இழந்து விட்டோம் ஒரு உன்னத படைப்பாளியை!!!

PM 2:47


தமிழ் நவீன எழுத்தாக்கத்தில் மாபெரும் புரட்சி செய்த
எழுத்தாளர் சுஜாதா [ரங்கராஜன்] அவர்கள், 27-02-2008 புதன்கிழமை இரவு9.30மணியளவில், தமிழ்கூறும் நல்லுலகை விட்டு
மறைந்தார்.

அறிவியற் கருத்துக்களை தமிழுக்குள் கொண்டு வருவதில்
தன்னையும் தன் எழுத்தையும் அர்ப்பணித்து உழைத்த அந்த
எழுத்துச்சிற்பியின் மறைவு, தமிழ்மொழிக்கும் தமிழர் சமுதாயத்திற்கும்
மறுக்க முடியாத மாபெரும் இழப்பு!

தமிழ் சமுதாயத்தின் நலனிலும் தமிழர்தம் தொழினுட்ப வளர்ச்சியிலும்
மிகுந்த அக்கறை கொண்ட சுஜாதா அவர்கள், ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிலும் ஈடுபாடு காட்டினார். ஈழத்தமிழர்களின் படைப்புக்களை
வெளிக்கொண்டு வருவதிலும் பங்களித்தார்.

புனைகதை,சிறுகதை,அறிவியற்கட்டுர

ைகள்,கவிதை,பண்டைத்தமிழிலக்கியம்,
திரைக்கதையாக்கம் என்று சுஜாதா தடம்பதித்த துறைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த அளவு பன்முகப்பட்ட அறிவைக்கொண்ட அவரின் சிம்மாசனம் இனி வெறுமையாகவே இருக்க பொகிறது.

நவீன எழுத்துச் சக்கரவர்த்திக்கு என் மனமார்ந்த அஞலிகள் உரித்தாகுக.

ஆதித்தன்.
பெங்களூர். 28-02-2008.

என். சொக்கன் - தமிழ் எழுத்தாளர்

PM 2:07



என். சொக்கன் (N. Chokkan, பிறப்பு: ஜனவரி 17, 1977; ஆத்தூர், சேலம்) என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.

தொண்ணூறுகளில் எழுதத் துவங்கிய என். சொக்கன் இதுவரை சுமார் நூறு சிறுகதைகளும் இரு நாவல்களும் எழுதியுள்ளார். வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நூல்கள் வடிவில் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார். இவரது நூல்கள் சில ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளி வந்துள்ளன.

சேலம் ஆத்தூரில் பிறந்து, வளர்ந்து, பெங்களூரில் வசிக்கும் என். சொக்கன் ஒரு மென்பொருள் நிபுணர் ஆவார். இணையத்தில் இவர் தொடங்கி, நடத்திவந்த 'தினம் ஒரு கவிதை' என்னும் மடலாடற்குழு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுவாகும்.

சிறுகதைத் தொகுப்புகள்

  • பச்சை பார்க்கர் பேனா
  • உன் நிலைக்கண்ணாடியில் என் முகம்
  • மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

வாழ்க்கை வரலாறுகள்

  • அம்பானி ஒரு வெற்றிக்கதை
  • பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  • அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  • லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  • சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  • திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  • ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  • நெப்போலியன்: போர்க்களப் புயல்
  • சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை
  • குஷ்வந்த் சிங்: வாழ்வெல்லாம் புன்னகை
  • அண்ணா(ந்து பார்!)
  • வீரப்பன்: வாழ்வும் வதமும்
  • வாத்து எலி வால்ட் டிஸ்னி
  • சார்லி சாப்ளின் கதை
  • நம்பர் 1: சாதனையாளர்களும் சாகசக்காரர்களும்

அரசியல்

  • மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  • அயோத்தி: நேற்றுவரை
  • கேஜிபி: அடி அல்லது அழி
  • Hamas: பயங்கரத்தின் முகவரி
  • CIA: அடாவடிக் கோட்டை

குழந்தைகளுக்கான படைப்புகள்

  • கம்ப்யூட்டர்
  • விண்வெளிப் பயணம்
  • டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  • அப்துல் கலாம்
  • இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  • பில் கேட்ஸ்
  • அறிஞர் அண்ணா
  • நெப்போலியன்

பிற

  • தேடு: கூகுளின் வெற்றிக்கதை
  • நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா
  • வல்லினம் மெல்லினம் இடையினம் (மென்பொருள் துறைபற்றிய பன்முகப் பதிவுகள்)
  • நலம் தரும் வைட்டமின்கள்

English

  • Hi Computer
  • Vicky In Space
  • Narayana Murthy: IT Guru (Translated By: Lakshmi Venkatraman)
  • Dhirubai Ambani: (Translated By: R Krishnan)

வெளியாகும் தொடர்கள்

  • கில்'லேடி'கள் ('பெண்ணே நீ' மாத இதழ்)
  • வெற்றிக்குச் சில புத்தகங்கள் ('குமுதம்' வார இதழ்)

என். சொக்கனின் பேட்டிகள் / அறிமுகங்கள்


- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிங்கை நகர் - பண்டைய ஈழத் தமிழர் தலைநகரம்

PM 8:47

வல்லிபுரத் திருமால் கோயில்

சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு.

சிங்கை நகர் பற்றிய கலாநிதி குணராசா பின்வருமாறு கூறுவார்: '... உக்கிரசிங்கன் புதிய தலைநகர் ஒன்றினைத் தன் இராச்சியத்தில் உருவாக்க விரும்பி வன்னிப் பிரதேசத்தில் திக் விஜயம் ஒன்றினை மேற்கொண்டான். அவன் வன்னி மார்க்கமாகச் செல்லுகையில் வன்னியர்கள் ஏழுபேரும் எதிர்கொண்டு வந்து வன்னி நாடுகளைத் திறை கொடுத்து ஆள உத்தரவு கேட்டார்கள். உக்கிரசிங்கன் அதற்குச் சம்மதித்தான். அப்பிரதேசத்தில் அவன் உருவாக்கிக் கொண்ட தலைநகர் சிங்கை நகராகும்... ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 59).

