அதுவாய் வாழ்தல்.

PM 3:52




ஆடாத விண்மேகக் கூத்துமாடி,
அசையாத விண்மீனைச் சேர்த்துமாடி,
வாடாத மின்பூக்கள் கோர்த்துமாடி,
வாழ்நாளுக் கிது இறுதி என்னுமாப்போல்
தேடாத இன்பநிலை தேடியாடி,
தெவிட்டாமல் ஓருணர்விற் கூடியாடி,
பாடாத பண்ணெல்லாம் பாடியாடி,
பற்றுநிலைவிட்டகலப் பாடினோமே!

மீறாத எல்லைவிதி எல்லாம்மீறி
மென் துகிலை விரிக்கின்ற வானமீதில்,
சாறாக ஒடுகிற ஒளியின் காமம்
சரித்திரத்தில் என்றுமென்றும் புதியவண்ணம்.
ஆறாத ரணம் ஆறும், அத்தமிக்கும்
ஆதித்தன் புலத்தழகை காண்தலுற்றால்.
தீராதகனவெல்லாம் திறந்துகொள்ளும்.
திமிரோடு ஒருகவிதை வடிவங்கொள்ளும்.

காற்றாடக் கனவாடக் கவிதையாட,
கனவுக்கும் நனவுக்கும் கலவியாட,
கீற்றாடக் கிளையாடக் கிளிகளாட,
கீதங்கள் தாளங்க ளோடுஆட,
ஆற்றோடு எழுந்தோயும் அலைகளாட,
அன்பென்ற ஒன்றோடு தழுவியாட,
நேற்றோடு இன்றோடு நாளையாட,
நான் என்னும் பேயோட, ஆடினோமே!

உள்ளமில்லை. எண்ணமில்லை. உள்ளேயேதும்
உடமையில்லை, கடமையில்லை. உரிமையேறி
வெள்ளமெனப் பாய்ந்துவரும் உறவு இல்லை.
வேகமுறத்தாக்குகிற கவலையில்லை.
அள்ள, அள்ள அமுதநிலை குறைவதில்லை.
அந்தி,பகல், இரவுநிலை தெரிவதில்லை.
முள்ளுமில்லை. பூவுமில்லை. ஓலமில்லை.
மெய்யுணர்வைப் புணர்தலுக்குக் காலமில்லை.

புல்நுனியில் புரளுகிற துளியில்வாழ்வோம்.
பூவிதழில் புலருகிற ஒளியில்வாழ்வோம்.
சொல்வடிவில் சுடருமொரு சுவையில்வாழ்வோம்.
சோகவிதை துளிர்த்தெழும்பும். அங்கும்வாழ்வோம்.
கொல் அழகு நதிவளைவில் நீந்திவாழ்வோம்
கூவியழும் குயில்களொடு பாடிவாழ்வோம்.
கல்மலையில் கார்முகில்கள் சூழவாழ்வோம்.
காலமென உங்களுடன் கூடிவாழ்வோம்.


:- ஆதித்தன்
06-07-2010