நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்

AM 1:08

"ஆப்பிரிக்க இலக்கியங்களுக்கோ, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களுக்கோ எங்கள் சமகாலத்து இலக்கியங்கள் குறைந்து போய்விடவில்லை. ஆனால் அவை உலக அளவுக்கு அறியப்படவில்லை. அங்கீகாரம் பெறவுமில்லை. எங்கள் கண்களுக்கு தெரியாத ஏதோ சூட்சுமமான விதிகளின் பிரகாரம் இலக்கியத்தரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. நிச்சயம் ஒருநாள் எங்கள் படைப்புகள் அறியப்படும்."
- சுந்தர ராமசாமி.

1] எதற்காக நம் இலக்கியங்கள் பிறமொழிகளில், மொழிபெயர்க்கப்பட வேண்டும்?
நாகரிகப் பழமையும்,
முற்காலத்திலேயே அடைந்திருந்த பண்பாட்டுச்செழுமையும்,
இலக்கியப் புலமையும், பொறியியற்திறனும், கட்டிடக்கலைவடிவமைப்பும்,
சிற்பப்பெருங்கலையில் சிறந்தோங்கிய தன்மையும்,
வணிகமேலாண்மையில் பழந்தின்று கொட்டைபோட்ட முதிர்ச்சியும், போர்க்கலையும், பரதமும், கூத்தும், இயற்கைவிவசாயமுறைகளும்,
தளராத வீரமும், அகலாத ஈரமும் இன்னும் பலபெருஞ்சிறப்புக்களையும்
தன்னகத்தே கொண்டு, மூவாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்துவரும் இனம் ஒன்று இருக்கிறது.அதன் இலக்கியங்கள் உலக மனித சமுதாயத்தின் பொக்கிஷம்.
என்பதனை பிறதேசத்தவர் உணர்ந்து, அவ் இலக்கியங்களைக் கற்று, அதன்படி ஒழுகி தத்தம் சந்ததியர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் படி செய்வதற்காக!

2]எந்தெந்த மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும்?
எந்தெந்த மொழிகள் உலகில் எழுதவும், பேசவும் பயன்படுகின்றனவோ,
அந்தந்த மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.

3]ஏற்கனவே பல தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதே? அவற்றால் எந்தப்பயனும் இல்லையா?
சேக்ஷ்பியரின் நூல்களை உலகம் முழுவதும் விழுந்து விழுந்து படிக்கிறது.
திருக்குறளை, சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருவாசகத்தை
படிப்பறிவுள்ள உலகமக்களில் எத்தனை பேர் அறிவார்கள்? பிறமொழிநூல்களைவிட நம் நூல்கள் தரம் குறைந்தனவா? ஒருபோதும்
இல்லை. எங்கள் நூல்கள் மொழிமாற்றம் செய்யப்படுகையில் எளியமொழிநடையில் கருத்துக்கள் வாசகருக்கு போய் சேரக்கூடிய வகையில் எழுதப்படாமை, அவற்றை பிரபல்யம் அடையாமல் செய்துவிட்டது.

4] நம் இலக்கியங்கள் சிறப்பாக மொழிமாற்றம் அடையும் வேகத்தைக்கூட்ட
இனி என்ன செய்ய வேண்டும்?
1.அரசாங்க உதவிகளை மட்டுமே நம்பியிருத்தலை அறவே நிறுத்தல்.

2.இலாப நோக்கம் அற்ற, அரசியல் மத சாதி சார்பு அற்ற தமிழ் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தல்.

3.நிபந்தனைகள் அற்ற, பிரதியுபகாரம் எதிர்பார்க்காத நிதியுதவிகளை
தேடிப் பெறுவதற்காக தனிப் பிரிவு ஆரம்பித்தல்.

4. பொருத்தமான, திறமையான, பல்மொழியறிவுமிக்க தமிழ் அறிஞர்களை சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

5. பொருத்தமான, திறமையான, குறித்த பிறமொழியில் சிறந்த அறிவும், சுவாரசியமான எழுத்துத் திறனும் உள்ள அறிஞர்களை, மொழி வாரியாக,
சிறந்த ஊதியம் அளித்து நிறுவனத்தில் இணைத்தல்.