வன்னியர்கள் வாழ்ந்த பகுதி அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது. இதற்குரிய முக்கிய காரணங்களிலொன்று வன்னிச் சிற்றரசர்கள் பலதடவைகள் யாழ்மன்னர்களுட்பட ஏனைய மன்னர்களுக்கு அடங்காமல் வாழ்ந்தவர்கள் என்னும் கூற்று. சில சமயங்களில் யாழ்மன்னர்களுக்கெதிராகக் கலகங்களையும் தூண்டி விட்டுள்ளதை யாழ்ப்பாண வைபவமாலை (யாழ்ப்பாணவைபவமாலை, முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம் 37-40) விபரிக்கும். மேலும் பழைய வரலாற்று நூல்களில் பூநகரி, பல்லவராயன் கட்டு போன்ற வன்னிப் பகுதிகளை 'வெளிநாடு ' (யாழ்ப்பாணவைபவமாலை: பக்கம் 29) என்றுதான் அழைத்துள்ளார்கள். இவ்விதமான வெளிநாடொன்றிற்கு, அதிலும் அதிக அளவில் எதிர்ப்புச் சூழல் நிலவியதொரு இடத்துக்கு எதற்காக இராஜதானி கதிரைமலையிலிருந்து மாற்றப்பட்டது ?

'...சிங்கை நகர் என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்தின் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு.... சிங்கை நகர் என்ற பெயர், முதன் முதல் கதிரைமலையிலிருந்து தலைநகரை வேறிடத்திற்கு மாற்றிப் புதிய தலைநகர் ஒன்றினை உருவாக்கிய உக்கிரசிங்கனின் பெயரைத் தாங்கி சிங்க(ன்) நகர் என விளங்கியிருந்தது எனக் கொள்வதே சாலப் பொருத்தமானது. ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 59) என்பார் க.குணராசா. இதுபற்றிய கலாநிதி புஷ்பரட்ணத்தின் கருதுகோள் வேறானது. அவர் சோழரே சிங்கைநகரென்னும் பெயர் ஏற்படக் காரணமென்பார்: ' ...இப்பெயர் ஒற்றுமை கூடக் கலிங்கநாட்டுச் சிங்கபுரத்தொடர்பால் நேரடியாக வட இலங்கைக்கு வந்ததெனக் கூறுவதைவிடத் தமிழகத்துடனான தொடர்பால் வந்ததெனக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் தமிழகத்திலும் இப்பெயர் நீண்டகாலமாகப் புழக்கத்திலிருந்து வந்துள்ளது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் சந்திராதித்ய காலச் செப்பேடு சிங்கபுர என்ற இடத்தில் இவன் அமைத்த ஆலயம் பற்றிக் கூறுகிறது.... அதே போல வட இலங்கையை வெற்றி கொண்ட முதலாம் பராந்தக சோழன் கால இரு நகரங்கள் சிங்கபுரம், சிங்கபுரநாடு என்ற பெயரைப் பெற்றிருந்தன. அத்துடன் கொங்கு மண்டலத்திலுள்ள காங்கேயநாடு சோழர் ஆட்சியின்போது சிங்கை என்ற இன்னொரு பெயரையும் பெற்றிருத்தது. இச்சிங்கை நாட்டு வேளாளத் தலைவர்களுக்கு சோழர்கள் இட்ட மறுபெயர் சிங்கைப் பல்லவராயர் என்பதாகும். இவர்கள் சோழருடன் இணைந்து இலங்கை நாட்டுடனான அரசியலிலும், படையெடுப்புக்களிலும், வர்த்தகத்திலும் ஈடுபட்டதற்குப் பல சான்றுகள் உண்டு.. ' (நூல்: தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு - ப.புஷ்பரட்ணம்; பக்கம் 183)

முதலியார் இராசநாயகம் 'கோட்டகம ' கல்வெட்டில் 'பொங்கொலி நீர்ச் சிங்கை நகராரியன் ' எனக் குறிப்பிட்டிருப்பதைக் காரணம் காட்டி அதற்குரிய பிரதேசமாக வல்லிபுரமே அவ்விதமான துறைமுகப் பொலிவுள்ள நகரென்று கருதுவார். ஆனால் கலாநிதி க.குணராசாவோ இது பற்றிப் பின்வருமாறு கூறுவார்: '....யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது.... ' (நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 60) பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவது கோட்டகம கல்வெட்டு. இக்காலகட்டத்தில் கலாநிதி க.குணராசா குறிப்பிடுவது போல் யாழ்ப்பாணக் கடனீரேரி பொங்கு கடலாக இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது. இதற்குப் பல நூறு வருடங்களுக்கு முன்னரே மாந்தை கூடத் தன் முக்கியத்துவத்தினை இழந்து விட்டது. பொங்கு கடலாகவிருந்த யாழ்ப்பாணக் கடனீரேரி மிக விரைவாக அதன் இன்றைய நிலைக்கு மாறி விட்டதா ?

இவ்விடத்தில் முதலியார் இராசநாயகத்தின் இவ்விடயம் சம்பந்தமான கருதுகோள்களை ஆராய்வதும் பயனுள்ளதே. இவரது 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' பண்டைய யாழ்ப்பாணம் பற்றி விபரித்தபடியே தொடங்குவது குறிப்பிடத்தக்கது. அதில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள்ளது: 'இப்போது குடாநாடாக விருக்கும் யாழ்ப்பாணம், முன்னொரு காலத்தில் அதாவது கிறிஸ்துவுக்கு அநேக ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் என்னும் நாமங்களால் வழங்கபப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமைத் முல்லைத்தீவு, எருமைதீவு என்று பெயர்பெற்ற சிறுதீவும் ஆக இரு பிரிவாக இருத்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருந்தீவகம் பலதீவுகளாகப் பிரிக்கப்பட்டது. காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின்பகுதிகளேயாம். அவ்வாறே கிழக்கே ஒன்றாகவிருந்த சிறுதீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளியென்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. பண்ணைக்கடல், பூநகரிக்கடல், யானையிறவுக்கடல் என்னுங் களப்புக்கடல்கள் முன்னே வங்காளக்குடாக்கடலுடன் சேர்ந்து, ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன; அன்றியும் மேலைத்தேசங்களிலும், சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரவு செய்யுங் கப்பல்களுக்குப் பெரும் வழியாகவும், சோளகம் வாடைக்காற்றுக்கள் தொடங்குங் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு, அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன ' ( 'யாழ்ப்பாணச்சரித்திரம் '; பக்கம்1-2). இவ்விதமாகவிருந்த நிலை காலப்போக்கில் மாறி யாழ்ப்பாணக்குடாநாடு உருவாகியதற்குக் காரணங்களாக வங்காளக்குடாக்கடலின் அலைகளால் ஒதுக்கப்படும் மணற்றிரளினையும், வடக்கில் முருகைக்கற்பூச்சினால் உண்டாக்கப்படும் கற்பாறைகளையும், தெற்கிலிருந்து சோளகக்காற்றினால் கொண்டுவரப்படும் மணலினையும் சுட்டிக் காட்டுவார் முதலியார் இராசநாயகம்.

