நூலின்றி அமையாதென் வாழ்வு - 3

AM 9:01


"பன்னெடுங்காலமாக நீங்கள் அழுதுபுலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும்போதெல்லாம் என் இதயம் வெடித்துச்சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப்பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா?"

என்று சொன்னது அம்பேத்கரின் உதடுகள் அல்ல! காலம்காலமாக ஆதிக்கவர்க்கத்தால் ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டு, கேவலப்படுத்தப்பட்டு
கீழ்சாதி எனப் பிற்படுத்தப்பட்ட அப்பாவி உயிர்களின் வேதனை, வெள்ளமாகப் பாய, அம்பேத்கரின் இதயம் சொன்ன வார்த்தைகள் இவை.

விகடன் பிரசுரத்தின் வாயிலாக, அஜயன்பாலா எழுதியிருக்கும் "அம்பேத்கர்" என்ற நூல் அவரின் வாழ்க்கையை உணர்ச்சிபடக்கூறுகிறது. அம்பேத்கரின் குழந்தைப்பருவத்திலும் இளமைப்பருவத்திலும் அவருக்கு, மேல்சாதிமக்களால்
நடந்த கொடுமைகளைப் படிக்கையில், சாதித்தீயின் கொடிய சுவாலைகள் கண்களைத் தீய்க்கின்றன.

கல்வியே சாதியின் கடுந்தளை உடைக்ககூடிய ஆயுதம் என்று எண்ணி, அம்பேத்கர் கல்விகற்ற உறுதியையும், அவர் வாங்கிக்குவித்த பட்டங்களையும் பார்க்கும் போது, வியப்பு என்னும் சுழல் நம்மை உள்ளிழுப்பது தவிர்க்க முடியாது.

உடம்பில் ஓடுவது ஒரே இரத்தமாக இருந்தாலும், துடிக்கும் நெஞ்சு ஒரேமாதிரித்துடித்தாலும், நூறு நூறு ஆண்டுகளாக, கீழ்மைப்படுத்தப்பட்டு, தாங்கள் கீழ்மையானவர்கள் என்று முழுமனதோடு நம்பவைக்கப்பட்டு அடிமைகளாய் வாழவைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின்
கண்ணீர்க்கடலில் எழுந்த சூரியனாக அம்பேத்கர் வந்தார்.
பறிபோன உரிமைகளை பிச்சையாகப் பெறமுடியாது. தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது. ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல!
என்ற பேராவேசத்தோடு, தன் இன மக்களுக்கு அவர்கள் கீழ்மையானவர்கள் அல்ல என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார். ஆரம்பத்தில் அவர்பேச்சைக்கேட்க யாருமே இல்லை. அவருடைய இனமக்களே அவரை ஏற்கவில்லை. அம்பேத்கரின் தோழர்கள் தளர்ந்து போனார்கள். ஆனால்
அம்பேத்கர் கொஞ்சமேனும் கலங்கவில்லை. மாறாக ஒருவார்த்தை சொன்னார்,

"அவர்கள் வேறு யாருமல்ல! நம் சொந்தச் சகோதரர்கள்தான். அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் காட்டி, சரியான பாதையில் நடத்திக் கூட்டிப்போகவேண்டும்"


குடிக்க நீர்மறுக்கப்பட்ட மகத் குளத்தை நோக்கி அவர்களை, அம்பேத்கர் நடத்திக்கூட்டிப்போனார். காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்த நீர் உரிமையை வென்றெடுத்தார். நீரைவிட மேலான நியாயத்தை வென்றெடுக்கக்கூடிய வாய்ப்பை அவருக்கு காலம் வழங்கியது. மேல்சாதிச்சமூகத்தால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விடியல் பிறக்கவேண்டுமாயின் அவர்களுக்கு இரட்டைவாக்குரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசோடு வாதாடினார். இக்கோரிக்கையை முற்றாக மறுத்த மகாத்மா காந்தி, சிறுபான்மை கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் போல தாழ்த்தப்பட்ட இந்துக்களைக் கருதுவது
இந்துசமுதாயத்தையே இரண்டாகப் பிரிப்பது போலாகும் என வாதிட்டார். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஒன்றாய் இருக்கவேண்டிய சகோதரர்களை, தாழ்த்தி தாமுயர்ந்துகொண்ட அந்தக்கணத்திலேயே இந்து சமுதாயம் இரண்டுபட்டுப் போய்விட்டது.

அரசு இரட்டைவாக்குரிமை அளிக்க முன்வந்தபோதும், மகாத்மாகாந்தியின் எரவாடாசிறை உண்ணாவிரதத்தால் அது தடுக்கப்பட்டது. அம்பேத்கர்மேல் பாய்ந்த அழுத்தங்களால் அவர் இரட்டைவாக்குரிமைக் கோரிக்கையை கைவிட நேர்ந்தது. காந்தியின் உயிரைக்காப்பதற்காக வேண்டாவெறுப்புடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் அம்பேத்கர்.
"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"


சுதந்திரத்தின் பின்பு, சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முழுச்சுதந்திரத்தை அவரால் வாங்கித்தர முடியாமல் போனாலும்,
காலம்காலமாக "நாங்கள் தாழ்த்தப்பட்ட பிறவிகள்" என்று அவர்களுக்கு இருந்த
மூடநம்பிக்கையை தகர்த்து ஒழித்தமை அவருடைய பெருவெற்றி.

அஜயன்பாலாவுக்கு உணர்ச்சி பெருக்கும் எழுத்து நன்கு கைவந்திருக்கிறது.
அருமையான ஒரு வார்த்தையால், அவர் அம்பேத்கரின் வரலாற்றை முடிக்கிறார். இன்றைக்கு சாதித்தாக்கத்தின் நிதர்சனத்தை அது காட்டுகிறது.

"எண்ணிக்கையில் 6லட்சமாக இருந்தாலும், அவை இரண்டாகப் பிளவுண்டு 12லட்சம் கிராமங்களாகவே இந்தியா இன்றும் காணப்படுவதுதான் மிக மோசமான வேதனை"

ஆதித்தன்
07-01-2009.

3 comments:

Nimal சொன்னது…

//
"மகாத்மாக்கள் வந்தார்கள்! மகாத்மாக்கள் மறைந்தார்கள்! ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்!"//

இந்த நிலை இதுவரையும் மாறாதது வேதனைக்குரியதே...!

புத்தக அறிமுகம் நன்றாக இருக்கிறது.

தமிழ் மதுரம் சொன்னது…

என்று தணியும் இந்தத் தீண்டத்தகாத விடயம்??? இன்னும் இது உள்ளூரில் அழியாது இருப்பதாய் கேள்வி....

ஆதித்தன் சொன்னது…

கருத்துக்களுக்கு நன்றி சகோதரர்களே!

கருத்துரையிடுக