6.நிறுவனத்தின் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தக் கூடிய வகையில்
பல குறுங்கால, நீண்டகாலதிட்டங்களைத் தீட்டி, விரைந்து அமுல்ப்படுத்தல்.

7.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை சிறந்த தரத்தில் அச்சிட்டு
இலாபம் இல்லாதவகையில் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடுதல்.

8."பிரிட்டிஷ் கவுன்சில்" எவ்வாறு உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தையும்
ஆங்கில இலக்கியத்தையும் பரப்புகின்றதோ, அதே போல், பல நாடுகளிலும்
கிளைகள் திறந்து, தமிழ்மொழியையும், தமிழிலக்கியங்களையும் பயிற்றுவி்த்தல். தமிழ் தெரிந்திருத்தல் ஒரு பெருமைக்குரிய விடயம் என்ற எண்ணக்கருத்தை பிறநாட்டவரிடம் ஏற்படுத்தல்.

9.மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை மின்னூலாக்கி, எவரும் இணையத்திலிருந்து இலகுவாக பதிவிற்க்கம் செய்யக்கூடியவாறு அமைத்தலுடன், வருங்காலத்தில் அறிவியற்புரட்சியால் வரும் எந்தவொரு உபயோகமான ஊடகங்களின் மூலமும் நம் தயாரிப்புக்கள் மற்றவரை இலகுவாக சென்றடையுமாறு செய்தல்.

மேற்கூறப்பட்ட தன்மைகளை உடைய தன்னார்வ தமிழ்த் தொண்டு நிறுவனங்கள், துளியாய்..., தூறலாய்..., மழையாய்..., பெருங்கடலாய்ப் பெருக வேண்டும் என்பதே தமிழுணர்வுள்ள தமிழர்களின் ஒரே பெருவிருப்பு!

-ஆதித்தன்

உருப்படாத தி.மு.க. விற்கான எதிர்க்கணைகள் சில!!

PM 11:11

1]பொழுதைப் போக்க இலவசத்தொலைக்காட்சி வழங்கும் கருணாநிதியால்,
ஏன் உயிரைக்காக்க இலவசத்தலைக்கவசம் வழங்க முடியவில்லை?

2]மரணதண்டனையை நீக்க கோரும் கனிமொழி, மதுரையில் சன்குழும தொழிலாளர்கள் அழகிரி ஆதரவாளர்களால் பெற்றோல்குண்டு வீசிக்கொல்லப்பட்டமைக்கு எதிராக, போர்க்கொடி உயர்த்தவில்லை?

3]தமிழ் எங்கள் மூச்சு என்று கூவும் கழகத்தின் தூண்களில் ஒருவரான
ஆற்காடு வீராசாமி, தன் பெயரின் ஆங்கிலஎழுத்துக்களில் வீராஸ்வாமி
என்று மாற்றியது ஏன்?

4]மத்திய அரசே கைவசம் உள்ளபோது, தமிழகத்திற்கு எவ்வளவோ முன்னேற்ற அடிக்கற்கள் நாட்டியிருக்கலாம். அதை விடுத்து கனிமொழிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவிகளை எடுத்தளிப்பதிலேயே குறியாக நிற்கின்ற கருணாநிதியைப் போய் யார் "நிர்வாகத்திறன் கொண்டவர்" என்று
புகழ்ந்தது?

5] தமிழ் நாட்டிலேயே தலையை பிய்த்துக்கொண்டு நடக்கின்ற மின்சாரப் பற்றாக்குறைச் சண்டைகளுக்கு மத்தியில், இலங்கைக்கு தனுஷ்கோடி-மன்னார் வழியாக மின்சாரம் வழங்குவதைப் பற்றி ஆற்காடு வீராசாமி வாயே திறக்காதது
ஏன்?