மேலும் இவரது ஆய்வின்படி கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து , கி.பி..மூன்றாம் நூற்றண்டுவரையில் மாதோட்டம் புகழ்மிக்க துறைமுகமாகவிருந்தது. கிரேக்கர், ரோமர் மற்றும் அராபியர்கள் எனப்பலர் மாதோட்டத்துறைமுகத்து தமது கீழைத்தேய வியாபாரநிமித்தம் வந்து போயினர். மன்னாரிலும் ,மாதோட்டத்திலுங் காணப்படும் பெருக்குமரங்கள் அராபியர்களால் கொண்டுவரப்பட்டவையே என்பது இவரது கருத்து. மாதோட்டம் பற்றி யாழ்ப்பான இராச்சியம் பின்வருமாறு விபரிக்கும்: 'அக்காலத்தில் இலங்கையின் பிரசித்த துறைமுகம் மாதோட்டம் என்னும் பெருந்துறையே. அதைப் பிரதான துறைமுகமாகக் கொண்டு வங்காளக்குடாக்கடலுக்கூடாய்க் கீழைத்தேசங்களுக்குப் போகும் மரக்கலங்களும், சீன தேசத்திலிருந்து வரும் மரக்கலங்களும் யானையிறவுக்கடலுக்கூடாகப் போக்குவரவு செய்வதுண்டு ' (யாழ்ப்பாணச்சரித்திரம் '; பக்கம் 19). அக்காலகட்டத்தில் நாவாந்துறை, பூநகரி மற்றும் கல்முனை ஆகியனவும் துறைமுகங்களாக விளங்கியதாகவும், நாவாந்துறையிலிருந்து வழுக்கியாற்றின் வழியே தலைநகராயிருந்த கதிரைமலைக்கு சங்கடம் என்னுந் தோணிகளில் வியாபாரப்பண்டங்கள் ஏற்றி செல்லப்பட்டனவென்றும், இதனாலேயே நாவாந்துறைக்கு சங்கடநாவாந்துறையென்னும் பெயர் இப்பொழுதும் வழங்கிவருவதாகவும் இராசநாயகம் அவர்கள் மேலும் கருதுவார். இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய மாதோட்டம் 'மண்ணேறிட்டிருந்தபடியால் துறை உபயோகம் அருகி, ஒன்பதாம் நூற்றாண்டளவில் கப்பல்கள் அத்துறைக்கு வருதல் முற்றாக ஒழிந்து, அதன் பின் முஸ்லீம்கள் வரத்தொடங்கிய காலத்தில் அவர்கள் நூல்களில் 'கலா 'வென்றழைக்கப்பட்ட ஊராத்துறை முக்கியத்துவம் பெற்றதென்று கருதுவார் இராசநாயகம் அவர்கள்.

சி.பத்மநாதனின் மாந்தை பற்றிய கருத்தும் இத்தகையதே. 'சோழராட்சிக்குப் பிற்பட்ட காலத்தில் மாந்தை நகரம் வீழ்ச்சியுற்றது. பதினோராம் நூற்றாண்டின்பின் மாந்தைத் துறைமுகத்திற்குத் தூரதேசங்களிலிருந்து ஆழ்கடல் வழிச் செல்லும் பெருங்கப்பல்கள் வந்திருந்தமைக்குச் சான்றுகளில்லை. ஆழ்கடல் வழியான வாணிபத்தில் ஒரு பிரதானதொடர்பு நிலையம் என்ற நிலையினை இழந்தமையால் மாந்தையில் நகர வாழ்க்கை சீரழிந்தது. கி.பி.1050 ஆம் ஆண்டிற்குப் பிறபட்ட சாசனங்களிலும் இலக்கியங்களிலும் மாந்தையிலுள்ள வணிகரைப்பற்றியோ அங்கிருந்த கட்டட அமைப்புகளைப்பற்றியோ குறிப்புக்கள் காணப்படவில்லை ' என்பார் அவர் (கட்டுரை: 'இலங்கை தமிழ வணிகக் கணங்களும் நகரஙக்ளும் '- சி.பத்மநாதன்; 'சிந்தனை ' ஆடி 1984 இதழிலில்). கி.மு காலத்திலிருந்தே வங்காளக்கடலினூடு தூர நாடுகளுக்குச் செல்லும் கப்பல்கள் யானையிறவுக் கடலினூடு மாந்தை துறைமுகம் வழியாகப் பயணிக்க முடிந்ததால் அந்நகர் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்தது. காலப்போக்கில் யானையிறவுக் கடல் மண்மேடிட்டுத் தூர்ந்ததால் அது தடைபடவே காலப்போக்கில் மாந்தை தன் முக்கியத்துவத்தினை இழந்தது.

இதேசமயம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இபின் பதூத்தா என்னும் முஸ்லீம் பயணி ஆரிய மன்னனை இலங்கையின் சுல்தானெனவும், பல கப்பல்களுடன் விளங்கிய கடற்படையினை அவன் வைத்திருந்தது பற்றியும் தெரிவித்திருக்கின்றான். இத்தகைய மன்னனின் சிங்கை நகர் அமைந்திருக்கக் கூடிய இடம் வல்லிபுரம் போன்றதொரு பகுதியாக இருந்திருப்பதற்கே அதிகமான சாத்தியங்களுள்ளன.

