதோ அருகில் இருந்து பார்த்தது போல சொல்கிறீரே, இவ்வளவு விவரங்களும் உமக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்பீர்கள். கறுப்பு மீசைக்காரனும், நல்லானும் ஒன்று விடாமல் எனக்குச் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். சனிக்கிழமையன்று அவர்கள் என்னைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அப்படி என்னைத் தேடி வந்ததற்குக் காரணம், நாகரத்தினமும் சந்திரமதியும் அன்று வரையில் ஊருக்கு வந்து சேராததுதான்!

அதனால் இந்த இரண்டு பேரும் எவ்வளவு திடுக்கிட்டுப் போயிருக்க வேண்டும். எவ்வளவு கவலைக்குள்ளாகியிருக்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஆகையினாலேதான், அதுவரையில் என்னைத் திருணமாக மதித்திருந்த அக்கரையான் என்னைத் தேடிக்கொண்டு வந்தான்.

"ஸார்! மோசம் போய்விட்டது, ஸார்! நீங்கள் தான் யோசனை சொல்லவேண்டும், ஸார்!" என்றான். நல்லானோ பேசக்கூட முடியாதவனாய்க் கவலையில் மூழ்கியிருந்தான்.

அவர்கள் எல்லா விவரமும் சொன்ன பின்னர், "நாகரத்தினத்துக்கும் சந்திரமதிக்கும் என்னதான் நேர்ந்திருக்கலாமென்று உங்களுக்குத் தோன்றுகிறது?" என்று கேட்டேன். துரையப்பன் ஆள் பலத்துடன் வந்து வழியில் அவர்களைச் சந்தித்து, நாகரத்தினத்தைக் கொன்றுவிட்டு, சந்திரமதியைக் கொண்டு போயிருப்பானென்று அவர்கள் நினைத்தார்கள். உண்மையில் சந்திரமதியைப் பற்றி நான் அப்போது அவ்வளவு கவலைப்படவில்லை. நாகரத்தினத்தைப் பற்றித்தான் வருத்தப்பட்டேன். அந்தப் பையனும் இந்தத் துஷ்டர்களுடைய சதியாலோசனையில் சேர்ந்ததற்காக எனக்கு என்னதான் வருத்தம் இருந்த போதிலும் அவன் மேல் அபிமானமும் இருந்தது.

"ஏதோ என்னாலானதைப் பார்க்கிறேன்; நீங்கள் ஒன்றும் வெளியில் சொல்ல வேண்டாம். சந்திரமதி மாமன் ஊருக்குப் போயிருப்பதாகவே இருக்கட்டும்" என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டு, உடனே பக்கத்து ஊர் ஜமீந்தார் வீட்டுக்குப் போனேன். அவரிடம் பல விஷயங்களையும் பற்றிப் பேசிவிட்டு, "துரையப்பன் இப்போது எங்கே இருக்கிறான்? சௌக்கியமாயிருக்கிறானா?" என்று கேட்டேன்.

அவர், "அதை ஏன் கேட்கிறீர்கள். போங்கள்! அவனால் எங்களுக்கு ரொம்பத் தொல்லையாகி விட்டது. இங்கே காமன் பண்டிகையன்றைக்கு மோட்டாரில் வந்திருந்தான். மறுநாள் காலையில் பார்த்தால் ஆளைக் காணோம். சொல்லாமல் போய்விட்டான். பல இடங்களுக்கும் கடிதம் போட்டதில் இன்றுதான் தகவல் வந்தது. பையன் திருநெல்வேலியில் அவனுடைய மாமனார் வீட்டில் இருக்கிறானாம். உடம்பு ஏதோ அசௌக்கியமாம்" என்றார். கடிதத்தை எடுத்து நானே பார்த்தேன். திருநெல்வேலியில் புதன்கிழமைதான் அந்தக் கடிதம் தபாலில் போடப்பட்டிருந்தது.

எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. துரையப்பன் கறுப்பு மீசைக்காரனைக் கண்டு பயந்து போய்விட்டான். "உடும்பு வேண்டாம்; கையை விட்டால் போதும்" என்று எண்ணி இந்தப் பக்கத்திலேயே இல்லாமல் ஓடிவிட்டான். இன்னொரு விவரமும் அவனைப்பற்றி எனக்குந் தெரிந்தது. அவனுக்குக் கலியாணம் ஏற்கனவே ஆகியிருக்கிறதென்று. இது தெரியாமல் போனதனால் அல்லவா அவன் சந்திரமதியைத் தொடர்ந்து அலைவதுபற்றி நான் கோபங் கொள்வதற்குப் பதில் சந்தோஷமடைந்தேன்? என்ன மதியீனம்!