6] உலகத்தமிழர் தலைவராக கழகக் கண்மணிகள் மார்தட்டும் கருணாநிதியால்
பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் திறக்கப்பட முடியாத நிலையில் கன்னட வெறியர்களால் தடுக்கப்பட்டு வரும் வள்ளுவர் சிலையை ஏன் திறக்க முடியவில்லை?

7] பெரியார் சீடர் என்று தன்னைச்சொல்லும் கருணாநிதி எதற்காக பெண்தெய்வமாக போற்றப்படும் கண்ணகிக்கு சிலை வைத்தார்?
[சிலை வைத்தது தவறு இல்லை. பெரியார் சீடர் கடவுளுக்கு சிலை வைப்பது ஏன்?]

8] திருக்குறளை கசடறக் கற்று உரை எழுதி, "வாழும் வள்ளுவரே" என்று
தொண்டர்கள் அழைப்பதை அநுமதித்து வரும் கருணாநிதி,
திருக்குறளை வாழ்கையில் பெரும்பாலும் கடைப்பிடிக்காதது ஏன்?
[இந்த தலைப்பில் எழுதத்தொடங்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.]

9] கவிதை என்ற பேரில் முரசொலியில் கருணாநிதி எழுதும் சொற்கலவைகளுக்கும் கவித்தரத்திற்கும் சம்பந்தம் குறைவாயுள்ளமை பற்றி,
அவருடன் கலந்து உறவாடும் வைரமுத்து,பா.விஜய் போன்றவர்கள் வாய்திறக்காமைக்கு காரணம் என்ன?

10] வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டியில்
தனக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தமைக்கு காரணம் கலைஞர்தான் என்று கூறியுள்ளார். உண்மையான திறமையின் அடிப்படையில்
பல்கலைக்கழகத்திற்கு தேர்வாகாமல், சிபாரிசின் அடிப்படையில் மதன்கார்க்கிக்கு இடம் கிடைத்தது எவ்வாறு?

11] இவ்வாறு தன் தோழர் மகனுக்கு சிபாரிசு பண்ணி இடமளித்த கழகத்தலைவர்
கழகத்தின் அடிமட்டத்தொண்டர்களின் சந்ததிகளுக்கும் சிபாரிசு செய்து உதவலாமே? என்ற பகுத்தறிவு அப்பாவித் தொண்டர்களுக்கு வராமற் போனது ஏன்?

12] தன் உறவினருக்குமேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனக்கோரி லஞ்சதடுப்புபிரிவு அதிகாரியிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு
எதிராக ஆதாரங்கள் இருந்தும், வழக்கு தொடராதது ஏன்?

13] (பகுத்தறிவு இயக்கமாக வெளிக்காட்டிக்கொள்ளும்) "திராவிட முன்னேற்றக் கழகத்தின் எந்த உறுப்பினரும் சாமி கும்பிடக்கூடாது; கும்பிட்டால் கட்சியில் இருக்க கூடாது. கடவுள் பக்தி உள்ள எவரும் தி.முகவிற்கு வாக்களிக்கத் தெவையில்லை." என்று ஏன் வெளிப்படையாக கருணாநிதி தெரிவிக்கவில்லை?

14] வெறுமனே பேச்சில் கொல்லுவேன்,வெட்டுவேன் என்று கூறிய காடுவெட்டி குருவை, அதிகாலையில் கதவை உடைத்து கைது செய்த தி.மு.க.அடிமைக் காவல் அதிகாரிகள், மதுரையில் இரு தமிழர்களின் கொலைக்கு காரணமான
செயல்புயல் மு.க.அழகிரியின் வீட்டுக் கதவை ஏன் தடவக்கூட முடியவில்லை?

15] விடிதலைப்புலிகளின் தூண்களில் ஒருவரான சு.ப.தமிழ்ச்செல்வன் மரணத்திற்காக கவிதை எழுதிய கருணாநிதி, தமிழ்ச்செல்வனின் படுகொலையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை,
தம் பெயர்ப் பட்டியை கழற்றிவைத்துவிட்டு வந்த காவற்துறையினரைக்கொண்டு
அடித்துக் கலைப்பித்தது ஏன்?