இத்தகையதொரு நிலைமையில் க.குணராசா அவர்கள் 'யாழ்ப்பாணக் கடனீரேரி அன்று பொங்கு கடலாகவே விளங்கியது ' என்று பொதுவாகக் கூறுவது பொருத்தமற்றதாகவே படுகிறது. கோட்டகம் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள 'பொங்கொலி நீர்சிங்கைநகர் ' பூநகரியினை அண்டிய வன்னி மாவட்டத்தில் இருப்பதை வலியுறுத்துவதற்காக அவ்விதம் கூறினார் போலும். அவர் கூறுவது உண்மையானால் கடந்த எட்டு நூற்றாண்டுகளுக்குள் பொங்கு கடலாக விளங்கிய யாழ்ப்பாணக் கடனீரேரி தூர்ந்து இன்றைய நிலையினை அடைந்திருக்க வேண்டும்.

மேலும் யாழ்பாடி பற்றிய யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றினைக் குறிப்பிடும் கலாநிதி க.குணராசா பின்வருமாறு குறிப்பிடுவார்: '...கண்தெரியாத ஒரு யாழ்ப்பாடிக்கு இசைக்குப் பரிசாகத் தனது இராச்சியத்திற்கு வடக்கே இருந்து ஒரு மணல் வெளியே தமிழ்மன்னன் ஒருவன் பரிசளித்ததாகக் கூறும் இச்சம்பவத்தின் உண்மை பொய் எவ்வளவு என்பதை ஆராய்வதைவிடுத்து மணல் வெளியாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணம் வடக்கேயிருந்தது என்றால், அதைப் பரிசாகத் தந்த மன்னன் இருந்தவிடம் தென்நிலப்பரப்பாக இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதே.. ' ((நூல்: 'யாழ்ப்பாண அரசபரம்பரை '- க.குணராசா; பக்கம் 62). இது பற்றிய கலாநிதி ப.புஷ்பரட்ணத்தின் கூற்றும் இத்தகையதே.

'... இதில் சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடர் எனக் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர் 15ஆம் நூற்றாண்டில் ஏற்படும்வரை இதும்மணற்றி, மணவை, மணற்றிடர் என அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்களுண்டு.... இதில் வடக்காகவுள்ள இப்பிராந்தியத்தை சிங்கையில் இருந்து ஆட்சிபுரிந்த மன்னன் யாழ்ப்பாணனுக்கு வழங்கினான் எனக் கூறுவதிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக சிங்கையிருந்தது தெரிகிறது. இங்கே யாழ்ப்பாணத்திற்குத் தெற்காக வன்னிப் பிராந்தியமே இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளத்தக்கது... ' (நூல்: 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்; பக்கம்: 168). உண்மையில் இவர்களிருவரும் கூறும் யாழ்ப்பாண வைபவமாலையில் '.... அரசன் அதைக்கேட்டு மிகுந்த சந்தோசம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் என்னும் நாட்டைக் கொடுத்தான்.. '(நூல்: 'யாழ்ப்பாண வைபவமாலை ' - மயில்வாகனப்புலவர், முதலியார் குலசபாநாதன் பதிப்பு; பக்கம்:24) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.. சிங்கை நகருக்கு வடக்கிலுள்ள நாடு மணற்றிடரென்று கூறப்படவில்லையே. 'இலங்கையின் வட திசையிலுள்ள மணற்றிடர் ' என்றுதானே கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வடதிசையில்தானே யாழ்ப்பாணமுள்ளது. இதிலென்ன ஆச்சரியம் ? சிங்கை நகரிலிருந்து ஆண்ட மன்னன் இலங்கையின் வடக்கிலுள்ள மணற்றிடரென்பதை ஏன் கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கை நகருக்கு வடக்கிலென்று வலிந்து பொருள்கண்டார்கள் ? இலங்கை என யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படுவதை கலாநிதி குணராசாவும், கலாநிதி புஷ்பரட்ணமும் சிங்கைநகரினைக் குறிப்பதாகக் கருதுகின்றார்களா ? ஏன் ?

இவற்றையெல்லாம் பார்க்கும்போது சிங்கைநகர் பூநகரிப்பகுதியில் இருந்திருக்கலாமென்று ப.புஷ்பரட்ணம் மற்றும் க.குணராசா ஆகியோர் கருதுவது காத்திரமான வாதமாகப் படவில்லை. மேலும் யாழ்பாடி கதையினை ஆதாரம் காட்டும் அவர்கள் அதில் யாழ்ப்பாணத்தை (மணற்றிடர்) சிங்கை நகருக்கு வடக்கிலுள்ளதொரு நகராக வலிந்து பொருள்கண்ட விதமும் எப்படியாவது தங்களது 'சிங்கை நகர் பூநகரிப் பகுதியிலிருந்துள்ளதென்ற ' கருத்தினை எப்படியாவது நிறைவேற்றவே அவர்கள் முனைந்துள்ளார்களோவென்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் ப.புஷ்பரட்ணம் அவர்கள் தனது சிங்கை நகர் பற்றிய கருத்தினை நிறுவுவதற்காக பூநகரிப்பகுதியில் கிடைக்கப்பெறும் கட்டடப்பகுதிகள், நாணயங்கள் மற்றும் இடப்பெயர்களையும் துணைக்கழைப்பார். ஆனால் இவையெல்லாம் அப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தினை வலுப்படுத்துகின்றனவேயல்லாமல் அங்கொரு இராஜதானி இருந்திருப்பதற்கான உறுதியான சான்றுகளாகக் கருதமுடியாது. வரலாற்றில் கி.மு.காலகட்டத்திலிருந்தே முக்கியத்துவம் பெற்றிருந்த பூநகரிப்பகுதியில் அரசர்கள், சிற்றரசர்கள், வணிகக்கணங்கள் மற்றும் படைத்தலைவர்களுக்கெல்லாம் மாளிகைகள், வியாபாரநிலையங்கள், மற்றும் அரசமுக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருந்திருப்பது இயல்பே. அத்தகைய பகுதியில் இதன் காரணமாகப் பெருமளவில் நாணயங்கள் கிடைக்கப்படுவதும், அரச முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்கள் நிலவுவதும் பெரிதான ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. இவற்றைக் கண்டுவிட்டு , விழுந்தடித்துக் கொண்டு, இதற்குக் காரணம் அங்கொரு அரசு இருந்ததுதான் என்று முடிவுக்கு வந்து விடுவது உறுதிமிக்க தர்க்கமாகப் படவில்லை. இதற்கு மாறாக கி.மு.காலத்திலிருந்தே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கிய பூநகரிப் பகுதி பின்னர் சோழர் காலத்திலும், யாழ்ப்பாண அரசின் காலத்திலும் அதன் கேந்திர, வர்த்தக, இராணுவரீதியான முக்கியத்துவத்தினை இழக்காமலிருந்துள்ளதையே மேற்படி கட்டடச் சிதைவுகளும், இடப்பெயர்களும் மற்றும் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களும் உறுதிப்படுத்துகின்றன என்று வேண்டுமானால் வாதிடலாம். அது பொருத்தமாகவும், வலுவானதாகவுமிருக்கும்.