துரையப்பன் கதை தீர்ந்தது; அவன் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் நாகரத்தினமும், சந்திரமதியும் என்னவானார்கள்? அவர்களுக்கு வழியில் வேறு என்ன விபத்து நேர்ந்திருக்ககூடும்? ஐயோ, பாவம்? நல்ல குழந்தைகளாயிற்றே!

அப்புறம் சில தினங்கள் வரையில் எனக்கு வேறு எதிலும் புத்தி செல்லவில்லை. வீட்டிலும் வெளியிலும் ஆற்றங்கரையிலும் இலுப்பத் தோப்பிலும், எங்கே எதைப் பார்த்தாலும் சந்திரமதியின் ஞாபகமே வந்து கொண்டிருந்தது. உடன் நாகரத்தினத்தின் ஞாபகமும் சேர்ந்தே வந்தது. சிறிது சிறிதாக என் மனத்தில் ஒரு சந்தேகம் உதிக்கலாயிற்று. ஒரு வேளை... அப்படியும் இருக்குமோ? அவ்வளவு நெஞ்சழுத்தக்காரர்களா அவர்கள்?

எல்லாச் சந்தேகமும் அடுத்த சனிக்கிழமையன்று நீங்கிவிட்டது. அன்று எனக்குப் பின்வரும் கடிதம் வந்தது. என் மாணாக்கனாதலால் எழுத்துப் பிழைகளை மட்டும் நீக்கி விட்டுப் பிரசுரிக்கிறேன்:

"மகா-௱-௱-ஸ்ரீ ஸார் அவர்களுக்குத் தங்கள் அன்புள்ள மாணாக்கன் நாகரத்தினம் அநேக நமஸ்காரம்.

தங்களுக்கு நான் அதிகமான மனக் கஷ்டத்தைக் கொடுத்தேன். என்னைப் பற்றித் தாங்கள் விபரீதமான எண்ணங் கொள்ளவும் இடங்கொடுத்தேன். மன்னிக்க வேண்டும்.

நான் என்ன செய்யலாம்? சந்தர்ப்பங்கள் அப்படி நேர்ந்தன. என்னிடம் துரையப்பப் பிள்ளையும் உதவி கேட்டார்; கறுப்பு மீசைக்காரரும் உதவி கோரினார். அவர்களுக்கு இணங்கி நடப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. கடைசியில் பகவானுடைய அருளால் என்னுடைய மனோரதமே ஈடேறிற்று.

ஸ்வாமி! எனக்கும் சந்திரமதிக்கும் இன்று நேற்று நேசம் ஏற்படவில்லை. தங்கள் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்த காலத்திலிருந்து ஏற்பட்டு வளர்ந்த நேசம். ஆனால் அது கைகூடுமென்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. எப்படியெப்படியோ நடந்து கடைசியில் எங்கள் எண்ணம் நிறைவேறிற்று.

என்னுடைய சித்தப்பன் ரங்கூனில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் என்னை எத்தனையோ நாளாய் வரச்சொல்லிக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். நானோ சந்திரமதியைப் பிரிய மனமின்றிப் போகாமல் இருந்தேன். இப்போது இரண்டு பேரும் சேர்ந்து போகிறோம்.

நாட்டாண்மைக்காரரிடம், அவருக்கு எங்கள் பேரில் உள்ள கோபம் தணிந்து, கறுப்பு மீசைக்காரரும் ஊரை விட்டுப் போன பிறகு நாங்கள் திரும்பி வருவோமென்று தெரியப்படுத்தவும்.

உங்கள் ஆசீர்வாதத்தினால் தான் எங்களுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்ததாகச் சந்திரமதி தினம் நூறு தடவை சொல்கிறாள்.

இந்தக் கடிதம் கப்பலில் எழுதுகிறேன். ரங்கூனில் இறங்கியதும் தபாலில் சேர்ப்பேன். பிறகு, எங்களுடைய க்ஷேம லாபங்களைப் பற்றி அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன். தாங்களும் இந்த ஏழைகளை மறந்து விடாமல் அடிக்கடி கடிதம் எழுத வேணும்.

இப்படிக்குத்
தங்கள் ஊழியன்
நாகரத்தினம்."

மேற்படி கடிதம் எனக்கு எவ்வளவு சந்தோஷம் அளித்திருக்குமென்று வாசகர்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒரே ஒரு வருத்தந்தான்; என்னிடம் விஷயம் இப்படி என்று அந்தப் பயல் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக்கூடாதா? சொல்லியிருந்தால், பின்வரும் 'சந்திரமதி' பாட்டின் அடியை அவனுக்கு நான் கற்றுக் கொடுத்திருக்க மாட்டேனா?

"நீலக் கடலினிலே - நின்
நீண்டகுழல் தோன்றுதடி
கோல மதியினிலே - நின்
குளிர்ந்த முகம் காணுதடி
ஞால வெளியினிலே - நின்
ஞான ஒளி வீசுதடி
கால நடையினிலே - நின்
காதல் விளங்குதடி!"