உசாத்துணை நூல்களில் சில:

1. 'யாழ்ப்பாண வைபவமாலை '- மாதகல் மயில்வாகனப் புலவர் (முதலியார் குல. சபாநாதன் பதிப்பு)

2. 'யாழ்ப்பாணச் சரித்திரம் ' - முதலியார் செ.இராசநாயகம்

3. 'தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு '- ப.புஷ்பரட்ணம்

4. 'யாழ்ப்பாண அரச பரம்பரை ' - கலாநிதி க.குணராசா

5. 'இலங்கைத் தமிழ் வணிக கணங்களும் நகரங்களும் (கி.பி.1000 - 1250) -சி.பத்மநாதன் (ஆய்வுக் கட்டுரை; 'சிந்தனை ' ஆடி 1984 இதழ்).

6. 'இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை ' - கலாநிதி கா.இந்திரபாலா



நன்றி-திண்ணை

சிந்திக்க ஒரு நொடி -தமிழ் சாதியே

PM 6:59


"மனக்கதவம் தாள் திறவாய்....

வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்,

தானமும் தவமும் தாழ்ந்திடல் பொறுத்து,

ஞானமும் பொய்க்க நசிக்குமோர் சாதி"--- 'தமிழ் சாதி '--பாரதி

தமிழகத்திலிருந்து குடிபெயர்ந்து கர்நாடகத்துத் தலைநகரமான பெங்களூருக்கு வந்ததிலிருந்து தமிழோசைக்கான ஏக்கம் என்னை வாட்டுகிறது என்றால் அது ஒரு சம்பிரதாயமான வாக்கியமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடும். பெங்களூரின் மிக மோசமான சாலைகளும் போக்குவரத்து நெரிசல்களும் , அடிக்கடி எரிச்சலூட்டும் மின்சார வெட்டுகளும் என்னை சென்னை வாழ்வுக்குக்கூட ஏங்க வைக்கின்றன என்றால் சென்னைவாசிகள் அது மிகைப்படுத்தப்பட்ட 'தமிழ் நாட்டுப் ' பற்றாக நினைப்பார்கள்.

ஆனால் இங்கிருக்கும் ஒரு விஷயம் என்னை அசர வைக்கிறது. கன்னட திரைப்படங்கள் மட்டுமே திரை அரங்குகளில் காட்டப்படவேண்டும் என்ற கோஷம் இங்கு எழுந்தபோது இது என்ன சின்னத்தனம் என்று மாய்ந்திருக்கிறேன்.அது கர்நாடகத்தின் வேருடன் ஒட்டாத பண்பு என்று புரிய வைக்கும் நிகழ்ச்சிகள் இங்கு நிறையக் காணக்கிடைக்கின்றன.

தமிழ் இலக்கியவாதிகள் அறிவுஜீவிகள் எல்லோரும் ஒரு நடை கர்நாடகத்துக்கு வந்து இங்கு நடக்கும் இலக்கிய கூட்டங்களைப் பாருங்கள். திறந்த வெளியில் நின்று புதிய சுகந்த காற்றை சுவாசிப்பதுபோன்ற சுகானுபவத்தை பெறுவீர்கள். மொழி இனம் ஜாதி பேதங்கள் தலைத் தூக்காத இங்கிதமான இலக்கிய சூழலைக் கற்பனையாவது செய்து பாருங்கள். கர்நாடகத்துக்குப் பெருமை சேர்த்தவர் யாராக இருந்தாலும், அவரது தாய் மொழி வேறாக இருந்தாலும், ஆங்கிலத்தில் மட்டுமே புலமைக் கொண்டவராக இருந்தாலும் கர்நாடகத்தின் மகன் அல்லது மகள் என்று கொண்டாடும் கன்னடியரின், அரசு ஸ்தாபனங்களின் இயல்பு தமிழகம் உணராத பண்பு. கன்னடத்தில் எழுதிய

மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்ற தமிழர் மிகச் சிறந்த கன்னட மொழி படைப்பாளி என்று இன்றும் கர்நாடகத்தின் தலைமகனாகப் போற்றப்படுகிறார்.[மகா கவி பாரதியும் உ.வே.சுவாமிநாத ஐயரும் தமிழில் எழுதியவர்கள். அவர்கள் அசட்டுத்தனமாக அந்தணகுலத்தில்

பிறந்ததற்காக தமிழகம் அநேகமாக ஓரம் கட்டிவிட்டது இங்கு எவருக்கும் தெரியாது] ஆங்கிலப் பேராசிரியரும் கன்னட ஆங்கில இலக்கியத்தில் புலமையும் மிக்க ஸி.டி.நரஸைய்யா என்ற தெலுங்கர் அண்மையில் மறைந்தபோது கர்நாடகம் தனது ஒப்பற்ற மாணிக்கத்தை இழந்துவிட்டதாக அரசியல் தலைவர்களும் இலக்கிய வாதிகளும் துக்கம் தெரிவித்தார்கள். கர்நாடக ராஜ்யோத்சவ விருது அவருக்கு ஏற்கனவே அளித்து அரசு கெளரவித்திருக்கிறது. கொங்கிணி பேசும் கிரீஷ் கார்நாடும், மராட்டி பேசும் , ஆங்கிலத்தில் எழுதும் சசி தேஷ்பாண்டேயும் கர்நாடகத்தின் செல்லப் பிரஜைகள். அவர்களது புத்தக வெளியீடுகள் வாசிப்புகள் கூட்டங்களுக்குத் திரளாக வரும் எழுத்தாள வாசகக் கூட்டம் பரவசத்தை ஏற்படுத்துவது. எல்லாரும் எல்லாக் கூட்டங்களுக்கும் வருகிறார்கள். ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பேசுகிறார்கள். வி.எஸ். நைப்பால் சசி தேஷ்பாண்டேயின் எழுத்தை விமரிசித்தார் என்பதற்காகவே அவர்

சமீபத்தில் பெங்களூர் வந்தபோது அவரது கூட்டத்தை இலக்கியவாதிகள் மட்டுமல்ல விசுவாசமிக்க வாசகர்களும் புரக்கணித்தார்கள்! இந்த அரவணைக்கும் பண்பே அகில இந்திய அரங்கில் அவர்களது மதிப்பைக் கூட்டும் முக்கிய காரணியாகத் தோன்றுகிறது.

தில்லியில் ஞான பீடப் பரிசு ஆலோசனைக்குழுவில் இருந்த ஒரு அறிஞர் என்னிடம் ஒருமுறை தமிழ் எழுத்தாளர் வர்க்கத்தைப்பற்றி குறை சொன்னது நினைவுக்கு வருகிறது. ஞான பீட பரிசுக்குத் தமிழ் எழுத்தாளர்களின் பெயர்கள் சரியாகப் பரிந்துரைக்கப் படுவதில்லை என்றார். பரிந்துரை என்பது மற்றவர்களால் - அறிஞர்களால் , சக எழுத்தாளர்களால் செய்யப்படவேண்டியது.தமிழுக்கு வருபவை மிகக் குறைவாக, சிரத்தை இல்லாமல் எழுதப்பட்டவையாக, சில சமயங்களில் மோசமான ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பதை என்னிடம் காண்பித்தார். எழுத்தாளரின் எழுத்து இந்தியிலோ ஆங்கிலத்திலோ மற்ற மொழியிலோ கிடைக்காத பட்சத்தில், குறைந்தபட்சம் பரிந்துரையாளரின் வலுவான சிபாரிசு தேர்வுசெய்பவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக இருக்கும் என்றார். மலையாளத்திற்கும் கன்னடத்திற்கும் வந்திருந்த பரிந்துரைகள் மிக அசத்தலாக இருந்ததை நான் பார்த்தேன். சக எழுத்தாளர்கள் எழுதியிருந்த பாராட்டுகளும் அச்சில் வந்திருந்த விமரிசன பாராட்டுகளும் படைப்புகளின் மொழிபெயர்ப்புடன் மிகத் தரமாக நேர்த்தியாக தயாரிக்கப்பட்டிருந்தன.

தமிழுக்கு ஞானபீடப் பரிசு ஏன் கிடைக்கவில்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் நாம் அங்கலாய்ப்போம். வடக்கத்தியானின் சூழ்ச்சி என்று பொருமுவோம். இந்த ஆண்டு நமக்குக் கிடைத்தே விட்டது.

ஆனால் அதைக் கொண்டாடக்கூட நமக்குத்தெரியாது. நமக்கு அரசியல் பேசித்தான் பழக்கம். என்றோ கிடைத்திருக்கவேண்டிய விருது அது என்றாலும், விருது கொடுக்கப்பட்டதில் அரசியல் இல்லாவிட்டாலும் எழுத்தாளரின் அரசியல் நமக்கு முக்கியமாகிவிடும். தமிழுக்கு அவர் ஆற்றிய பணியைவிட அவரது எழுத்தில் இருக்கும் பரந்துபட்ட பார்வைக்கெல்லாம் நோக்கம் கற்பிக்கப்படும். கருப்பு அல்லது வெள்ளை என்கிற சமாச்சாரம் கூட இங்கு இல்லை. நமக்கு எல்லாமே கருப்பாகத்தெரிவதால் மற்ற வண்ணங்களுக்கு எண்ணங்களுக்கு இந்த அகண்ட பரப்பில் இடம் உண்டு என்கிற பிரக்ஞை நமக்கு இல்லை. அவர் திராவிட இயக்கத்தின் விமர்சகரா ?வட மொழியான சம்ஸ்க்ருதம் தனக்குப் பிடித்த மொழி என்கிறாரா ? அப்படியானால் அவர் தமிழ் விரோதி. அவர் பார்ப்பன வகுப்பினரை அல்லது இந்து மத ஸ்தாபனங்களை ஆதரிப்பதுபோல் எழுதியிருக்கிறாரா ? தமிழினத்துக்குச் செய்யும் துரோகமல்லவா அது! கிழிக்கவேண்டும் அவரை. முதலாவது பார்ப்பனரல்லாத ஒருவர் அப்படி எழுதக் காரணமென்ன ? உள் நோக்கம் நிச்சயமாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகமில்லை..

தமிழகத்தின் சாபக்கேடு இது. மொழிப்பற்று போய் அதை ஜாதி அரசியல் ஆக்கிரமித்து வெகு காலமாகிவிட்டது. செத்த பல்லியையே திரும்பத் திரும்ப அடிக்கும் சூரத்தனம் மட்டுமே இந்த அரசியலில் வெளிப்படுவது. எல்லா சன்னல்களையும் மூடிக்கொண்டு அறைக்குள் அடிக்கும் பேடித்தனம். பாப்பாப்பட்டியிலும்

கீரிப்பட்டியிலும் ஜனநாயக விரோத சக்திகள் ஆட்டிப்படைப்பதன் பின்னணியில் இருக்கும் காரணிகள் என்ன என்று இலக்கிய விமர்சகர்களும் தமிழ் பாதுகாவலர்களும் ஏன் பகிரங்கமாக விவாதிப்பதில்லை ?

தமிழர்களின் முக்கியத்துவங்கள் இடம் மாறித்தான் போய்விட்டன.


நன்றி-வாஸந்தி

மரபணு மாற்றப்பட்ட உணவும் , உலகமயமாதலும்!

AM 12:36

ஈராக் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் உலகமயமாதலுக்கான யுத்தம் தீவிரமாகிவிட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவை ஏற்றுமதி செய்யவேண்டி புஷ் 'பழைய ஐரோப்பாவை 'த் தாக்கத் தொடங்கிவிட்டார். ஆப்பிரிக்கா பட்டினிகிடக்கிறதாம். பல ஆப்பிரிக்க நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை உதவியாகக் கூடப் பெற மறுத்துவிட்டன. தமது தானிய உற்பத்தியை இந்த உணவு பாதித்து, விளைச்சலைக் குறைக்கும் என்று இந்த நாடுகள் அஞ்சுகின்றன. இதனால் ஆப்பிரிக்க உணவு தானியங்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது போகும். மறுபடியும் அமெரிக்கா ஐ நா வின் அணுகுமுறையை எதிர்க்கிறது. 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கார்டெக்னா விதிமுறைகள் என்று தானியப் பாதுகாப்பிற்காகக் கையொப்பம் இட்டுள்ளன. இந்த அணுகுமுறை மரபணு மாற்றப்பட்ட உணவு எப்படி கட்டுப்படுத்தப் படவேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

புஷ்ஷின் வர்த்தகப் பிரதிநிதி ராபர்ட் ஸோலிக் உலக வர்த்தக அமைப்புடன் ஒரு புகார் பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவுவகைகள் தெளிவாக உறையில் குறிப்பிட வேண்டும் என்று கொள்கை வைத்துள்ளன. இது கூடாது என்கிறது அமெரிக்கா. அனாவசியமான அச்சத்தை வளரும் நாடுகளிடையே ஐரோப்பா பரப்புகிறது என்பது ஸோலிக்கின் புகார். தான் உண்ணும் உணவில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் உரிமையை நுகர்வோருக்கு மறுக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கோரிக்கை.

ஜி-எட்டு என்ற முன்னேறிய நாடுகள் அமைப்பு ஃபிரான்ஸ் , ஏவியனில் சூன் முதல் தேதி நடந்த போது ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்புக் காட்டினர். சூன் 23-25-ல் சாக்ரமெண்டோவில் அமெரிக்க ஆதரவில் நடைபெறும் உயிர்த்தொழில் நுட்பம் பற்றிய மாபெரும் கண்காட்சியில் அமெரிக்கக் கம்பெனிகளின் நலனுக்காக பெரும் குரல் எழுப்பப்படும். இது கேன்கான் மெக்சிகோவில் நடக்கவிருக்கும் உலக வர்த்தக அமைப்புக்குத் தயார் செய்யும் கூட்டம் ஆகும். வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை லத்தீன் அமெரிக்காவிற்கும் நீட்டிக்க வேண்டிம் மியாமியில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கும் இது ஒத்திகை. சாக்ரமெண்டோவிற்கு 180 நாடுகளிலிருந்து வர்த்தக அமைச்சர்களும், விவசாய அமைச்சர்களும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். வெளியே , கம்பெனி மேலாண்மைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள் தம்மையும் கூட்டத்திற்கு அழைத்து கருத்துக் கேட்கவேண்டும் என்று கோருகிறார்கள்.

2002--ல் ரோமில் நடந்த ஐ நா கூட்டத்தில் 2015-க்குள் உலக ஏழைகள் எண்ணிக்கை பாதியாய்க் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அமெரிக்கா மீது விமர்சனம் வைக்கப்பட்டது. ஏழை நாடுகளுக்கு உதவித் தொகையை இருமடங்காக்க வேண்டும் என்று கோஃபி அன்னன் கேட்டுக் கொண்டார். அமெரிக்கா தன் மொத்த தேசிய உற்பத்தியில் 0.13 சதவீதம் தான் இதற்கு ஒதுக்கியுள்ளது. ஐரோப்பா இதைவிட இரு மடங்கு ஒதுக்கியுள்ளது. இதில்லாமல் புஷ் நிர்வாகம் உதவி பெறும் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, தனியார் மயமாக்கி, மரபணு மாற்றப்பட்ட உணவை அமெரிக்கக் கம்பெனிகளிடமிருந்தும், பெரு விவசாயிகளிடமிருந்தும் இறக்குமதி செய்ய வேண்டும் என்று கோருகிறது.

'நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் நாங்கள் சொல்வதே சரி ' என்று அமெரிக்க விவசாய அமைச்சர் ஆன் வெனிமான் கூறுகிறார். கடந்த பத்து வருடங்களாக உணவின் மேல் முத்திரையில்லாமல், சரியாய்ப் பரிசோதனை செய்யாமல் மரபணு மாற்றப்பட்ட உணவை சந்தையில் திணித்தது பற்றி இப்படிச் சொல்கிறார். இவர் கலிஃப்பொர்னியா விவசாய ஏஜென்சியில் வேலை பார்த்தவர். அப்போது வருடத்திற்கு 350 மரபணு திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி அளிக்க இருந்த பணியாளர் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். இப்போது இவர் தான் புஷ்ஷிற்கு உயிர்த்தொழில் நுட்ப வல்லுனர்.

சாக்ரமெண்டோ மாநாட்டிற்கு இவர் தான் பொறுப்பாளர். இவர் கால்ஜீன்(CALGENE) கம்பெனியின் முன்னாள் இயக்குநர். இந்தக் கம்பெனி மான்செண்டோவில் விழுங்கப்பட்டு இப்போது ஃபார்மசியா கம்பெனியின் ஓர் அங்கம். இது தான் முதன் முதல் மரபணு மாற்றப்பட்ட தக்காளியை - உணவைத் தயார் செய்தது. தக்காளியின் மெதுப்பகுதியைத் திடப்படுத்தி இதனால் கடையில் வெகுகாலம் வைத்திருக்க உதவுமாறு செய்தது. இதற்கு எதிராக ஜெரமி ரிஃப்கின் என்பவர் போராடினார். பொது மக்களின் கருத்து இதற்கு எதிராகத் திரண்டது. கேம்ப் பெல் என்ற சூப் கம்பெனி இந்த ரகத் தக்காளியை உபயோகிக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த தக்காளி விளைச்சல் கிடப்பில் போடப்பட்டது.

சோலிக்கும் சரி, இந்தக் கம்பெனிகளும் சரி, நுகர்வோர் தொழில்நுட்பத்தை வெறுப்பது தவறு என்கிறார்கள். இந்தக் கம்பெனிகளுக்காக வாதாடுபவர்கள் 'environmental technophobia ' சுற்றுச்சூழல்-தொழில்நுட்ப வெறுப்பு என்று இதற்குப் பெயர் சூட்டியுள்ளனர். மன்சாண்டோ போன்ற கம்பெனிகள் ஐரோப்பா உணவின் மீது சரியாக அடையாளப் படுத்தும் லேபில் ஒட்டுமாறு கேட்டுக் கொள்வதால் வருடத்திற்கு 300 மில்லியன் டாலர்கள் இழப்பதாய்ப் புகார் செய்கின்றன. மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் லேபில் ஒட்டுவதை ஏன் இந்தக் கம்பெனிகள் எதிர்க்க வேண்டும் என்று , தர்க்கரீதியாய்க் கேட்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். நுகர்வோர் உணவு பற்றி அறிந்து கொண்டு வாங்கவேண்டும் என்பதில் தவறென்ன இருக்க முடியும் ?

லேபில்களை எதிர்ப்பது போலவே வெனிமான் 'முன்னெச்சரிக்கை நடவடிக்கை 'யையும் எதிர்க்கிறார். நாடுகள் முன்னெச்சரிக்கையாக , கிருமிநாசினிகளையும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளையும் கட்டுப் படுத்தும் சுதந்திரம் கோருகின்றன. புஷ்ஷின் சுற்றுச் சூழல் அமைச்சராய் இருந்த கிரிஸ்டின் விட்மானும் இதை ஆதரித்தார். ஆனால் இப்போது புஷ் இதை எதிர்க்கிறார். கலிஃபோர்னியாவின் 'விதி 65 ' 1986-ல் சட்டமாக்கப் பட்டது. ஒரு ரசாயனப் பொருள் பாதுகாப்பானது என்று நிரூபிப்பதை கம்பெனிகளின் பொறுப்பு என்று இது சொல்கிறது.

கட்டுப் பாடற்ற உயிரியல் தொழில் நுட்பம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் : அட்லாண்டிக் சால்மன் மீன் ஐந்து மடங்காய் வளர்வதற்காக அவற்றிற்கு ஹார்மோன் அளிக்கப் படுகிறது. ஏற்கனவே உறையாமல் இருக்கும்படி, ஜீன்களை மீன்களில் உடலில் செலுத்தியாயிற்று. மீனவர்கள் இதனை கடுமையாய் எதிர்க்கின்றனர். பெரிதாக வளரும் சால்மன்கள் மீனவர்களின் மற்ற மீன்பிடிப்பை விழுங்கிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். சும்மா விளையாட்டுக்காக மீன்கள் மினுக்குமாறும், வண்ணம் மாறும்படியும் மரபணு மாற்றப்படுவதும் நடக்கிறது.

உணவுப் பாதுகாப்பில் அமெரிக்கா நல்லபடியாய் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. 3கோடி 60 லட்சம் அமெரிக்கர்கள் சரியான உணவு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்.

'உணவுக்கே முதலிடம் ' என்ற அமைப்பினைச் சார்ந்த அனுராத மித்தல் , சாக்ரமெண்டோ மாநாட்டை மிகக் கடுமையாய் விமர்சிக்கிறார். 1970-80-ல் நடந்த பசுமைப் புரட்சி உணவு உற்பத்தியை அதிகரித்திருக்கலாம், ஆனால் வறுமையைக் குறைக்கவில்லை. சீனா தவிர மற்ற நாடுகளில் வறுமை குறையவில்லை. சீனாவில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள் வறுமை குறைய ஒரு காரணம். இந்தியாவில் தம் சிறுநீரகத்தை விற்கும் வறி விவசாயிகள் இருக்கிறார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். பலர் கிரருமிநாசினியை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். பெரும் கம்பெனிகள் விவசாயப் புரட்சி செய்யும் என்றும் அவர் நம்பவில்லை. பஞ்சாப் ம்னானிலம் ஐரோப்பாவின் நாய் பூனைகளுக்கு உணவு பயிருடுகிறது. ஹரியானாவில் , உள்ளூர் பசி போக்க விவசாயம் செய்யாமல், ஏற்றுமதி செய்ய டூலிப் பூக்கள் பயிர் செய்யப்படுகின்றன.

சாக்ரமெண்டோவிற்கு எதிர்ப்பு தென் மண்டல் நாடுகளிலிருந்து வரும். உரயிரியல் தொழில்நுட்பம் இந்த நாடுகளைக் காப்பாற்றும் என்று பிரசாரம் செய்யப் படுகிறது.கட்டுப்பாடுகளைத் தளர்த்த இந்த நாடுகள் ஒப்புக் கொண்டாலும், மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஏற்றுக் கொண்டால் தான் எயிட்ஸ் உதவி என்று , நிபந்தனை இடுவதை எதிர்க்கும். உலக வர்த்தக அமைப்பின் மேலாண்மைக்கும் எதிர்ப்புக் கிளம்பும். முக்கியமாக லத்தீன் அமெரிக்காவில் எதிர்ப்பு தீவிரப்படும். இங்கே கடந்த பத்தாண்டுகளில் வேலையற்றோர் எண்ணிக்கை இரு மடங்காகிவிட்டது. பிரேசிலில் நிலமற்ற விவசாயிகள் தரிசு நிலங்களை ஆக்கிரமித்து சுயதாவையைப் பூர்த்தி செய்யப் பயிர் செய்யத் தொடங்கிவிட்டார்கள். பிரேசிலின் புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டிசில்வா இதற்கு மறைமுக ஆதரவு. இது மேலும் பரவக்கூடும்.

உலகின் எல்லா வர்த்தகம், வளர்ச்சி பற்றி அமெரிக்கா தன் கொள்கையைத் திணிப்பதற்கு ஒரு முன்னோடி எதிர்ப்புத்தான் , மரபணு மாற்றப்பட்ட உணவு பற்றிய கொள்கைக்குக் கிளம்பும் எதிர்ப்பு. தன்னுடைய நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அமெரிக்கா, 80 கோடி மக்கள் வாழும், 11 டிரில்லியன் (11000 பில்லியன்) உற்பத்தித் திறன் கொண்ட, 34 லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது நிபந்தனைகளைத் திணிக்க முடியுமா ? சாக்ரமெண்டோவிலும், கேன்கேன், மியாமியிலும் இது தான் பிரசினையாகும். சாம்ராஜ்யங்களை எப்படிச் சமாளிப்பது- தயாராவோம்.

(டாம் ஹேடன் கலிஃப்பொர்னியா மானிலத்தின் முன்னாள சட்ட சபை உறுப்பினர் (செனட்டர்) ஜபாடிஸ்டா ரீடர் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்)

நன்றி- திண்ணை